கறுப்பு வெள்ளையில் அற்புதங்களை நிகழ்த்திய மூர்த்தி அடுத்து நுழைந்தது வண்ணங்களின் உலகில். கறுப்பு வெள்ளையில் ஒரு படம் கிளர்த்தும் உணர்வுகள் வேறு. வண்ணத் திரைப்படங்கள் உருவாக்கும் உணர்வுகள் வேறு. ஆனால் மூர்த்தியின் மேதமைக்கும் , தொழில் திறனுக்க்கும் வண்ணத்திரைப்படங்கள் ஒரு சவாலாகவே இல்லை.
பிரமோத் சக்ரவர்த்தி இயக்கிய படங்களின் வழியாகத்தான் வண்ணத் திரைப்படங்களின் சகாப்தத்துக்குள் மூர்த்தி நுழைந்தார். ப்ரமோத் சக்ரவர்த்தி இயக்கிய திரைப்படங்களில் பெருவெற்றி கண்ட படம் ஜூக்னு. தர்மேந்திரா, ஹேமமாலினி ஜோடியாக நடிக்க, பெரும் பொருட்செலவில் ஹெலிகாப்டரில் பாடும் பாடல் எல்லாம் வைத்து அன்றைய காலத்தில் மிக நவீனமான திரைப்படமாக இருந்தது.
ராபின்ஹுட் பாணி சினிமாதான் அது.
அதன் கேமராமேன் வி.கே. மூர்த்தித. துவக்கக் காட்சியில் விரையும் ரயிலை குதிரையில் துரத்தும் தர்மேந்திரா ஓடும் குதிரையில் இருந்து அப்படியே தாவி ரயிலில் ஏறும் அந்த ஷாட்டை இப்போது பார்த்தாலும் பிரமிப்பூட்டும். மிகவும் ரிஸ்க் கான ஷாட் அது. ஒரு நொடி டைமிங்க் தவறினாலும் பெரும் விபத்து ஏற்படும் வாய்ப்பு இருப்பதை பார்க்கையில் உணர முடியும். அந்தக் காட்சிக்காக வி.கே. மூர்த்தி மிகவும் சிரமப்பட்டிருப்பார் என்று உணர முடிகிறது. நல்ல வேகத்தில் விரையும் ரயிliன் ஓரிடத்தில் கேமரா இருக்கிறது.. கேமரா ஷேக் ஆகாமல். ஒரே ஷாட்டில் ரயிலில் தர்மேந்திரா ஏறுகிறார்…
மிகவும் லாவகமாக காட்சிபடுத்தப்பட்டிருக்கும் ஷாட் அது. அதனைத் தொடர்ந்து ரயில்பெட்டிக்குள் நடைபெறும் சண்டையும் அரையிருளில் இருக்கும். ஆக்ஷன் காட்சிகளிலும் அசத்தி இருப்பார் வி.கே. மூர்த்தி.
இத்திரைப்படம் தமிழில் “குரு” என்ற தலைப்பில் கமல்ஹாசன் நடிக்க ரீமேக் செய்யப்பட்டது. அதில் வசனம் ஹாசன் பிரதர்ஸ் என்று வரும். கமலே எழுதியிருக்கிறார். கமல் ரயிலில் ஏறும் காட்சி தமிழில் ஜெயனன் வின்சென்ட் எடுத்திருப்பார். ஆனால் அதில் நேரடியாக ரயிலில் ஏறாமல் கட் பண்ணி காண்பித்திருப்பார்கள்.
தீபாவளிக் கொண்டாட்டத்தில் குழந்தைகளுடன் பாடிக் கொண்டு நல்லவனாகவும், ,எதிரிகளிடம் கொள்ளையனாகவும் என நமக்கு சந்தேகம் வராத அளவுக்கு தர்மேந்திராவை இரு வேறு விதமாக வித்தியாசப்படுத்திக் காட்சிப்படுத்தி இருக்கும் பாங்கு. ஹெலிகாப்டர் சேசிங் காட்சிகள், கார் சேசிங் காட்சிகள் என வேகமாக நகரும் கதையில் அதற்கேற்ப ஷாட்களை வேகமாக அமைத்திருக்கும் விதம் இதெல்லாம் மூர்த்தியின் திறமைக்கு சான்று.
