பாட்டில் கொந்தளிக்கும் சொற்கள்
ரமேஷ் வைத்யா
இந்தியாவையும் ஒட்டிய நாடுகளையும் தவிர, சினிமாக்களில் பாட்டு இருக்கிறதா?ஆங்கிலப் படங்களில் பாட்டுப் பார்த்திருக்கிறேன். இசைக் குழு அல்லது நடனக் குழு பற்றிய கதையாக இருக்கும்.நம் படங்களில் திரைக்கதையிலேயே பாட்டு பங்கெடுக்கிறது. ஓராள் பல கஷ்டப்பட்டு முன்னுக்கு வருவதற்கான பலப்பல காட்சிகள் தேவைப்படும் எனில்,‘ஓ ஒரு தென்றல் புயலாகி வருதே’ போதும். பல வருடங்கள் காத்திருப்பு, ஏமாற்றம், காத்திருப்பு, பலனடைதல் என்றால்,
‘அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும் ஓடி நான் வந்து பார்ப்பேன் தென்றல் என் வாசல் தீண்டவேயில்லை கண்ணில் வெந்நீரை வார்ப்பேன்’ அந்த வேலையைச் செய்துவிடும். அரசாளும் சபைகளில் பாடலாசிரியர்கள் இடம்பெறுவது உலகில் வேறெங்கு நடந்திருக்கும்? கண்ணதாசன், வாலி, வைரமுத்து போன்ற பிரமுகப் பதவிகளை சினிமாப் பாட்டுகளே உருவாக்கின. சமூகத்தின் தத்துவாசிரியனாகக்கூட ஒரு பாடலாசிரியரால் விளங்க முடிந்தது.நான் சினிமா பார்க்கத் தொடங்கிய காலத்தில் விபரீதமே இருந்தது. திரைக்கதைக்குள்ளேயே பாடல் என்பதைத் தாண்டி, வசனத்தின் மேலேயே பாட்டு ஆதிக்கம் செய்துகொண்டிருந்தது.
ஓப்பன் பண்ணா, ஒருவன் கோயிலுக்குப் போகிறான். சாமியை மிரட்டும் வகையில்,
‘அம்மை உன்னை வணங்கினேன் – உந்தன்
அன்புக்கு அடியேன் இணங்கினேன்’
என்று பத்துக் கட்டையா பன்னண்டா என்று தெரியாத அளவில் ஒரு நாதநாமக்ரியாவைப் பாடுவார்.
தமிழ்ப் பாட்டுக்கு தெய்வமே இறங்கி வந்துவிடுகிறது. அது தன் வசனமாக,
‘என்ன சாப்பிட்டாய் – மகனே
என்ன சாப்பிட்டாய்?
அன்னை என்று என்னை
உரக்கக் கூப்பிட்டாய் – அதற்கூ…
என்ன சாப்பிட்டாய்?’
என்று நாடகப்ரியாவில் பாடும். ஒரே கூத்தாக இருக்கும்.
நான்கூட, இந்தக் கட்டுரை எழுதும் ஃப்ளோவில் கொஞ்சம் எளிய தமிழில் எழுதிவிட்டேன்.
தமிழ்ப் படம் பார்க்கையில் கவர்ந்த பாட்டுகள் நான் கேட்டறியாத மொழியில் இருந்தன.
‘குடில குந்தளம் மதுர முரளீ ரவ லோலம்
குவலய தள நீலம் கோடி மதன லாவண்யம்
கோபி புண்யம் பஜாமி கோபாலம்’ என்று இருந்தது. சொற்கள் எனக்குச் சலாமியாவாக இருந்தாலும் இசை என் செவி மடலில் தேன் பிலிற்றியதென்னவோ மறுக்க முடியாது. பொருளே புரியாமல் இன்றும்,
‘கருணாசாகர கமலாநாயக கனகாம்பரதாரி கோபாலா’ என்று முணுமுணுக்க வைப்பது இசையின் மகிமை.
அந்தக் காலப்பாடலாசிரியர்களில் ஒற்றை அரசராக இருந்தவர் பாபநாசம் சிவன் என்பது தாங்கள் அறிந்ததே. சினிமாவுக்குப் பாட்டெழுத வேண்டும் என்று வந்தவரல்லர். கோயில் கோயிலாகப் போய் பக்தி மார்க்கத்தில் பாடிக்கொண்டிருப்பார் என்று கேள்வி. இன்றைக்கும் கர்நாடகக் கச்சேரி மேடைகளில் தவிர்க்க முடியாத வாக்கேயகாரராக இருக்கிறார். பக்தியும் பக்கத்து மாநில வாசமுமாகச் சேர்ந்து இவரது மொழியே புதுவிதமாக இருந்திருக்க வேண்டும். தவிர, அந்தக் காலத்தில் எழுத்துலகிலேயேகூட சம்ஸ்க்ருதம் கலந்து எழுதும் மணிப்ரவாள நடை செல்வாக்குப் பெற்றிருந்தது. அது பாபநாசத்தாரின் சினிமா சங்கீதத்திலும் எதிரொலித்தது.
