காயத்ரி ஆர்.
“இயக்குநர் சாரா பாலி”
சாரா பாலி வாழ்க்கையின் ஏற்றங்களையும் இறக்கங்களையும் அடுத்தடுத்து கண்டு கொண்டிருந்தவர். சாரா கனடா நாட்டைச் சேர்ந்தவர். நான்கு வயதில் நடிக்கத் தொடங்கினார். சிறுமி சாராவை கனடா நாட்டில் எல்லோருக்கும் தெரிந்திருந்தது. பிறகு பல ஹாலிவுட் படங்களிலும் நடித்தார். இவரது பதினொராவது வயதில் இவரது அம்மா இறந்து போக, யாருடைய உதவியுமில்லாமல் அடுத்தடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டியிருந்தது. அப்போதெல்லாம் நடிப்பை விட அவருக்குள் இருந்த எழுத்தாளரே அவரை இயக்கிக் கொண்டிருந்தார். நடிப்பெல்லாம் போதும் என்று சாரா முடிவெடுத்திருந்தபோது பிரபல தயாரிப்பு நிறுவனங்கள் அவரைத் தங்களது படங்களில் நடிக்கக் கேட்டுக் கொண்டிருந்தனர். படங்கள் இயக்குவதும், எழுதுவதும் தான் இனி தான் செய்ய வேண்டியது என்று அவர் முடிவெடுத்திருந்தார். தன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து ஆவணப்படத்தை இயக்கினார். அலிஸ் மன்றோவின் சிறுகதையை ‘AWAY FROM HER’ என்று படமாக இயக்கினார். இந்தப் படத்துக்காக சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தார் சாரா.
சமீபத்தில் இவர் இயக்கிய WOMEN TALKING பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. நம்பமுடியாத, ஆனால் நடந்த உண்மையான சம்பவத்தைக் கொண்டு எழுதப்பட்ட நாவலை அடிப்படையாகக் கொண்டு சாரா பாலி இந்தப் படத்தினை இயக்கியிருந்தார்.
படம் முழுவதுமே பெண்கள் தங்களுக்கு நடந்ததை பேசிக்கொண்டே இருப்பது போன்ற காட்சிகள். ஆனால், கதையின் ஆழமும், உரையாடலும் நம்மை அசைய விடாமல் அமர வைத்திருக்கும்.
இது போன்ற படத்தை இயக்குவதற்கு ஒரு முதிர்ச்சி வேண்டும். அது சாராபாலியிடம் இருக்கிறது. சாரா இயக்கிய படங்களில் மிக தேர்ச்சி கொண்டதும், அடுத்தடுத்த கட்டங்களில் அவர் இயக்கப்போகும் படங்களுக்காக ஆர்வத்தைத் தூண்டுவதுமாக WOMEN TALKING அமைந்திருக்கிறது.
அவரது நேர்காணலின் மொழிபெயர்ப்பு இது:
நாவல்களை படமாக எடுப்பதைவிட நீங்கள் ஒரிஜினலாக எழுதுவதை விரும்புகிறீர்களா?
நிச்சயமாக! அசலான, நேரடியான கதை சொல்லல்களை விரும்பினாலும் இம்மாதிரி படைப்புகளைத் தழுவி எடுப்பதில் ஒரு வசதி இருக்கிறது. சிறுகதைகளில் இருந்து எடுத்தாளும்போது அது உங்களுடைய கதை இல்லையாதலால் பிடிக்காமல் போக வாய்ப்பில்லை. உங்கள் கதையாக இருந்தால் சில சமயம் அதில் உங்களுக்கு சந்தேகம் வரலாம். சமயத்தில் உங்களை நீங்கள் வெறுக்கக்கூட வாய்ப்புண்டு. ஆனால் உங்களுக்குப் பிடித்த புத்தகத்தோடு நீங்கள் சுற்றித் திரியும்போதும், சில சமயம் அக்கதை சரியாக உங்களுக்குப் புரிவதற்கு நீங்கள் மெனக்கெட்டாலும்கூட அது தோல்வியடைந்தால் உங்கள் சொந்தக் கதை தோல்வியைப்போல் அது பாதிப்பை ஏற்படுத்தாது. ஒரு புத்தகத்தை தழுவி எடுப்பதில் பேரானந்தம் இருக்கிறது. ஏனென்றால் நமக்குப் பிடித்த புத்தகத்துடன் வாழும் அந்தக் காலகட்டம், வாழ்க்கையின் ஆகச் சிறந்த விஷயங்களுள் ஒன்றாக நினைக்கிறேன். எனவே நான் கதைகளில் இருந்து எடுத்தாளுவதையும்,, எனது கதைகளை இயக்குவதையும் மேற்கொள்வேன். இரண்டுமே எனக்கு விருப்பமானது.