ஜீப்பில் மலைப்பாதையில் சுற்றிசுற்றி ரமேஷோடு சண்டையிட்டு கொள்ளைடிக்கும் காட்சி, விலங்குகள் தாண்டி செல்கிற தந்திர காட்சிகள், ஹேமமாலினி குடித்து விட்டு ஆடும் பாடலில் காருக்குள் முன்பக்கமும் பின்புற சீட்டுக்கும் போய் வருகிற காட்சி. எதிரிகளின் இருப்பிடத்தை ஜுக்னு கண்டுபிடித்து உள்ளே வந்ததும் அவரை சுடும்போது சர்க்கசில் பார் விளையாட்டு விளையாடுவது போல் அவர் தாவித்தாவி செல்வது என அனைத்து காட்சிகளிலுமே பதட்டத்தையும், த்ரில்லையும் அதிகரிக்க, மாறுபட்ட கேமரா கோணங்களாலும், வேகமாக நகரும் நிகழ்வுகளை தெளிவாகவும் உற்சாகத்துடனும் படம் பிடித்து விறுவிறுப்பாக ஆக்கியதில் மூர்த்தியின் ஒளிப்பதிவு முக்கியமாக இருந்தது
குறிப்பாக தங்கமீனை திருடும் காட்சியில் அவர் கொள்ளையனாக இருந்தாலும், அவர் மாட்டிக் கொண்டு விடக்கூடாதே என்று பார்வையாளர்க்ளிடம் பதட்டத்தை ஏற்படுத்தும் விதத்தில் காட்சிகள் அமைக்கப்படிருக்கும். குளோசப் காட்சிகளில் முகத்தில் உணர்ச்சிகள் தெரியும்படி லைட்டிங் அமைத்திருப்பார்.
லைட்டரிலேயே ஃபோன், காரில் எதிரிகள் வைத்திருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் …ஹெலிகாப்டரிலிருந்து பெரிய காந்தக்கல்லைப் போட்டு காரை தூக்குவது என தந்திரக் காட்சிகள் நிறைந்திருந்த ஜுக்னு மிக நன்றாக ஓடி தியேட்டர்களில் வசூலை அள்ளிக் குவித்தது.
குருத்த்தின் மறைவுக்குப் பின்னர்தான் இதெல்லாம் நடந்தது. பிரமோத் சக்கரவர்த்தியின் அத்தனை படங்களுக்கும் மூர்த்தி ஒளிப்பதிவு செய்தார். கலை உணர்வு இல்லாத வெறும் வணிகப் படங்களில் வேலை செய்வது மூர்த்திக்கு சவாலாகவே இருந்தது. ஆனால் அதற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டார். பிரமோத் இயக்க, மூர்த்தி ஒளிப்பதிவாளராக இருந்த முதல் படம் 12 O கிளாக்..
குருதத் மறைந்த பிறக ஓரிரவு 12 மணிக்கு மூர்த்தியை எழுப்பி, “நான் படம் செய்யப் போகிறேன். நீ தான் ஒளிப்பதிவு செய்ய வேண்டும்’ என்று கையில் ஆயிரம் ரூபாயை அட்வான்ஸ் கொடுத்து பிரமோத் எடுத்த படம் “ஜித்தி”
ஆயானா ஹோயீ பாடலில் நடனமாடும் ஆஷா பரேக்கின் முகத்தை நிழலாகவே சிறிது நேரம் காண்பித்து அவர் திரும்பும்போது ஒளி முகத்தில் விழுமாறு அமைத்திருப்பார்.
ஆஷாபரேக் நாயகியாக நடித்த இத்திரைப்படத்தில் அவருடன் மூர்த்திக்கு ஏற்பட்ட நட்பு நீண்டகாலம் நீடித்தது. இந்தப் படத்தின் பாடல் காட்சியில்தான் முதல்முறையாக இரவில் கிருஷ்ணராஜசாகர் அணையின் அழகை நள்ளிரவு விளக்குகளுடன், நீரூற்றுகளுடன் படமாக்கப்பட்டது, அதன் பின் பல படங்களில் அந்த அணைக்கட்டு வந்தது. கோவிந்த் நிஹலானி இப்படத்தில்தான் மூர்த்தியின் உதவியாளராக சேர்ந்தார் இவர் பின்னாளில் மிக முக்கியமான, புகழ் பெற்ற இயக்குநராக மாறினார். நவீன அலைப் படங்களான ஆக்ரோஷ், அர்த் சத்யா , தமஸ் உள்ளிட்ட படங்களை இயக்கினார். இவர் இயக்கிய படமான த்ரோக்கால்தான் தமிழில் குருதிப்புனல் ஆக வெளிவந்தது.
