பாலைவன லாந்தர்
ஒன்றை சிறந்ததென ஒப்புக் கொள்வதற்கு அதனினும் சிறந்த ஒன்றை கற்பனை செய்வதற்காவது தெரிந்திருக்க வேண்டும். நான் என் வாழ்வை சிறந்ததென ஒப்புக் கொள்கிறேன்.
“ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு இந்த வார கடைசியில் ஒரு அவுட்டிங் போயே ஆகணும்.”
இந்த வார்த்தைகளை இப்போதெல்லாம் அடிக்கடி கேட்க முடிகிறது அல்லவா? எல்லோருக்குள்ளும் பேயாக அலைமோதும் அந்த ஸ்ட்ரெஸ் எனப்படும் அழுத்தத்திற்கு அவரவருக்குத் தகுந்தாற்போல் உருவமும் வைத்துக் கொள்ளலாம். சிலருக்கு அலுவலக உயர் அதிகாரியின் சிரிப்பு, சிலருக்கு ஆசிரியரின் முறைப்பு, நினைத்த திரைப்படத்திற்கு நுழைவுச்சீட்டு கிடைக்கவில்லையென்றால்கூட ஸ்ட்ரெஸ் வந்துவிடும். காதலி பதில் சொல்லாத குறுந்தகவல்கள்…இப்படிப் பல. சிலருக்கு குடும்பமே ஸ்ட்ரெஸ் தான்.
“ஒரு தம் போடலாம்.”
“ஒரு டீ குடிக்கலாம்.”
“ஒரு பாட்டுக் கேட்கலாம்.”
“ஒரு பிரியாணி சாப்பிடலாம்.”
இதெல்லாம் மீச்சிறு அழுத்தப் போக்கிகள் என்று சொல்லிக் கொள்ளலாம்.
பரபரப்பான வாழ்க்கையில் எட்டு மணி நேர உறக்கமெல்லாம் கனவாகிப் போய்விட்டது என்று அங்கலாய்த்துக் கொள்ளும் மனிதர்களின் கையில் உள்ள அலைபேசியில் “ரீல்கள்” மட்டும் ஓய்ந்தபாடில்லை.
நீங்கள் செல்லும் யோகா மையத்தில் உங்களுக்கு முழு அமைதி கிடைத்துவிட்டால் மீண்டும் செல்வீர்களா? எனில் முழு அமைதியைத் தந்து விடுவார்களா?
உண்டியலில் போடப்படும் காசுக்கேற்ப கிடைக்கும் ஆசீர்வாதங்கள் போதுமா?
எந்த மருந்தாவது முழு முற்றிலுமாக நோயைத் தீர்த்து விடுகிறதா?
எந்த உறவிலாவது போதுமென்ற திருப்தி அடைந்து விடுகிறோமா?
யார் மீதாவது நூறு சதவீத நம்பிக்கையை வைத்து விடுகிறோமா?
”குறைகளுடன் என்னை ஏற்றுக் கொள்வாயா?” என்ற கோரிக்கையை மனம் நிறைய ஒப்புக் கொள்ளுங்கள். ஏனெனில் அதுவே நிரந்தரமானது.
இதுதான் நான் என நிர்வாணமாக கைகளை விரிக்கும் சிலையின் காலடியில் தானே யுத்தம் உள்ளிட்ட உலகப் பரிவர்த்தனைகள் நடக்கின்றன.
Children Of Heaven 1997ல் வெளியான இரானியன் திரைப்படத்தைக் காணாத சினிமாப் பிரியர்கள் இருக்க மாட்டார்கள். இரண்டுக் குழந்தைகளின் அதிக பட்ச தேவை கிழிந்து போகாத காலணிகள் மட்டுமே. தேவைக்கு ஏற்றவாறுதான் தேடுதல் அமையும். தேடுதலே நம்மை வழி நடத்தும், வாழ்வு அதன் போக்கில் செல்லும்.
ஒரு படைப்பை முழுமையாக அணுக உன் அதிமேதாவித்தனத்தை ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டுத் தொடங்கு என எனக்குள் ஒலித்துக் கொண்டிருக்கும் குரலிடம் பெரும்பாலும் நான் சரணடைந்து விடுவேன்.
இரண்டரை மணி நேர திரைப்படத்தில் என்னவெல்லாம் காட்டிவிட முடியும்?
என்னவெல்லாம் காட்டினால் நீங்கள் போதும் என்று சொல்வீர்கள்…
கதை என்ன? அனுபவம்.
சில தத்துவங்களை சொல்வதற்கும் கேட்பதற்கும் செயல்படுத்துவதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. ரத்தமும் சதையும் என யுத்தங்களைக் குறித்து எழுதுபவர்களுக்கு மருத்துவமனையில் நரம்பில் ஊசி செலுத்துவதற்குள் படும் பாடு சொல்லி மாளாது. ஆனால் அனுபவமென்பது சொல்லை விட கடுமையான செயல்.