‘விளங்கும் தூய சற்ஜன சங்கம்
விரும்பக்கூடாதே துஷ்டர் ப்ரசங்கம்’ என்றெல்லாம் வார்த்தைகள் வரும் பாட்டிலேயே,
‘கனவெனும் வாழ்வில் கலங்கி வாடாதே
காதலை மாதரைப் புகழ்ந்து பாடாதே
காம மோக மத வைரிகள் வசமாய்
கர்ம வினை சூழுலக வாதனையில்
தடுமாறும் மனதோடு துயருறாமல்
நிரந்தரமும் மகிழ்ந்து பரசுகம் பெறவும்’
என்றும், மனதினின்றும் நீங்காச் சொற்களை எழுதினார். எல்லாமே அக்காலத்தில் திரைப்படங்களின் வெற்றிக்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும். பவளக்கொடி படத்தில் அறுபது பாட்டுகள் என்று எங்கோ பார்த்தேன். சும்மாவா அப்படி வைத்திருப்பார்கள்? பாடல்களின் ‘ரீச்’ படங்களின் வெற்றி.
அந்தப் பாடல்களால் இசையமைப்பாளர்களைக் காட்டிலும் பாடலாசிரியர்களே நம் சமூகத்தில் கூடுதல் பிரபலம் பெற்றதைப் புரிந்துகொள்ள முடிகிறது. கதாநாயகர்களுக்கு அடுத்தபடியாக திரையின் பின்னணியில் செயல்பட்டோரில் பாடலாசிரியர்களே ஒரு பரம்பரையாக மக்கள் மத்தியில் சிலாகிக்கப்பட்டார்கள். பட்டுக்கோட்டையின், கண்ணதாசனின் பாடல்கள் படத்துக்குக் குறைந்தபட்ச உத்தரவாதம் நல்கின.
கவிஞர் வரிசையில் உடுமலை நாராயண கவி, தஞ்சை ராமையாதாஸ் என்று பெரும் பெயர்கள் பதியத் தொடங்கின.
தனித்த ஒளியோடு வந்த பெயர் கண்ணதாசன். எண்ணிக்கையில் அவருக்கு முன் அவரைத் தொட்டவர்கள் எவருமிலர் என்பது அவரது பெருமையல்ல. அத்தனை பாட்டுகளும் தரத்தில் தனக்குச் சமமின்றித் திகழ்ந்தன என்பதே பெருமை. இந்த மாதம் கூட நம் மாநிலத்தில் எங்கேனும் கண்ணதாசன் பாடல்களுக்கு வியாக்கியானம் கொடுக்கும் ஒரு கூட்டம் ஏற்பாடாகியிருக்கும்.
திரைப்பாடற் சொற்கள் காதைத் தொட்ட மாத்திரத்தில் புரியவேண்டும் என்கிற தங்கச் சட்டம் உண்டு. இதை எளிமை என்று சொல்லலாம். எளிமையின் இறைவனாக இருந்தார் கண்ணதாசன். எந்த வரியையும் எடுத்துக் காட்ட வேண்டாம் என்பதே என் உத்தேசம். ‘ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை; அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை; மனிதனம்மா மயங்குகிறேன்; தவற்றுக்குத் துணிந்த மனிதன் அழுவதில்லையே; தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே’ என்பதையும், ‘ஏற்றிவிட்ட ஏணி ஒன்று நின்றபடி நிற்கிறது; ஏறிவிட்ட ஒரு மனமோ வேறு வழி நடக்கிறது; ஏற்றியது குற்றமில்லை; ஏணியிலும் பாவமில்லை; மாற்றியது கடவுள் எனும் மாயக்காரன் லீலையம்மா’ போன்ற சொற்கள் உத்தேசத்தை உடைக்காமல் என்ன செய்யும்?
அவரால் உந்துதல் பெற்றுப் போட்டிக் கடை போட்டதாகச் சொல்லும் வாலியும் ஃப்ளோ மன்னர்தான். ‘காதல் என்ற சொல்லை நானும் சொல்லவில்லை. சொல்ல வந்த நேரம் காதல் எந்தன் கையில் இல்லை.’
இது போன்ற பாடலாசிரியர்கள், இயக்குநரின் வேலையைக் குறைத்தார்கள். சாதாரணப் படத்தில் பாடல் காட்சிகள் ரசிக்கும்படி இருந்தால் அதில் பாடலாசிரியர்களின் பங்கு இருப்பதாகச் சந்தேகிக்கலாம். ‘கொஞ்சம் விஷுவலான வார்த்தைகளைப் போட்ருங்க கவிஞரே’ என்பார்கள்.