லவ் இன் சிம்லா, லவ் இன் பம்பாய் என்று வெளியான ஜாய் முகர்ஜியின் டிரையாலஜியில் லவ் இன் டோக்கியோ இரண்டாவது படம். மொத்த படப்பிடிப்பு குழுவினரையும் வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று படமாக்குவது பெரும்சவாலாக இருந்த காலகட்டத்தில் துணிந்து பிரமோத் எடுத்தார்..
பெரும்பாலும் ஏரியல் வியூவில் டோக்கியோவின் அழகை காண்பித்து துவங்கும் லவ் இன் டோக்கியோ பாடலில் ஜாய் முகர்ஜியும் ஆஷா பாரேக்கும் சாலைகள் முழுவதும் நடனமாடி செல்ல, அங்கிருக்கும் பேருந்துகள், ரயில் என கேமராவும் அவர்களோடு நகர்ந்து நமக்கு ஊரை சுற்றிக் காண்பிக்கும். ஜப்பானின் பிரபல ஷாப்பிங் பகுதியான ஜின்சாவின் இரவு வாழ்க்கையை ஒளிரும் நியான் வண்ண விளக்குகளோடு மிக அழகாக தன் கேமரா வழியாக படம் பிடித்திருப்பார். அதிநவீன டிஜிட்டல் கருவிகள் இல்லாத காலத்தில், மூர்த்தியின் இந்தத் திறமை அந்தக் காலத்தின் ஒரு குறிப்பிடத்தக்கத் தொழில்நுட்பச் சாதனையாகக் கருதப்பட்டது.
சயனோரா பாடல் எடுக்கும்போது வானிலை காரணமாக மேகங்கள் சூழ்ந்திருந்தது. பொதுவாக அந்த வெளிச்சத்தில் யாரும் படமெடுக்க மாட்டார்கள். அப்படியான கோட்படுகளை உடைத்தெறிப்பவரான மூர்த்தி அன்று ஆஷாபரேக்கை படம் பிடித்தார், முகம் தெளிவாக தெரிய வேன்டுமென்பதில் கவனம் செலுத்தி அதற்கேற்ற பின்னணி இடங்களைத் தேர்ந்தெடுத்தார், ரஷ் வந்தபின்பு பார்த்தவர்கள் அசந்து போயினர். அவ்வளவு அழகாக ஆஷாபரேக் இருந்தார். இந்தப் படத்தில் வந்த சயனோரா(goodbye0 என்கிற ஜப்பான் சொல்லைக் கற்றுக்கொண்டு மக்கள் பிரபலமாக்கினார்கள். நதியா கிளிப், நதியா வளையல் என்று பூவே பூச்சூட வா திரைப்படம் மூலம் பிரபலமானது என்று கேள்விப்பட்டிருந்த நமக்கு அதற்கு பல வருடங்களுக்கு முன்பே ஆஷாபரேக் தலையில் போட்டிருந்த கிளிப் “லவ் இன் டோக்கியோ கிளிப்” என்றே பிரபலமானது என்று தெரிந்தபோது வியப்பாக இருந்தது.
சாகசமும், காதலும் நிறைந்திருக்கும் வரலாற்றுப் பின்னணி கொண்ட திரைப்பட வரிசையில் வெளியான திரைப்படம் சூரஜ். பிரம்மாண்ட அரண்மனைகளையும், காடுகளையும் வைட் ஷாட்களாக எடுத்து அதன் வரலாற்றுத் தன்மையை நமக்கு தன் கேமரா கோணங்களில் கடத்தியிருப்பார். யானைகளையும், அதன் மீது அமர்ந்திருக்கும் அரசனையும் லோஆங்கிள் ஷாட்களில் பிரம்மாணடமாக காண்பித்ததோடு திரைச்சீலைகள், உடைகள், ஆபரணங்கள் என அனைத்திலும் கவனம் செலுத்தி தன்னுடய லைட்டிங் உத்திகள் மூலமாக அரச கம்பீரத்தை உணரவைத்தார். இத்ட்திரைப்படத்திற்கு சிறந்த இசை, பாடலாசிரியர், பாடகர் என மூன்று ஃபிலிம்ஃபேர் விருதுகள் கிடைத்தன.
