விமலாதித்தன் மணி
சோனி லைவ் ஒடிடி தளத்தில் வெளியாகி தேசிய அளவில் பேசுபொருளாகி இருக்கிறது முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைவழக்கு விசாரணை பற்றிய இந்தப் புலனாய்வு வெப் சீரிஸ்.
Ninety Days : The True Story of the Hunt for Rajiv Gandhi’s Assassins என்ற புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்டு இருக்கிறது இந்த வெப் சீரிஸ்.
ராஜீவ் கொலைக்குப் பிறகு கொலைகாரர்களைத் தேடி சிறப்புப் புலனாய்வு அணி (Special Investigation Team-SIT ) களமிறங்கி செய்த மனித வேட்டையைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறது இந்தப் புத்தகத்தில். இதோடு, சென்னையை சேர்ந்த SIT விசாரணை அதிகாரி ரகோத்தமன் எழுதிய ராஜீவ் காந்தி கொலை வழக்கு பற்றிய புத்தகத்தில் இருந்தும் சில பகுதிகள் திரைக்கதையில் சேர்க்கப்பட்டுள்ளன.
இதனுடன் நிறைய புனைவுகளையும் கலந்து எடுத்திருக்கிறார்கள். ராஜீவ் கொலை வழக்கு பற்றி திருச்சி வேலுசாமி, வழக்கறிஞர் துரைசாமி, விடுதலை ராஜேந்திரன் போன்றவர்கள் எழுதிய புத்தகங்களும் கீழ்கண்ட புத்தகங்கள் சொல்லும் எந்த உண்மைகளும் இந்த வெப் சீரிஸின் திரைக்கதையில் கண்டு கொள்ளப்படவே இல்லை.
Assassination of Rajiv Gandhi: An Inside Job? – By Ahmad Faraz
The assassination of Rajiv Gandhi – By Neena Gopal
Rajiv Gandhi’s Assassination: The Mystery Unfolds – By Ramesh Dalal
ராஜீவ் காந்தி கொலை பற்றிய அனைத்து தமிழ் ஆங்கில புத்தகங்களைப் படித்தவன் என்ற முறையில் நிறைய உண்மைகள் இந்த வெப் சீரிசில் மறைக்கப்பட்டுள்ளன, தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளன என்பதுதான் நான் சொல்ல விரும்பும் உண்மை. குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த SIT விசாரணை அதிகாரி ரகோத்தமனுடைய பங்களிப்பு முழுமையாக இருட்டடிப்பு செய்யப்பட்டு வடமாநில அதிகாரிகளே இந்த வழக்கின் சாதனை நாயகர்களாக காட்டப்பட்டுள்ளனர்.
தமிழரான ரகோத்தமனின் திறமையான தமிழில் செய்யப்பட்ட விசாரணையினாலேயே இந்த படுகொலையின் முடிச்சுக்கள் ஒவ்வொன்றாக அவிழ்க்கப்பட்டன என்ற உண்மை இந்தத் தொடரில் முழுமையாக மறைக்கப்பட்டுள்ளது. போட்டோகிராபர் ஹரிபாபுவை பற்றி முதன்முதலில் புலானய்வுக் குழுவுக்குத் துப்பு கொடுத்த பத்திரிகையாளர் பெயர் தேள்கடி ராமமூர்த்தி. ஆனால் அவர் பெயரை பகவான்தாஸ் என்று குறிப்பிட்டு இருப்பதும் உண்மை கிடையாது.
அதே போல கோவையில் மாட்டிய விக்கி, ரகு என்ற இரண்டு விடுதலைப்புலிகள் மூலமாகத்தான் சிவராசனுக்கு எல்லா உதவிகளும் செய்துவந்த நபர்களான சின்ன சாந்தன், சுரேஷ் மாஸ்டர் என்ற இரண்டு விடுதலைப்புலிகளும் பெங்களூருவில் ஒளிந்து இருக்கலாம் என்ற சந்தேகம் விசாரணை குழுவுக்கு எழுந்து கர்நாடகக் காவல்துறை களமிறங்கியது. அதன் தொடர்ச்சியாகத்தான் பெங்களூரு தமிழர் ரங்கநாத் சிக்கி அவர் மூலமாக சிவராசன் கும்பல் சிக்கியது.
முத்தட்டி, பிரோடா போன்ற பெங்களூர் புறநகர் பகுதிகளில் விடுதலைப் புலிகள் கொத்து கொத்தாக தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் முதலில் சிக்கிய ரங்கநாத், அவரது மனைவி மிருதுளா மூலமாகத்தான் முதன்முதலாக சிவராசன் கும்பல் பெங்களூருவில் இருப்பதே காவல்துறைக்கு தெரிய வந்து அதன் பின்புதான் அவர்கள் சுற்றி வளைக்கப்படுகிறார்கள். இது வேறு விதமாக காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இந்த வெப் சீரிசில் முதலில் சென்னையில் ராஜீவ் கொலையான இடத்திற்கு பைக்கில் வரும் கோணேஸ்வரன் பின்பு வேதாரண்யத்தில் போலீசிடம் சிக்குவதாக கட்டப்படுகிறது. பின் அவன்தான் சிவராசன் பெங்களூருவில் இருக்க வாய்ப்பிருக்கிறது என்று சொல்வதாக உள்ளது. கோணேஸ்வரன் முதலில் சிக்கியது வேதாரண்யத்தில்தான், பின்புதான் விசாரணைக்காக சென்னை கொண்டுசெல்லப்பட்டான். அவன் மூலமாக நளினியும் முருகனும் மட்டுமே சிக்கினர். அவனுக்கும் சிவராசன் சிக்கியதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது இந்த கொலை வழக்கு குறித்த மற்ற புத்தகங்களில் சொல்லப்பட்ட தகவல்.