“பறந்து போ”
ஒரு தந்தை மகனைப் புற உலகைக் காட்ட அழைத்துச் செல்வதாகக் காட்டப் பட்டிருந்தாலும் அங்கே புற உலகையும் நிதர்சனத்தையும் தரிசித்தது தந்தை மட்டுமே.
அவன் அவனாகத்தான் இருக்கிறானென ஒருவனை உணர்ந்துக் கொள்ள முதலில் நீங்கள் நீங்களாக இருந்திருக்க வேண்டும். நான் எனது படைப்புகள் குறித்து பேசும்போதெல்லாம் அவரவர் Perspective குறித்தும் பேசுவேன்.
“குதிரையை தண்ணீர் தளத்திற்கு அழைத்துச் செல்லலாம். ஆனால் அதைக் குடிக்க வைக்க முடியாது.” குறைந்தபட்சமாக இதைக்கூட புரிந்து கொள்ள முயற்சிக்காத மனிதர்களோடு வாழ்வது ஒருவிதத்தில் சாபம் என்றே சொல்வேன். தத்துவங்களை நடைமுறைப்படுத்த முயற்சிக்கையில் மனிதன் “ஜெர்க்” ஆகிறான்.
இயக்குநர் ராம், கோகுலை “ஜெர்க்” ஆக வைத்திருக்கிறார். அவருடன் மனைவி க்ளோரி உள்பட நாமும் “ஜெர்க்” ஆகிறோம்.
அன்பு போன்ற குழந்தைகளை நாம் சாதாரணமாகக் கடந்திருப்போம். ஏனெனில் அவன் செய்யும் சேட்டைகளை அவன் பெற்றோரிடத்தில் போட்டுக் கொடுக்கும் புண்ணியத்தை நாமே செய்திருப்போம். சுயநலக் குற்றவாளிகள் பொறுமையும் சகிப்புத்தன்மையும் இல்லாத சாதாரண மனிதர்கள் என்பதில் என்ன சந்தேகம்!
இன்றைய கல்வி ‘என்ன விலை’ என்று கேட்கும் ஒப்பீடு மனப்பான்மை, வயிற்றில் கருவைச் சுமந்தவுடனேயே “அந்தப் பள்ளியில்” சேர்க்கை வேண்டுமென தவமிருக்கும் பெற்றோர்கள் வேறு யார்? மனிதன் தன் நெற்றியில் பிராண்ட் என்னும் அட்டையை ஒட்டிக்கொண்டு அலைகிறான். நாய்களும் பூனைகளும் நம்மை வேடிக்கை பார்க்கின்றன.
பறந்து போனது யாருக்காக? ஈ.எம்.ஐ. என்னும் தவணையைக் கேட்டுத் துரத்திக் கொண்டு வந்த இன்னொரு ஆணிடம் (அது அவனுடைய பிழைப்பு) இருந்து தற்காலிகமாக தொடங்கிய சிறிய பயணம் அன்றாட சூழலில் இருந்து தந்தையையும் மகனையும் சிறிய ஆசுவாசத்தைப் பெறச் செய்கிறது.
கள்ளங்கபடமற்ற முகங்கள் திரைப்படத்தில் விரவிக் கிடக்கின்றன. யாரும் அன்பை (கோகுலின் மகன்) கடத்திப் போகவில்லை பரிபூரண அன்பைக் கடத்தி இருக்கிறார்கள். மணலைக் குடைந்து, நீரில் மூழ்கி, மலையில் ஏறி, மரங்களில் தாவி விளையாடிய கடைசித் தலைமுறையின் விளிம்பென காட்சியைப் படம் பிடித்திருக்கிறார்கள்.
கால்பந்து பனியனை அணிந்து ஒரே விளையாட்டில் மூட்டு வலியால் விளையாட்டைத் துண்டித்துக் கொண்டவனின் மகன் அதே பனியனுடன் கோல் போடுவதற்காக முன்னேறுவது அவனை இருபத்தைந்தாண்டுகள் செலவில்லாமல் சிரமில்லாமல் காலப் பயணம் செய்ய வைக்கிறது. மகன்களால் மட்டுமே அப்பன்களை டைம் ட்ராவல் செய்ய வைக்க முடியும். எப்போதோ தன் தோழி கேட்ட சூரியகாந்தி மலரை இப்போது கொடுப்பது இன்னொரு டைம் ட்ராவல். ஆனால் உடலுக்கு மஸாஜ் கொடுக்கும் இருக்கையை விண்வெளிக்குச் செல்லும் சாதனமெனச் சொல்லி இயக்குநர் “செக்” வைக்கிறார்.