உங்களுக்கு புகழைப் பெற்றுத் தந்த படங்களுள் ஒன்றான Women talking படம் கூட புத்தகத்தில் இருந்து தழுவப்பட்டது தான் இல்லையா? புத்தகத்தில் உங்களை எது ஈர்த்தது?
அடிப்படை விஷயங்களில் அந்தப் பெண்களுக்குள் வேற்றுமை இருந்தாலும் கூட, தங்களை வன்புணர்வு செய்த ஆண்களுக்கு எதிராக செயல்பட, ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மத காலனியின் உள்ள அந்தப் பெண்கள் சிலர் ஒன்றாகச் சேரும் கதை என்னை வெகுவாகக் கவர்ந்தது. அவர்களுக்கு முன் இருந்தது மூன்று கேள்விகள். அந்த சமூகத்திலிருந்து வெளியேறலாமா? அங்கேயே இருந்து போராடலாமா? இல்லை ஒன்றும் செய்யாமல் மன்னித்து விட்டுவிடலாமா? இந்தப் பெண்கள் இதை விவாதித்து வாக்களிக்க வேண்டியிருந்தது. இது எனக்கு மிகவும் புரட்சிகரமான விஷயமாகத் தோன்றியது. மட்டுமல்லாமல் சிறந்த நடிகர்களை இந்தப் பாத்திரங்களில் நடிக்க வைக்கும்போது அவர்கள் எப்படி விவாதிப்பார்கள், நடிப்பார்கள் என்ற எண்ணம் எனக்கு மிகவும் உற்சாகத்தைக் கொடுத்தது.
புத்தகத்தைப் படிக்கும்போதே அதை சினிமாவாக கற்பனை செய்தீர்களா? படிக்கும்போது அது சினிமாத்தனமான கதையாகத் தெரியவில்லையே.
ஆமாம். நான் அப்படித்தான் கற்பனை செய்தேன். நீங்கள் சொன்னதுபோல் இந்தப் படத்தை காவியமாக மாற்றுவது எப்படி என்ற சவால் இருந்தது. வெறுமனே பலர் குழுவாக அமர்ந்திருப்பதை மட்டும் காட்டாமல், எப்படி அல்ட்ரா வைட் (ultra wide) ஸ்கிரீனில் அந்த அட்டகாசமான நிலப்பரப்பையும், ஒவ்வொருவருடைய நம்பிக்கையையும் காட்டுவது என்ற கேள்வி இருந்தது. உலகின் சிறந்த நடிகர்கள், ஒரு அறையில் ஒன்று சேர்ந்து இந்த விவாதத்தை நடத்தினால் எப்படி இருக்கும் என்ற எண்ணமே எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது.
நடிகர்களின் தேர்வு மிக முக்கியமானதாக இருந்திருக்கும் இல்லையா?
ஆமாம். சுவாரசியமாக இருந்தது. அற்புதமான சில நடிகர்களைக் கண்டுபிடித்தேன். பின் காத்திருந்தேன். வேறு எந்த நடிகர்களெல்லாம் இருக்கிறார்கள்? என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? ஒரு நடிகரை ஒப்பந்தம் செய்துவிட்டு பின் அடுத்த நடிகரைத் தேடவில்லை. ஒட்டுமொத்தமாக ஒரே சமயத்தில் அனைவரையும் ஒப்பந்தம் செய்தேன். நடிகர்களைத் தேர்வு செய்வது சிக்கலானது. யாராவது பாதியில் முடியாது என்று சொல்லி விடுவார்களோ என்ற பயம் எப்போதும் இருக்கும். அதனால் குழுவாக வேலை செய்ய அவர்கள் சௌகரியமாக உணர்கிறார்களா, அவர்களை ஈர்ப்பது என்ன, என்னென்ன சவால்கள் அவர்களுக்குத் தேவையாக இருக்கிறது என்பதையெல்லாம் புரிந்து கொள்வது மிக அவசியம்.
Claire Foy, Frances McDormand, Rooney Mara போன்ற பிரபல நடிகர்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றுவதைப் பார்க்க உங்களுக்கு எப்படி இருந்தது? நீங்கள் நடிகையாக இருந்த காலத்தை மிஸ் செய்தீர்களா?
அந்த நாட்களெல்லாம் மறந்து வெகு காலமாகிவிட்டது. அந்த மனநிலையிலிருந்து நான் எப்போதோ வெளிவந்து விட்டேன். என்றைக்காவது ஒரு நாள் அதைப் பற்றி நினைப்பதுண்டு. மறுபடியும் நடிக்கப் போகலாமா என்று நினைப்பதுண்டு. ஆனால் அந்த எண்ணம் சீக்கிரம் மறைந்துவிடும். இப்போதே நடிக்க வேண்டும் என்ற அவசரமெல்லாம் ஒன்றுமில்லை. பார்க்கலாம்.
