ரெண்டாம் நாயகர்கள்
ரமேஷ் வைத்யா
ஒரு பெரிய பையன் சின்னவனை அடித்துக்கொண்டிருந்தான். பெரியவனின் சட்டையைப் பிடித்து அடிதடியை நிறுத்தினேன். பெரியவன் பக்கம்தான் நியாயம் போல. எனக்கு ஆன சேதாரம் இங்கே வேண்டியதில்லை. எப்போதும் அடி வாங்குகிற ஆளின் பக்கமே சாயும் மன அமைப்பு எனக்கு. அதனால்தான், சின்ன வயசிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆபீசில் போய் உட்கார்ந்திருப்பேனாக இருக்கும்.
சினிமாவிலும் எனது இந்த மனப்பான்மை பிரதிபலிக்கிறது. இதனால் ஏகப்பட்ட கேலிக்கும் இலக்காகியிருக்கிறேன். நினைவுச் சுரங்கத்தைத் தோண்டினால், கேவா கலரில் ‘கந்தன் கருணை’ படம் வெளியே சரிகிறது. படத்தின் ஹீரோவான கந்தனாக வந்தது சிவகுமார். கந்தனின் தளபதி கேரக்டருக்குத் தப்பான கேஸ்டிங் செய்துவிட்டார்கள்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன்தான் மேற்படி தளபதி வீரபாகு. இப்படி ஒரு செட் அப் ஆன பிற்பாடு ஹீரோ கந்தனுக்கு என்ன வேலை? எல்லாவற்றையும் வீரபாகு கணேசனே பார்த்துக்கொண்டார். அப்பாவி சிவகுமார் முருகனுக்காக என் மனம் ஆதங்கப்பட்டது. அதைச் சொல்லும்போது அப்போது சின்னப் பயல்களாக இருந்த என் நண்பர்கள், ‘ஜிவாஜி இல்லன்னா சிவகுமார் பின்னியிருப்பாராக்கும்’ என்று என்னைப் பின்னிவிட்டார்கள்.
வளர வளர வெவ்வேறு படங்கள் பார்க்கும்போதும், சூப்பர், மெகா, பவர், லிட்டில் ஸ்டார்களை ஊரே கொண்டாடிக்கொண்டிருக்க, அடுத்த ரோல் நடிக்கும் திறமையாளர்களை என் மனம் வட்டமிடுவது வாடிக்கையாகிவிட்டது.
அபரிமிதமான சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்த எம்கே தியாகராஜ பாகவதரின் காலத்திலேயே, அடுத்த ஸ்டாராக இருந்த பி.யு சின்னப்பா ஞாபகத்துக்கு வருகிறார். அந்தக் கால சினி ஹீரோத் தகுதிநிலையான கர்நாடக இசைப் புலமை எம்கேடிக்கு இருக்க, அத்தோடு, சிலம்பம், குஸ்தி, மற்போர் போன்ற திறமைகளில் சிறந்து விளங்கியவர் சின்னப்பா. நடிப்பும் இருந்ததுதான்.
எம்ஜிஆரைக் காட்டிலும் சிவாஜி, ரஜினியைத் தாண்டி கமல் என்று திறமை கூடியவர்கள் இரண்டாம் இடம் வகிப்பது என்பதல்ல இக்கட்டுரையின் சாரம். இது வேறோர் இக்கட்டு. பெயர்பெற்ற ஹீரோ படத்தில் இன்னொரு கதாபாத்திரம் வரும். கதை, ஹீரோயிசம் எல்லாம் தாண்டி, அது மனதில் நிற்கும். அந்தப் பாத்திரத்தில் நடித்தவர்கள் ஏன் ஹீரோவாக மாறவில்லை, அல்லது நிலைக்கவில்லை?