மேலும் பத்மநாபா கொலை வழக்கு மற்றும் ராஜீவ் கொலைவழக்கில் பெருமளவில் சம்பந்தப்பட்ட சின்ன சாந்தன் பற்றியும் இந்த வெப் சீரிசில் காட்டப்படவில்லை. அதேபோல விடுதலைப்புலிகளின் மிகப்பெரும் ஆதரவாளர் என்று அறியப்பட்ட மதிமுக நிறுவனர் வைகோவின் சகோதரர் ரவிச்சந்திரன், சிவராசன் கும்பலை சென்னையில் சந்தித்து தமிழகத்தில் அடுத்த ஆட்சி மாற்றம் மற்றும் தலைமை மாற்றம் பற்றி விவாதித்தார் என்பதும் ரகோத்தமன் எழுதிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
அதே போல காங்கிரஸ் பிரபலமான முன்னாள் எம்பி மரகதம் சந்திரசேகரின் மருமகன் லலித் இலங்கைக்காரர். அவர் மூலமாகத்தான் பாதுகாப்பு வளையத்தை மீறி ராஜீவ் காந்தியை நெருங்கி மாலையிடும் வாய்ப்பை கொலைகார கும்பல் பெற்றது என்பதும் ரகோத்தமன் எழுதிய புத்தகம் சொல்வது.
அந்த லலித் குமாரை விசாரிக்க முடியாமல் அதிகார வர்க்கம் தனக்கு தடையிட்டதாகவும் ரகோத்தமன் அவருடைய புத்தகத்தில் எழுதி இருக்கிறார். அதே போல திருச்சி வேலுசாமி எழுதிய புத்தகத்தில் சுப்பிரமணியன் சாமி மீதும் அப்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி மீதும் வலுவான ஆதாரங்கள் அடிப்படையில் சந்தேகங்களை எழுப்பி இருப்பார்.
ஆனால் தேசிய அளவில் பேசுபொருளாகி இருக்கும் இந்த வெப் சீரிசில் இவை முழுமையாக இருட்டடிப்பு செய்யப்பட்டு இருக்கிறது. ரகோத்தமன் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் இந்த வெப் சீரீஸ் எடுக்கப்பட்டால். இதையெல்லாம் காட்ட வேண்டியிருக்குமோ என்று கூட வேறு புத்தகத்தை முன்வைத்திருக்கலாம்.விடுதலைப்புலிகள் ஜெயலலிதாவையும் கொல்ல திட்டமிட்டார்கள்.
அதனால்தான் ராஜிவ் படுகொலைக்கு பிறகும் சிவராசன் சென்னையில் தங்குகிறான் என்று சிவராசனே சொல்வதுபோல இந்த வெப் சீரிசில் சித்தரிக்கப்பட்டுள்ளது. கோவையில் தற்கொலை செய்துகொண்ட விடுதலைப்புலிகள் விக்கி ரகு இருவரும் சாகும் முன் SIT தலைவர் கார்த்திகேயனுக்கு எங்கள் வாழ்த்துகள், நாங்கள் ஜெயலலிதாவுக்கு எதிரியில்லை என்று குறிப்பு எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்கள் என்று ரகோத்தமன் தன்னுடைய புத்தகத்தில் எழுதி உள்ளார். இதுவும் முன்னுக்குப் பின் முரணாக உள்ளது.
ராஜீவ் காந்தி படுகொலையை விசாரித்த புலனாய்வு அதிகாரிகளின் வாக்குமூலங்கள் மூலம் கிடைத்த உண்மைத் தரவுகளை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட Ninety Days : True Story of hunting of Rajiv Gandhis Assasins என்ற புத்தகம்தான் இந்த வெப் சீரிஸின் திரைக்கதைக்கான ஆதாரம். இந்தப் புத்தகத்தில் இந்த படுகொலையில் கைதான ஏழு தமிழர்களின் பின்னணியையும் அவர்களுக்கு ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தில் இருந்த பங்களிப்பு பற்றியும் எழுதியிருக்கிறார்கள்.