நடிப்பிலிருந்து விலகி படம் இயக்க வந்ததற்கு ஏதேனும் குறிப்பிட்ட சம்பவம் காரணமா?
அது ஒரு சுவாரஸ்யமான சம்பவம்! முதன்முதலாக ஒரு குறும்படத்தை இயக்கியபோது அந்த அனுபவம் போதை தருவதாக இருந்தது. ஆனால் முக்கியமான விஷயம், நான் நடித்த கடைசி இரண்டு படங்கள் எனக்கு பயங்கரமான அனுபவங்களைக் கொடுத்தன. அதுவும் அடுத்தடுத்து நடந்த இரண்டு சம்பவங்கள் என்னை மிகவும் பாதித்தன. ஒரு சந்தர்ப்பத்தில், மிகவும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில், நார்சிசிஸ்ட் இயக்குநர்களிடம் மாட்டிக்கொண்ட போது “போதும்! இனி இவர்கள் தயவில் இருந்தால் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்படுவேன்” என்று நினைத்தேன். மீண்டும் நடிக்க வேண்டும் என்று நான் நினைப்பதற்கான ஒரே உந்துதல், நடித்து நல்ல அனுபவங்களைப் பெற்று அந்த கெட்ட அனுபவங்களை மறக்கவேண்டும் என்பது மட்டுமே.
காலம் மாறிக்கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். ஒரு இயக்குநராக நீங்கள் சரியான சூழ்நிலை அமைவதற்காக பாடுபடுகிறீர்களா?
ஆமாம். பல வகையில் மாறியிருக்கிறது. என்னுடைய கடைசி இரண்டு படங்கள் பற்றி நினைக்கிறேன். இப்போது அது போன்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்பில்லை. அப்படி நடந்தாலும் யாராவது குரல் எழுப்ப வாய்ப்பும் இருக்கிறது. உங்களுக்குத் தீங்கு விளைவித்த சூழலுக்குள் சென்று அந்த சூழலை மேம்படுத்துவதைவிட வாழ்க்கையில் சிறந்தது ஒன்றுமில்லை. அது மட்டுமே பழைய வலியை மறக்கடிக்க உதவும். படத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் அக்கறை எடுத்துக்கொண்டு கவனித்ததை எனக்குக் கிடைத்த பாக்கியமாகக் கருதுகிறேன். நீண்ட நேரம் வேலை செய்வதைக் குறைத்துக்கொண்டு, வேலை செய்பவர்கள் ஒவ்வொரு இரவும் தங்கள் குடும்பத்துடன் இருக்குமாறு பார்த்துக்கொண்டேன். ஏதாவது தவறு நடந்தால் சிகிச்சையளிக்க ஒரு தெரபிஸ்ட்(therapist) ஒருவரையும் எங்களுடனே வைத்திருந்தோம். தேவைப்படும்போதெல்லாம் ஓய்வு எடுத்தோம். அந்தச் சூழல் மிக நன்றாக இருந்தது.
நீங்கள் வாழ்ந்த இடத்தைப் பற்றி சொல்கிறீர்களா?
டொரண்டோவின் ஒதுக்குப்புறத்தில் இருந்த நார்த் யார்க்கில் வளர்ந்தேன். என்னுடைய தாயார் இறக்கும் வரை, என் மூத்த சகோதர சகோதரிகள் அந்த இடத்தை விட்டுச் செல்லும் வரை அந்த இடம் மிகவும் கலகலப்பான இடமாக இருந்தது. இசையும், அரசியல் அரட்டைகளும், புத்தகங்களைப் பற்றிய விமர்சனங்களும், சிரிப்புமாக வாழ்க்கை இருந்தது. வீட்டின் கடைக்குட்டியாக இருப்பது சந்தோஷமான விஷயம். ஏனென்றால் மற்றவர்கள் அங்கு உருவாக்கும் சூழ்நிலைக்குள் நீங்கள் கவலையின்றி வலம் வரலாம்.
அதற்காக எல்லாமே சரியாக இருந்து என்றில்லை. அம்மாதிரியான கலகலப்பான குழப்பமான சூழ்நிலையில் சிலருடைய உணர்வுகள் கவனிக்கப்படாமல் போகலாம். மட்டுமல்லாமல் என் வீட்டினர்களுக்கு கத்தி போன்ற கூர்மையான நகைச்சுவை உணர்வு உண்டு. மத நம்பிக்கைகளும் இல்லை. அழ நினைக்கும்போது சிரிப்பார்கள். என் தாய் கடுமையாக உழைத்தாள். வீட்டு வேலையையும் குழந்தைகளை வளர்க்கும் வேலையையும் அவளே செய்தாள். அந்த வேலைகளில் உதவி செய்ய அவளுக்கு யாருமில்லை. குறிப்பாக என் தந்தையிடமிருந்து ஒரு உதவியும் கிடைக்கவில்லை.