நயா ஜமானா திரைப்படத்தில் பெரும்பாலும் கிராமத்தின் அழகை அசலாக காண்பிக்க இயற்கையான ஒளியமைப்பையே அவர் பயன்படுத்தியிருப்பார், குளோசப் காட்சிகளில் உணர்வுகளை பிரதிபலிக்கும் முகத்துக்கு மென்மையான லைட்டிங் வைத்திருப்பார்.
இத்திரைப்படத்தின் பாடல்கள்: மிகவும் வெற்றி பெற்றன. காதல் காட்சிகளிலும், உணர்ச்சிபூர்வமான காட்சிகளிலும் கதாபாத்திரங்களின் அசைவுகளை கேமராவில் சீராக நகர்த்தி தொடர்ந்தார்.
பிரமோத் சக்ரவர்த்தி இயக்கிய இந்தப் படம், அந்தக் காலகட்டத்தில் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பைப் பெற்றது. வணிகத் திரைப்படங்களின் தேவைக்கேற்ப வண்ணத்தை ஒரு அலங்காரக் கருவியாகவும், நட்சத்திரங்களின் அழகை திரையில் மேம்படுத்தும் கருவியாகவும் திறமையாகப் பயன்படுத்தினார். இதன் மூலம் அவர் புதிய சகாப்தத்திற்கு வெற்றிகரமாகத் தன்னை மாற்றிக் கொண்டார்.
‘கலியுக் அவுர் ராமாயண்’ திரைப்படத்தில் அவரது தனித்துவமான கருப்பு-வெள்ளை உத்தியை வண்ணத்திலும் கையாண்டார்..
மனோஜ் குமார் பகவான் அனுமனின் மறு உருவமாக (பவன் புத்ரா) வரும் காட்சிகளில், அவரது கதாபாத்திரத்திற்குத் தேவையான மரியாதையையும், தெய்வீகத் தன்மையையும் கொடுக்கும் விதத்தில் ஒளியமைப்பைப் பயன்படுத்தியிருப்பார். குறிப்பாக, பக்திப்பூர்வமான தருணங்களில் ஒளியையும் நிழலையும் பயன்படுத்தி, காட்சியின் உணர்ச்சி ஆழத்தை அதிகரிக்கச் செய்தார். குளோசப் காட்சிகளில் மென்மையான ஒளியமைப்பை பயன்படுத்தியதால் திரையில் அவர்களின் முகங்கள் பிரகாசமாகத் தெரிந்தன.
இந்தத் திரைப்படத்தின் சிறப்பு அம்சமே, பண்டைய இராமாயணக் கதாபாத்திரங்களின் நவீன வடிவங்களை கலியுகச் சூழலில் காட்சிப்படுத்தியிருப்பதுதான். விஷுவல் எஃபெக்ட்ஸ் (VFX) அக்காலத்தில் வரம்புக்குட்பட்டிருந்தாலும், அவை புராணக் கதைக்களத்தை நவீனகாலத்துக்குக் கொண்டு வர உதவியது.
பகவான் ஸ்ரீ ராமர் அறிவுறுத்தியதன் பேரில், அனுமன் தனது தெய்வீக வடிவத்தை விடுத்து, பவன் குமார் என்ற செல்வந்தராக மாறுவேடமிட்டுக் கலியுகத்துக்கு வருவதுதான் கதையின் முக்கிய ஆரம்பக் காட்சி.
பிரேம் சோப்ரா நடித்த பைரோன் சிங் என்ற கதாபாத்திரம்தான், இராமாயணத்தில் இராவணனுக்கு இணையான வில்லன் கதாபாத்திரம். இவரது அச்சுறுத்தும் தன்மையையும் செயல்பாடுகளையும் காண்பிக்க, அதற்கேற்ற ஒளியமைப்பை வி.கே. மூர்த்தி பயன்படுத்தியிருப்பார்.
வில்லனான பைரோன் சிங் (இராவணன்) மற்றும் பவன் குமார் (அனுமன்) ஆகியோருக்கு இடையேயான சண்டைக் காட்சியில்தான், பவன் குமாரின் உண்மையான சக்தி வெளிப்படும். இந்தக் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை வி.கே. மூர்த்தியின் அதிரடி ஒளிப்பதிவு பிரம்மாண்டமாகக் காண்பித்திருக்கும்.
ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங் வி.கே.மூர்த்தி பற்றி நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
“நான் ராஜீவ் மேன ன்சார் கிட்ட, கண்ணன் சார் கிட்ட பேசும்போதெல்லாம் அவர்கள் செய்த படங்களைப் பற்றிதான் கேட்டுக்கொண்டிருப்பேன். நிறைய பேசிபேசி தான் தெரிந்து கொள்வேன். இந்தப் படத்துல அந்த சீன் எப்படி சார் செஞ்சீங்க என்றுதான் ஆரம்பிப்பேன். “நீ வேலை செஞ்சு கத்துக்கிறியோ இல்லையோ என்னைக் கேள்வி கேட்டே கத்துக்கறப்பா என்று சொல்வார்.” ஜி.பி. கிருஷ்னா சார் கிட்ட பேசினேன். நாயகனில் பி.சி ஶ்ரீராமோட அஸிஸ்டெண்ட். HME லைட்டிங் முதன்முறையாக பயன்படுத்தியிருக்கிறார். அந்தந்த இடத்துக்கு ஏற்ப அந்த நேரத்துல அந்த காட்சிக்கு என்ன தோணுதோ அதை அவர்கள் செய்திருக்கிறார்கள்.
குருதத் படங்கள்ள அவர் செய்த கலர் பேட்டர்ன் இன்னிக்கும் பொருந்துதுங்கறதை தான் நான் முக்கியமா பாக்கறேன். அதை அப்படியே இன்னிக்கும் அப்ளை பண்ணலாம். பிளாக் அன்ட் வொய்ட் காலத்துல கலர்ஸ் இல்லாததால பொதுவாக ஆடையின் நிறம் பச்சை என்றால் பேக்டிராப் அதே பச்சை நிறமாக இருந்தால் வித்தியாசம் இருக்காது, எனவே சட்டை கலர் டார்க் ப்ளூ போடுப்பா என்பார்கள், .இல்லை பேக்டிராப்ல கலர் பெயிண்ட் அடி என்பார்கள். எப்படியும் கான்ட்ராஸ்ட்டாக இருக்க வேண்டும், இது செட்லயும், ஆடைகள்ளயும் வேறு வேறு கலர்களைக் கொன்டு வருவதன் மூலமாக ஒரு கான்ட்ராஸ்டைக் கொண்டு வருவது. அதேபோல் லைட்டிங்கில் ஒருபக்கமாக லைட்டிங் செய்வது. ஒரு பக்கம் வெளிச்சமாகவும், மற்றொரு பக்கம் நிழலாகவும் இருக்கும், இப்படி லைட்டிங் பண்றது அவ்வளவு ஈசியான விஷயம் இல்ல.
நகர்ந்துகிட்டே இருக்கற உருவத்துக்கு நீங்க எப்படி ஒரே லைட்டிங் பண்ண முடியும்? இப்பவும் தமிழ் சினிமாவில் ஈவனா லைட்டிங் பண்ணிட்டா பிரச்னை இல்லைன்னு நினைப்பாங்க. இந்த கான்ட்ராஸ்ட்டை மெயின்டெய்ன் பண்றது கஷ்டமா இருக்கும். ஆனா பிளாக் அன்ட் வொய்ட் காலத்துல வெற்றி பெற்ற கேமராமேன் எல்லாரும் இந்த கான்ட்ராஸ்ட்டை மெயின்டெய்ன் பண்ணினவங்கதான். வி,கே, மூர்த்தி அதுல மாஸ்டர்.
கிட்டத்தட்ட எல்லா ஃப்ரேம்கள்ளயும் இந்த கான்ட்ராஸ்ட்டை மெயின்டெய்ன் பண்ணிருப்பாரு. அதுக்கப்புறம் ஷாட் கம்போசிஷன், ஃபிரேம் எல்லாம் வரும், அதுல குறிப்பா குளோசப் ஷாட்கள்ள லைட் பண்ணிய விதம் இன்னிக்கும் அப்படியே கலருக்கு பொருந்தும். பிளாக் அன்ட் வொயிட் காலத்துல அப்படி கான்ட்ராஸ்ட் செஞ்சவங்க இப்ப கலர்ல அதே மாதிரி செய்யும் போது அது சரியாக வருவதில்லை. ஏற்கெனவே கலர்கள் இருக்கும். அத்துடன் இவங்க கான்ட்ராஸ்ட் மெயின்டெய்ன் செய்யும் போது அது ஸ்மூத்னெஸ் இல்லாம ஓவர் கான்ட்ராஸ்ட்டா மாறிடும். அது பிரிண்டிங்கில் டெக்னிக்கலா பல சிக்கல்களை உருவாக்கியது.