குறிப்பாக ராஜீவ் காந்தியை கொல்ல தற்கொலைப் போராளி தணு பயன்படுத்திய பெல்ட் வெடிகுண்டை டிசைன் செய்ததே பேரறிவாளன்தான் என்று இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். 1990 ஆம் ஆண்டு இலங்கைக்கு பேரறிவாளன் ரகசியமாக சென்றது, புலிகள் தலைவர் பிரபாகரனை சந்தித்தது, விடுதலைப்புலிகளிடம் பயிற்சி பெற்றது, ராஜீவ் காந்தி படுகொலையின் மாஸ்டர் மைண்டான ஒற்றைக்கண் சிவராசனிடம் பேரறிவாளனுக்கு இருந்த நெருக்கமான நட்பு, சிவராசனின் கண்காணிப்பில் பெல்ட் வெடிகுண்டை டிசைன் செய்தது என்பதாக புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதையே இந்தத் தொடரிலும் வலியுறுத்துகிறார்கள்.
சிவராசனின் இந்தக் கொலைபாதக திட்டத்தை நன்கு அறிந்தே பேரறிவாளனும் நளினியைப் போலவே அவர்களுடன் பயணித்து இருக்கிறார் என்பதாகவே காட்சிகள் புத்தகத்தின் அடிப்படையில் காட்டப்பட்டிருக்கின்றன.முழுக்க முழுக்க சிறப்பு விசாரணைக் குழு பார்வையில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கொஞ்சம் உண்மையும் நிறைய புனைவுகளும் பொய்களும் கலந்து மட்டுமே இந்த வெப் சீரிஸ் எடுக்கப்பட்டு இருப்பது என்பதுதான் உண்மை.
பொருத்தமான பாத்திரத் தேர்வு அசத்துகிறது. குறிப்பாக SIT தலைவர் கார்த்திகேயன், எஸ்பி அமித் வர்மா, சிவராசன் பாத்திரங்கள் யதார்த்தத்தை பிரதிபலிப்பதாக இருக்கிறது. குறிப்பாக எஸ்பி அமித் வர்மா பாத்திரத்தில் நடித்து இருக்கும் நடிகர் சாஹில் வைத் நடிப்பில் அமர்க்களப்படுத்தி இருக்கிறார். கம்பீரமான ஆளுமையான மேதகு பிரபாகரன் பாத்திரத்தில் வரும் நடிகர் பரிதாபத்தைத்தான் வரவழைக்கிறார். நளினி, முருகன் கதாபாத்திரத் தேர்வும் ஓகே. ரகோத்தமன் பாத்திரத்துக்கு நடிகர் பக்ஸ் நன்றாக பொருந்தி இருக்கிறார்.
இந்த வெப் சீரியஸ் ராஜீவ் கொலை நிகழ்ந்த இரண்டாயிரத்தின் ஆரம்பங்களை யதார்த்ததுடன் பிரதிபலிக்க முயன்று இருந்தாலும் எல்லவற்றையும் மீறி ஒரு அமெச்சூர்தனம் வெளிப்படையாக நன்றாகவே தெரிகிறது. விடுதலைப்புலிகள் குடியிருப்பதாக காட்டப்படும் வீடுகள் ஒதுக்குபுறமாக இருப்பவையாக, அழுதுவடிபவையாக காட்டப்படுவது, பழைய பேருந்துகள், ஆனால் புதிய கலரிலான கோவில் காட்சிகள், தெளிவாக மேக்கப் போட்ட நடிகைகள் (விடுதலைப்புலிகள் மேக்கப் போட மாட்டார்கள், குறிப்பாக தாணு போன்றவர்கள் இருந்த தற்கொலை படையினரான கரும்புலிகள்) பெங்களூருவில் எடுக்கப்பட்டு இருக்கும் இறுதி எபிசோட் போன்றவை.
ஆண்டின் பெரும்பான்மையான மாதங்கள் பசுமையும், குளிரும் பின்னி பிணைந்த பெங்களூரு நகரை அழுது வடியும் நகராக காட்டி இருப்பது அமெச்சூர்தனத்தின் உச்சம்.
தமிழர்கள் தீவிரவாதம், தனிநாடு கோரிக்கை போன்றவற்றை ஆதரிப்பவர்கள். அதனால்தான் விடுதலைப்புலிகளை ஆதரிக்கிறார்கள். சென்னை முழுக்க விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் நிறைந்து இருக்கிறார்கள் என்று ஒரு கதாபாத்திரம் பேசுவதாகக் காட்டி இருப்பதன் மூலம் இந்த வெப் சீரியஸ் தமிழர்கள் மீது ஏகத்துக்கும் வன்மத்தை கக்கி இருக்கிறது.
ஒட்டுமொத்தமாய் தமிழர்கள் மீது பிரிவினைவாதிகள் என்ற முத்திரையை குத்த முயலும் இந்த அயோக்கியத்தனமான முயற்சி வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ராஜீவ் காந்தி கொலைவழக்கு பற்றிய உண்மைகளை அப்படியே காட்டாமல், ராஜீவ் படுகொலையின் நிஜமான சூத்திரதாரிகள் இன்னும் உண்டு என்பது போல சந்தேகத்தை ஏற்படுத்தி புதிர் போல எடுத்திருக்கிறார்கள். இத்தனை வருட காலத்துக்குப் பிறகும் உண்மைகள் மறைந்தேதான் இருக்கும் என்பது கூட இந்த வெப் சீரிஸ் சொல்ல வந்த செய்தியாக இருக்கலாம்.