குடிக்கும் தண்ணீருக்குக் கூட செலவழிக்காமல் தெருக்கடையில் உணவைப் பெற்று, நடந்தே விடுதிக்குச் சென்று சிக்கனமாக சேர்த்து வைத்தப் பணத்தை சட்டென தூக்கிக் கொடுக்கும் மனநிலையை நடுத்தரவர்க்கத்திற்கே உண்டான கெத்து எனலாம். அந்த கெத்து, சாத்தானைக் (கோகுல்) காதலித்து மரத்திற்கு மேல் ஏற்றி வைத்துக் கல்லெறிகிறது. சாத்தான் உச்சியிலிருந்து உறங்க இன்னும் அரை மணி நேரம் கொடு எனக் கேட்கிறது. இதெல்லாம் உருவகமாக இயக்குநர் பார்வையாளரிடம் ஒப்படைக்கிறார்.
ராம் எனக்குப் பிடித்த இயக்குநர். காஃபிடே ஸ்டார்பக்ஸில் (எப்போதாவது) நேரம் செலவழிக்கும் எங்களைப் போன்ற சிலருக்கு அவர் காட்சிப்படுத்தும் நிதர்சனங்களை சமயங்களில் விரும்பி ஏற்க முடியாமல் போனதும் உண்டு. பணம் மனித வாழ்வைத் தீர்மானிக்க முடியாது என்பதை பணம் செலவழித்துத்தான் தெரிந்துக் கொள்ள முடிகிறது.
ஞானம் எங்கே கிடைக்கிறது? ‘சல்லிசாகக் கிடைத்தால் ரெண்டு கிலோ அதிகமாக வாங்கி வைங்க, அப்புறமா பற்றாக்குறை வரும்போது விலையை ஏற்றி விற்றுக்கலாம்.’ இதுதான் இன்றைய நிலை.
படத்தில் எல்லோரும் நல்லவர்களாக இருக்கிறார்களே என்ற கூற்று ஒன்றை வாசித்தேன். அப்படி அல்ல, எல்லோரும் கொஞ்சம் நல்லவர்களாக இருக்கும்போதே இந்தப் பயணம் தொடங்கி முடிந்துவிட்டது. இல்லையென்றால்? இன்னொரு முறை பறந்து போக அன்பென்ற குருவி ஆசைப்படாது.
‘கற்றது தமிழில்’ எல்லாவற்றையும் விட “நிஜமாத்தான் சொல்றியா” என்ற வரிகளுக்குப் பின்னால் உள்ள ப்ராக்டிகாலிடியை மறக்கடிக்கும் பொய் சந்தோஷத்தை உணர வாழ்வில் ஒருமுறையேனும் மலையுச்சிக்குச் சென்று இறங்க கற்றுக் கொள்ள வேண்டும்.
இந்த மலையில், காட்டில், கனிமவள வாசனை அடிக்கிறது. இரும்புத் துண்டுக்கு நடுவே மலை முளைத்து, மரங்கள் எழுந்து, காடுகள் பரவிக் கிடக்கின்றன. எந்த வளத்தின் கடைசித் தருணமென தெரியவில்லை, சிறிய குட்டையின் நடுவே மேயும் வாத்துக் கூட்டங்களில் டைனோசர் பிறந்து முட்டையிடுகிறது. உழைப்பின் கூலியாகக் கிடைக்கும் முட்டை தோழமைக்குப் பரிசாகப் போகிறது.
தன்னைத்தானே சிரிக்க வைக்க தெரிந்து கொள்ள முடியாத ஒருவனால் உடன் இருப்பவர்களை ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது. படம் பார்த்து நான் அதிகமாகவே சிரித்தேன். அரங்கம் முழுவதும் சிரிப்பலை ஓயவேயில்லை. வலியை மறக்கடிக்கும் சிரிப்பு அது. விடிந்தால் என்ன நடக்குமோ என்று அச்சப்பட்டுக்கொண்டே இருப்பவர்களின் அச்சத்தை மறக்கடிக்கும் கனவில் சற்று வாழ்ந்துவிடத் துணியும் நீண்ட தூக்கத்தை விரும்புபவர்களின் சிரிப்பு.
இதே அனுபவங்களை சில படங்கள் கொடுத்திருக்கின்றன. ஆனாலும் இன்னமும் இதைப் போன்ற படங்களை மனம் கேட்கிறதென்றால் அதன் பற்றாக்குறை அவ்வளவு பெரியது. அதையும் ராம் தருவார் என நம்புகிறேன்.
THE PURSUIT OF HAPPYNESS
LIFE IS BEAUTIFUL
பறந்து போ
நான் இந்த வரிசை இன்னும் தொடர வேண்டுமென விரும்புகிறேன்.
என் மகனையும் என் நண்பர்களையும் தியேட்டருக்கு அழைத்துச் செல்வேன். அவர்கள் சிரிப்பதைப் பார்க்கவேண்டும். அவர்களின் உளறல்களைக் கேட்க வேண்டும். அவர்களை அதிலிருந்து நான் அதிகமாக புரிந்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
சியர்ஸ் ராம்