அதுல மீறி ஜெயிச்சவங்க பி.சி.ஶ்ரீராமும், பாலு மகேந்திராவும். அவங்க லைட், ஷேடோசைக், குறைச்சு சாஃப்ட் லைட்டுக்கு போனாங்க. கலருக்கு வேற மாதிரி வேலை செய்யணும்னு. அதைப் போலவே இங்க பண்ணக்கூடாது, இங்க ஸ்மூத் லைட்டிங் பண்ணனும்கற புரிதல்ல. சிலபேர் தான் பிளாக் அன்ட் வொயிட்லயும் கலர்லயும் ஜெயிச்சவங்க, பி.சி. சார் வந்த காலத்துல டெக்னாலஜி மாறுது, கலர் வருது. அந்த மீடியத்தை சரியா புரிஞ்சுகிட்டு அதுக்கேத்த லைட்டிங் பேட்டர்னை கையாண்டிருக்காங்க.
இன்னிக்கு நான் வி,கே, மூர்த்தியோட விஷூவல்ஸ் பாக்கும்போது கான்ட்ராஸ்ட்டை மெயின்டெய்ன் பண்ணிருக்காரு, ஆனா சாஃப்ட் லைட்டிங் செஞ்சிருக்கார்.. இப்ப நாம செய்யறதை அப்பவே அவர் செஞ்சிட்டாரு. கான்ட்ராஸ்ட்டை மெயின்டெய்ன் பண்ணி பேக்டிராப்பை பிரிச்சு முகத்துக்கு பண்ணப்பட்ட லைட்டும் அழகா காண்பித்து என, ஹாலிவுட் படங்கள்ள அப்படி பண்ணுவாங்க,வ் அதை அப்படியே கலருக்கும் செய்ய முடியும். அதுதான் அவர் காட்சிகளை பார்த்தபோது எனக்குத் தெரிந்தது. இளையராஜாவை முப்பது வருஷம் முன்னாடியும் கேட்டாங்க, இப்ப 2கே கிட்ஸும் கேட்கறாங்கல்ல.
அதே மாதிரிதான், எந்தக் காலகட்டத்திலயும் பிடிக்கறது தான கிளாசிக்னு சொல்வோம். அதேதான் இவரோட வேலையிலும் நடந்திருக்கு. இப்ப அவரோட படங்களை கலரா மாத்தினாகூட நல்லாருக்கும். இந்த தலைமுறைக்கும் அது பொருந்துது. வைப் பண்ண முடியுதுன்னு இருக்குல்ல, அது மாதிரிதான், அவரோடது பிரமாதமான வேலை. ஒரு டைரக்டரும் சினிமாட்டோகிராஃபரும் ஒரே மனமா இணையனும். ஒரு வண்டில பூட்டின இரட்டை மாடுகள். இரண்டும் சேர்ந்து தான் போகணும். மாத்திக் கட்டினா அந்த வண்டிமாடு ஓடாது, அவங்களோட பர்ப்பஸ் ஓண்ணு தான். அந்தப் படம் சிறப்பா வரணும்கறது தான் பர்ப்பஸ். பர்சனலா எந்த ஈகோவும் பிரச்னையும் இருக்ககூடாது.
ஆனா இங்க ரெண்டு பேர்க்கும் நடுவுல ஈகோ ,பிரச்னை எப்பவுமே இருக்கு. அதனாலதான் பெரும்பாலான சினிமாட்டோகிராஃபர்கள் இயக்குநராக முயற்சி பண்றாங்க. சிலர் டைரக்டராவும் ஆகிருக்காங்க. இங்க மட்டுமில்லாமல். உலகம் முழுவதும் தான், ஒரே விதமான சிந்தனையோட, படைப்பை மட்டுமே பிரதான நோக்கமா கொண்டு வேலை செய்யறது அவ்வளவு ஈசியான விஷயம் இல்ல. தமிழ்ல பாரதிராஜாவும் கண்ணனும் செஞ்சிருக்காங்க. நான் அதை நேர்லயே பாத்துருக்கேன், ஒண்ணா வேலை பாத்தவங்க தான் குருதத்தும் மூர்த்தியும்.. 9 படங்கள்.