விஜயன் என்ற நடிகரை உங்கள் வயதைப் பொறுத்து நினைவிருக்கும். அவர் நடித்த எந்தப் படமாக இருந்தாலும் பார்த்துவிடுவது என்று பிரதிக்ஞையே எடுத்திருந்தேன். மிகுந்த வித்தியாசமான ஒரு திரையிருப்பை எனக்கு அறிமுகப்படுத்தியது விஜயனின் நடிப்பு. உதிரிப்பூக்களில் வக்கிரம் பிடித்த பாத்திரத்தை அவர் நிலைநிறுத்தியது நினைவில் வைத்திருப்பவர்கள்கூட, நிறம் மாறாத பூக்களில் ‘மெட்ராஸ் கேர்ள் மெட்ராஸ் கேர்ள்’ என்று சிகரெட் புகை வழிய அவர் சுயகழிவிரக்கத்தைச் சித்திரித்ததை மறந்திருக்கக் கூடும். நீண்ட காலம் அவ்வப்போது தலைகாட்டி திருப்பாச்சியில் போலீஸாக வந்து மறைந்தார்.தலைவாசல் படத்தில் அறிமுகமான விஜய் கொடுத்த ஈர்ப்பு வேறுவிதம். பலத்த நாடகப் பின்புலம் இருக்குமோ என்று எண்ணவைக்கும் அங்க அசைவுகள்.
விஜயனைப் போலவே மிடுக்கு. தேவதை படத்தில் ஒரு காட்சியில் மாந்திரீகமாக வருபவர் நிகழ்த்திக் காட்டிய மாயம் பெரிது. மாயக் கதைக்கு ஜால நடிப்பு. நகைச்சுவை நடிகர்கள் வேறு சுவையில் நடிப்பது பார்ப்பவருக்கு நகைச்சுவையையே கொடுத்த கதை கூட உண்டு. காமெடி ஆக்டர் என்று பரவலாக வரவேற்கப்பட்டவர். ஊமை விழிகளில் ஒரு சீரியஸான கட்டம். வில்லக் கூட்டம் நல்லோரைத் தொழிலாளரை அடித்துக் கிழித்திருக்கும். தொழிலாளர்கள் உரிமைக் குரல் எழுப்பிப் போராடுவார்கள். ‘தோல்வி நினையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா?’ என்று கொந்தளிப்போடு பாடுவார்கள். வாத்தியக் கருவிகள் ஓரிடத்தில் உறைய, ஒற்றை மனிதனாக செந்தில் ‘உரிமையை இழந்தோம் உடைமையை இழந்தோம் உணர்வை இழக்கலாமா…’ என்று குரலெடுத்துப் பாடுவார். அவர் உடலும் கிழிந்து குருதி கசிந்திருக்கும். பார்ப்போர் இரங்க வேண்டிய காட்சி. தியேட்டரே சிரிப்பில் அதிர்ந்தது. அதுதான் காமெடி நடிகர் தோற்கும் இடம்.
ஆனால், நகைச்சுவை நடிகர்களில் சாதாரண ஒருவரான ஜனகராஜ் குணச்சித்திரத்தில் மிளிர்ந்தது ஒரு வகை. ஒரு பாட்ஷாவில்கூட ஐட்டங்காரர்களில் ஒருவராக நின்றதை மறக்க மாட்டோம். இவர் பூமனம் என்ற படத்தில் ஏறத்தாழ நாயகப் பாத்திரத்தில் வந்தார். ரஷ்யக் கலாச்சார மையத்தில் சிறப்புக் காட்சி பார்த்தேன். படம் வந்ததா தெரியவில்லை. அந்தப் படத்தின் ஒரிஜினல் ஹீரோவாக வந்தவர் ராஜசேகர் என்பது நினைவில் இருக்கிறது. ஓரிரு படங்களில் ஹீரோவாக வந்த அவர் எனக்கென்னவோ மாமனார் கேரக்டருக்கே பிறந்த மாதிரித் தோன்றுகிறார். சரவணன் மீனாட்சி, தென்றல் போன்ற சீரியல்கள் செய்த குற்றமாக இருக்கலாம்.