இப்போது பாடலாசிரியர்களிடம் இயக்குநர்கள் மிகச் சிக்கனமாக பாடல் சூழ்நிலையைச் சொல்கிறார்கள். ‘நல்ல பெப்பியான லவ் சாங். யூத்தான லைன்ஸா இருக்கலாம். ட்ரெண்டுல இருக்குற வார்த்தைகளைப் போடுங்க. புது வார்த்தையா இருக்கட்டும். புரியாமப் போயிறக் கூடாது’ என்பதே சிச்சுவேஷன் விவரிப்பாக இருக்கிறது. கதை கசிந்துவிடும் என்று கருதுகிறார்கள் போலும்.
முன்பு, மொத்தக் கதையையும் சொல்வார்கள் என்று யூகிக்க இடமிருக்கிறது. அதனால்தான், ரெண்டரை மணி நேரக் கதையை, ‘காதலிலே தோல்வியுற்றாள் கன்னியொருத்தி; கலங்குகிறாள் அவனை நெஞ்சில் நிறுத்தி’ என்று வரிகளில் சொல்லிவிட்டதாக பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தைப் புகழ்வார்கள்.
அவர் ஓர் அதிசயம். குறைந்த எண்ணிக்கையிலான பாடல்கள். அத்தனையும் ஹிட். கடவுள் நம்பிக்கை இல்லாதவராக இருந்தும் சாமியின் முன்னால் நின்று ஹீரோ பாடும் ஒரு பாடலை ‘நேக்’காக எழுதியிருப்பார். இறைவனிடம் வேண்டுதலாக, ‘எளிமை அகல வரம் தா’ என்று கவித்துவக் கோரிக்கை வைத்திருப்பார்.
அப்போதைய பாடல்கள் மொழியைக் கற்றுக்கொடுத்தன. ஏதேனும் சந்தேகமெனில், ‘அந்தப் பாட்டுலயே வருது பாரு’ என்று அதைத் தீர்த்துக்கொள்ளலாம். புலவருக்குப் படித்தவர்கள் எழுதிய காலம். அதற்காக தாங்கள் படித்ததைக் கக்குவதில்லை. கதையை ஒட்டியே எழுதப்பட்டவை அந்தப் பாடல்கள். சரியாகச் சொல்வதானால், சம்பந்தப்பட்ட தருணத்தின் உணர்ச்சியைக் கூட்ட ஒத்தாசை செய்பவை. தொடர்புடைய பாத்திரங்களின் மொழியிலேயே பேசுபவை.
காலம் மாறுகையில் தமிழ்ப் படங்களின் பாட்டுகளின் செல்வாக்கும் மாறிப் போயிற்று.
எல்பி ரெக்கார்டுகளில் மாத்திரம் பதிவான பாட்டுகள் இன்றும் கேட்கப்படுகின்றன. ‘பட்ட மரங்கள் துளிர்க்கும் கீதம் காற்றினிலே வரும் கீதம்.’ நாங்கள் கேசட் கேட்டோம். அல்ப காலத்துக்கு சிடி. பிறகு எலெக்ட்ரானிக் ப்ளாட்பாரங்களில் கேட்கத் தொடங்கிவிட்டோம்.
எண்பது வயதுப் பாடல் இன்றும் ஒலிக்கிறது. ரெண்டாயிரத்தி இருவத்தஞ்சு மார்ச் மாசம் தமிழ்நாட்டைக் கலக்கிய பாட்டு எது என்று மறந்து போய்விட்டது. திரைப் பாடல்களின் ஆயுள் மிகக் குறுகியது. அதனாலேயே அது தன் பெறுமானத்தை இழந்துவிட்டது. ஐந்து நிமிடப் பாடல்களைக் கேட்கும் பொறுமையில்லை. அதனால், ஒரே சரணத்தில் பாட்டை முடிக்கிறார்கள். அற்ப ஆயுள் பாடலை எழுத, வல்லுநர்கள் தேவையில்லை. நடிகரோ நண்பரோ ஒன்றுவிட்ட உறவினரோ எழுதினால் போதும். கேசட் விற்று லட்சக் கணக்கில் பணம் பார்த்த காலமில்லையே.
அதனால், பாடலாசிரியர்கள் பரம்பரை, கடைசியாக, பழநிபாரதி, நா.முத்துக்குமார், யுகபாரதி என்று முடிந்துவிட்டது. தமிழ் சினிமாவில் பாட்டு எழுதுகிறேன் என்று சொன்னால் வாடகைக்கு வீடு கிட்டாது.
ஆனாலும் இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் கூட்டணியின் நல்லூழில் நம் காலத்துக்கும் கேட்கப் பாட்டுகள் நம்மிடையே உள்ளன.
நாம் தமிழ் சினிமாப் பாடல்களின் காலத்தில் வாழ்ந்திருக்கிறோம்.