அடுத்த தலைமுறைக்கு கொண்டு போகவேன்டிய அவசியமான விஷயம் இது. அப்படி இருவர் சேர்ந்து செய்யற வேலை தான் கலையா மாறுது. மேனுவலா இருந்த சினிமாட்டோகிராஃபியும் எடிட்டிங்கும் போனதுக்கப்புறம் எல்லாமே நீர்த்துப் போச்சு. படைப்பினுடைய தரம் குறைஞ்சிடுச்சு. ஃபிலிம் காலத்துல நம்ம மனசுலயே எடிட்டிங் இருக்கணும், அந்த ஷாட் சேர்த்தா இந்த ரியாக்ஷன்னு எல்லாமும் மனசுல ஓட்டிப் பாக்கணும், கட் பண்ணினால் வேஸ்ட்டாகிடும். அது இல்லாம போனதுதான் சினிமாவுக்கு பெரும்நஷ்டம். ஃபிலிம் காலத்துல என்ன வரும்னு யாருக்கும் தெரியாது.
ரஷ் பாக்கும்போது தான் எப்படி வந்திருக்குன்னே தெரியும். எந்த ஐடியாவுல் இல்லாம கிரியேட்டிவிட்டியே இல்லாம போயிடுச்சு.. ராஜீவ்மேனன், பி.சி. ஶ்ரீராம்னா ஒரு தனித்தன்மை இருக்கும், இப்போ அப்படி யாரையும் சொல்லவும் முடியாது
அவங்க ரெண்டு பேரும் ஒரே ஆன்மாவா இருந்தாங்க. இன்னிக்கு இருக்கும் தொழில்நுட்பத்துல லைட்டிங் செஞ்சாலும் மிக சிறப்பாக இருக்கும். அவரோட சிக்னேச்சர் லைட்டிங் தான். விதியை மீறி புதுசா ஒண்ணு செஞ்சாங்க. ஃபிரேமிங்கிலும் மாஸ்டர்..
பியாசா முதல் ஷாட்டே அவன் வரான் நடந்து வரான், மெல்ல முகம் தெரிய வருது. அடன்னு வியந்து போனேன். எங்க போனாலுமே முதல்ல இந்த லைட் எப்படி இங்க வருதுன்னு தான் என் மைண்ட் போகும். அப்படித்தான் பழகிருக்கு. என்றென்றும் மூர்த்தி ஒரு மாஸ்டர்” என்று சிலாகித்து முடித்தார்.
கருப்பு வெள்ளையில் எடுப்பது போலவே வண்ணங்களிலும் கான்ட்ராஸ்ட்டை, நிழலை மூர்த்தி உருவாக்கியதைப் பார்த்து கோடக் கம்பெனியே வியந்தது.
ஒரு காட்சியின் ஆழத்தைச் சொல்ல கான்ட்ராஸ்ட் உருவாக்குவது அவசியமென்று மூர்த்தி கருதினார்.
பாரூத் படத்தில் ரிஷிகபூர் காவல்நிலையத்திற்குள் செல்வது போன்ற காட்சி, ஆனால் காவல்நிலையத்தை படம் பிடிக்க அனுமதியில்லை. எதிரில் இருந்த நடைபாதையில் கேமராவை வைத்துக் கொண்ட மூர்த்தி ரிஷிகபூரை காரிலிருந்து இறங்கி நடந்து போக சொன்னதோடு. கேமராவைத் திருப்பி ஜூம் செய்தார்.. ஷாட் கச்சிதமாக வந்துவிட்டது.
ரஜியா சுல்தான் படத்தின் ஒளிப்பதிவாளர் ஆர்.டி மாதுர் என்றாலும் சில காட்சிகளை மூர்த்தி செய்திருக்கிறார், டெல்லி பஜார் காட்சி. முழுவதுமாக செட் போடப்பட்டு எடுக்கப்படிருக்கும். பஹாரோ பூல் பர்ஸாவோ. பாடலில் வைஜெயந்திமாலா பூக்களால் ஆன ஊஞ்சலில் ஆடுவது தான் ஹைலைட்.. இரவுப்பாடல் காட்சியென்பதால் லைட்டிங்கிற்கு ஓரிரவு வேண்டுமென்று கேட்டார் மூர்த்தி. கனவு பாடல் என்பதால் ஊர்வலம், மக்கள் எல்லாம் காற்றில் மிதந்து வருவது போல் வேண்டுமென கேட்டார் இயக்குநர். கமால் அம்ரோகி.