உங்களுக்கு நடிகர் ரவி தெரியுமா? அந்த ராஜசேகர் ஹீரோவாக அறிமுகமான நிழல்கள் படத்திலேயே அறிமுகமான இன்னொவர்தான். நிழல்கள் ரவி என்றால் தெரிகிறது. என்னைக் கேலி செய்வார்கள் என்று சொன்னேனல்லவா… அதற்கு ஆதாரமானவராக இருந்தார். ரஜினி ரசிகர் மன்றம், கமல் நற்பணி மன்றங்களில் என்னை உறுப்பினர் சேர்க்கைக்காக அணுகியபோது ‘நான் நிழல்கள் ரவி ரசிகன்’ என்று சொன்னேன். கோபித்துக்கொண்டு போய்விட்டார்கள். எனக்குப் புரியவில்லை, நிழல்கள் படத்தை விடுங்கள், கேரக்டருக்கு ஏற்ற மாதிரி நடிப்பு.
அதன் பிறகு தொடர்ந்து பல்வேறு விதமாக வெளிப்பட்டார். மை டியர் மார்த்தாண்டனில் முற்றிலும் மாறுபட்ட நகைச்சுவைத் தோற்றத்தில் இவர் வந்தது எனக்கு இனிய ஆச்சரியம். அந்த ஆச்சரியம் பிற்பாடும் பலபடியாகத் தொடர்ந்தது. கோன் பனேகா க்ரோர்பதியில் வடக்குச் சிங்கத்துக்குத் தமிழ்க் குரல் கொடுத்தாரே, அடேங்கப்பா! நம் நெஞ்சை உருக்கிய படங்கள் உண்டு. கடைசியாக (எனக்கு) வடக்குப்பட்டி ராமசாமியில் மேஜர் சந்திரகாந்த்தாக அதிரடி ஆட்டம் காட்டியது வரை கோயிக் ஸ்ட்ராங். இதில் வேதனை என்னவென்றால் எப்பேர்க்கொத்த தமிழ் சினிமாக் கில்லாடியாக இருந்தாலும் இவர் நடித்த இருநூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் பத்துப் படங்களுக்கு மேல் பெயர் சொல்ல முடியாது. இது ஏன் இப்படி நடக்கிறது. ஆனால், நான் நிழல்கள் ரவி ரசிகன் என்பதில் மாற்றமில்லை.
நகைச்சுவை நடிகர்களிலேயே ஹீரோவாக ஆனவர்களில் முக்கியமானவராக தேங்காய் சீனிவாசனைச் சொல்லலாம். ஏன் முக்கியமானவர்? ரசிக மகா ஜனங்கள் அவர் அவர் ஹீரோவாக நடித்த படங்களில் அவரை ஏற்கவில்லை. ஆனால் ஜெய்கணேஷோ யாரோ ஹீரோவாக இருந்த அன்பே சங்கீதாவில் இவருக்கு சீரியஸான காதல் தோல்விப் பாடல் இருந்தது. ‘சின்னப் புறா ஒன்று எண்ணக் கனாவினில் வண்ணம் கெடாமல் வாழ்கின்றது’. காவியப் பாட்டு. தேங்காய் நடித்ததால் கெட்டுப்போய்விடவில்லை. தமிழ்த் திரைச் சமாச்சாரங்கள் தெரியாத வெளி மாநில ஆள்கள் இந்தப் பாட்டை மட்டும் பார்த்தால் தேங்காய் ஒரு ஹீரோ நடிகர் என்றுதான் நினைப்பார்கள். தில்லுமுல்லுவில் இரண்டு ரஜினிகாந்த்துகளுக்கு இணையான வரவேற்பைப் பெற்றார். கமலுக்கும் டஃப் கொடுத்த காட்சி ஒன்று நினைவுக்கு வருகிறது.
பாலசந்தர் படம். வறுமையின் நிறம் சிவப்பு. வேலையில்லாத் திண்டாட்டத்தால் ஹீரோ கமல் சிகைதிருத்தும் தொழிலைச் செய்வார். சிரைத்துக்கொள்ள வந்தவர் தேங்காய். கமலைப் பார்த்தால் சிகைத் தொழில் செய்பவர் மாதிரித் தெரியவில்லையே (அட, பொலிட்டிகல் கரெக்ட்னெஸ்ஸுக்கு முந்தைய காலம்ங்க) என்று யோசித்து ‘நீ என்ன ஜாதி?’ என்று கேட்பார். உடனே கொந்தளிக்கும் கமல், ‘வெள்ளை நிறத்தொரு பூனை எங்கள் வீட்டில் வளருது கண்டீர்’ என்று பாரதியார் கவிதையை ஆவேசமாகச் சொல்வார். பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த தேங்காய், ‘சரீ…’ என்பார். இதை வாசிக்கும்போது வருகிற எஃபெக்ட் போதாது. அந்த ‘சரீ’க்கு, ‘நான் என்ன கேட்டேன்… நீ என்னமோ கவிதை எல்லாம் சொல்றே. எழவு உனக்குக் கேள்வியே புரியலை போல, சரி கவிதை சொல்லி முடி.
என் கேள்விக்கு பதில் வருதா பாப்போம்’ என்கிற நீளமான வசனத்தை ரெண்டு எழுத்துகளில் சொல்லியிருப்பார். அந்தப் படத்தின் ஆதாரமான கருத்தையே சிதைக்கும் வில்லத்தனமான வசன வெளிப்பாடாக – பாலசந்தரின் ஒப்புதலின் பேரிலேயே – அது இருக்கும்.
வில்ல வசனர்களில் எனக்கு ஹீரோவாகவே இன்றும் தென்படுபவர் பிரகாஷ் ராஜ். இவர் ஹீரோவாக நடித்த காஞ்சிவரம் படத்தைப் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது. ஆனால், அபியும் நானும், அறை எண் கடவுள் போன்ற படங்களில் மாற்று ஏற்பாடுகளற்ற கச்சிதத்தோடு பொருந்திப் போயிருப்பார். ஆனாலும் ரியல் ஹீரோவாக எனக்கு இவர் பதிந்த படம் அந்தப்புரம். இந்தப் படத்தை நீங்கள் பார்த்தீர்களா தெரியாது. இதையும் ப்ரீமியரில்தான் பார்த்தேன். என்னைக் கவர்ந்த பிரகாஷ்ராஜ் தேசிய விருதுக் குழுவையும் கவர்ந்தது ஆச்சரியம். நேஷனல் அவார்டு வென்றார்.
காலம் மாற மாற பசுபதி, எம்மெஸ் பாஸ்கர்கூட என்னைக் கவர்ந்தார்கள். துல்லியமாத் தள்ளித் துலங்குபவர் விதார்த். மைனா படத்தில் ரொம்ப நேரம் வந்ததால் அறிமுகமானார். பிற்பாடு, பயணிகள் கவனிக்கவும்மால் இவர் என் ஆதர்ச நாயகர்களில் ஒருவர்.
காமெடியன்கள் வேறு வேலை செய்யும்போது விபத்து நிகழலாம் என்பதை மேலே சொன்னேன். ஹீரோவாக ஆவதே விபத்து என்பது வேறுவிஷயம். தமிழில் முதலெழுத்தாக வராத எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்ட நடிகரைப் பற்றி, சினிமா விநியோகஸ்தராக இருக்கும் என் நண்பர் சொன்ன விஷயம் ஒன்று. தன் சினிமா ஆசையை அவர் வெளிப்படுத்தியபோது தாயார் கலங்கிப்போய்விட்டாராம். ‘மகனே சினிமா உன்னைக் கெடுத்துவிடும். உனக்கு சினிமா வேண்டாமடா’ என்று பலவாறாக அழுதாராம். அப்போது அம்மாவிடம் நம்மாள் சத்தியம் செய்துகொடுத்தாராம், ‘சத்தியமா சினிமாவுல நடிக்க மாட்டேம்மா’. இன்றுவரை அவர் அந்த சத்தியத்தைக் காப்பாற்றுவதுதான் பெரிய விஷயம். ஆனாலும் என்ன, வரும் எல்லாப் படங்களிலும் இருக்கிறாரே அது போதாதா…
இப்போது நானும் நடிகனாகிவிட்டேன். எனக்கு ஒரு வாழ்நாள் லட்சியம் இருக்கிறது. என்றாவது ஒருநாள் ரமேஷ் திலக் போல் நானும் பெரிய நடிகன் ஆவேன்.
தொடரும்..