அதை மதராசில் ஸ்டூடியோவில் முழுக்க பூக்களால் ஆன செட்டில் எடுக்கப்பட்டது, இதற்காக தினமும் நூற்றுக்கணக்கான கூடை பூக்கள் பெங்களூரிலிருந்து விமானத்தில் வந்தது,
சோட்டாபாயி திரைப்படத்துக்குப் பிறகு மூர்த்திக்கு இயக்குநர் வாய்ப்பு வந்தது. வீனஸ் கம்பெனியின் அடுத்த படத்தை மூர்த்தி இயக்குவதாக இருந்தது ஆனால் கடைசியில் மாறி விட்டது, இயக்குநர் ஶ்ரீதர் இயக்கினார். “டிஸ்ட்ரிப்யூட்டர்கள் ஒத்துக் கொள்ளமாட்டார்கள், ஆனால் நீயே ஒளிப்பதிவு செய் என்றார்கள். நான் மறுத்து விட்டேன்.” என்று மூர்த்தி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.. ஒரு நல்ல இயக்குநரை கலை உலகம் இழந்து விட்டதென்றுதான் சொல்ல வேண்டும்.
மூர்த்திக்கு வியப்பாக இருந்த விஷயம், “நான் சக்கியின் (பிரமோத்தின்) பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறேன்.
எல்லாப் படங்களும், நன்றாக ஓடின. ஆனால் யாரும் என்னை சக்கி படங்களில் வேலை செய்தேன் என்று சொன்னதேயில்லை. நானாகத்தான் சொல்லிக் கொள்கிறேன். வி,கே,மூர்த்தி படங்கள் என்றாலே குருதத்தை மட்டுமே நினைத்துக் கொள்கிறார்கள்.”
இந்த ஸ்டேட்மென்ட்டில் இருக்கக்கூடிய உள்ளார்ந்த ஒரு வருத்தத்தை நாம் உணர முடியும். ஏனென்றால் மூர்த்தி தொழில் திறமை வாய்ந்த ஒளிப்பதிவாளர் மட்டுமல்ல. அவர் ஒரு அசலான கலைஞன். அந்தக் கலை மனதை முழுமையாக உணர்ந்த இன்னொரு கலைமனம் குருதத்துடையது. குருதத் இறந்த போது மூர்த்தி சொன்ன வார்த்தைகளை சென்ற கட்டுரையில் குறிப்பிட்டிருந்தாலும் மறுபடி இங்கே நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்.
கோவிந்த் நிஹலானி அவரிடம் குருதத் போன பிறகு உங்களுக்கு எப்படியிருக்கிறது என்று கேட்டார். அதற்கு மூர்த்தி “நான் அவனுக்காக அழலை.
எனக்காக அழுதேன்” என்றார்
நண்பன் போன பிறகு தன்னை அனாதையாக உணர்ந்த ஒரு கலைஞனின் அழுகையாகத்தானே அது இருக்க முடியும். வி.கே. மூர்த்தியின் கலையை உணர்ந்து அதை வெளிப்படுத்த தொடர்ந்து வாய்ப்புகளை குருதத் ஏற்படுத்தினார். ஒத்த சிந்தனையுள்ள இரண்டு மேதைகள் சேரும்போது அது நிகழ்த்தும் அற்புத மேஜிக் தான் குருதத் – மூர்த்தி கூட்டணியின் படங்கள்..
குருதத் தனது மறைவின் மூலம் உருவாக்கிய வெற்றிடத்தில் நேரடியாக பாதிக்கப்பட்டவராக மூர்த்தியை உணர முடிகிறது.
குருதத்தின் ப்யாஸா நாயகன் தனது கலைமனதை இந்த சமூகம் உணரவில்லை என்று துயரடைகிறான். குருதத் போன பிறகு மூர்த்தி கிட்டத்தட்ட அதே மாதியான நிலையை அடைந்தார். அவர் தொழில் திறமையை மட்டுமே காண்பிக்க முடிந்த மசாலா படங்கள் அவருக்கு பொருளீட்டி தந்திருக்கலாம்.
ஆனால், தன் கலை அங்கீகரிக்கப்படுகையில்தான் கலைஞன் முழு நிறைவடைகிறான். அந்த நிறைவு குருதத் மறைந்த பிறகு மூர்த்திக்கு கிடைக்கவில்லை.
என்றாலும் கலைநுட்பம் கொண்ட அவரின் ஒளிப்பதிவும், தொழில்நுட்பத்தில் அவர் புகுத்திய பல புதுமைகளும் அவரை ஒளிப்பதிவின் மேதையாக என்றென்றும் காலத்தில் நிலைநிறுத்தியிருக்கிறது..