உங்களுடைய பதினோராவது வயதில் அம்மா இறந்தவுடன் உங்கள் குழந்தைப் பருவம் சட்டென்று முடிவுக்கு வந்தது. அந்த நேரத்தில் உங்கள் உடன்பிறப்புகள் வீட்டை விட்டு வெளியேறியிருந்தார்கள். அதனால் நீங்கள் மன அழுத்தத்தால் பீடிக்கப்பட்ட தந்தையுடன் வசித்து வந்தீர்கள். இந்தக் காலத்தைப் பற்றிய ஒரு கட்டுரை புத்தகத்தில் இருக்கிறது. Stories We Tell படத்துக்குப் பிறகு உங்கள் தந்தை அவர் ஹீரோவாக படத்தில் சித்தரிக்கப்பட்டது தனக்கு விநோதமாக இருப்பதாகச் சொன்னதாக நீங்கள் எழுதுகிறீர்கள். புத்தகத்தில் நீங்கள் எழுதியிருப்பது கிட்டத்தட்ட ஒரு திருத்தம்போல் தெரிகிறது. உங்கள் தந்தையைப் பற்றி படமாக்குவதை விட அவரைப் பற்றி எழுதுவது எப்படி இருந்தது?
அந்தப் படத்தில் ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் என்னுடைய குரலும் என் அம்மாவின் குரலும் இருக்காது. என்னுடைய கதையை அந்தப் படத்தில் நான் சொல்லவேயில்லை. எல்லோருடைய கதையும் எப்படி இருக்க வேண்டும் என்று நான் முடிவு செய்ததால், என் கதையை என் பார்வையில் சொல்வது நியாயமானதாக இருக்காது என்று நினைத்தேன். கோரஸான பல குரல்கள் இருக்கும் அந்தப் படத்தில் வெறும் என்னுடைய பார்வையை மட்டுமே சொல்வதுபோல் தோன்றிவிடுமோ என்றுதான் சொல்லவில்லை.
நம்பமுடியாத அளவு பகுத்தறிவு என் அப்பாவிடம் இருந்தது. அதுவே மற்றவர்கள் பொறாமைப்படும், காயப்படும் சூழ்நிலைகளில் அவரை தாராள மனப்பான்மையுடன் நடக்க வைத்தது. அவருடைய பெரிய தகுதி அது. படம் முடிந்த சிறிது நேரத்திலேயே “எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது. நீ என்னை ஒருவித துறவிபோல் சித்தரித்திருக்கிறாய். நான் அப்படி இல்லை. நான் ஒரு சுயநலவாதி, சோம்பேறி” என்று கூறினார். அந்த வகையில் அவர் தன்னைப் பற்றி நன்றாகப் புரிந்து வைத்திருந்தார்.
அந்தப் படத்தில் அவரைப் பற்றி பொய் சொன்னதாக நான் நினைக்கவில்லை. அது, அவர் யார் என்பதற்கான ஒரு பெரிய அம்சம் என்றும், அவரைப் பற்றி நான் எப்படி உணர்ந்தேன் என்பதற்கான வெளிப்பாடு என்றும் நான் நினைக்கிறேன். அவரைப் பற்றிய எதிர்மறையான விஷயங்கள் படத்தில் இடம்பெறவில்லை. அவர் உயிருடன் இருந்தபோது என்னால் அதை வெளிப்படுத்தியிருக்கவே முடியாது. நான் எப்போதுமே அவர்மீது அன்புடன் இருந்தேன் என்று சொல்ல மாட்டேன். ஆனால் என் பார்வையிலிருந்து அவரைப்பற்றிய கதையை அவர் உயிருடன் இருக்கும்வரை என்னால் சொல்லியிருக்க முடியும் என்று தோன்றவில்லை.
இனி தியேட்டருக்குச் சென்று மக்கள் சினிமா பார்க்க மாட்டார்களோ?
இந்த இலையுதிர்காலத்தில் நான் பார்த்தவரை யாரும் சினிமாவுக்குப் போகவில்லை. Top Gun அல்லது Avatar படத்தைத் தவிர வேறு படங்களைப் பார்க்கப் போகவில்லை. The Fabelmans, Tár போன்ற படங்களுக்குக் கூட்டம் இருக்கும் என்று நினைத்ததும் பொய்யானது. தியேட்டரில் பலருடன் ஒருசேர படம் பார்க்கும் கூட்டு அனுபவத்தை மக்கள் கைவிடுவது சங்கடமாக இருக்கிறது. ஒரு பெரிய மக்கள் கூட்டத்துடன் படம் பார்ப்பதன் அனுபவம், ஃபோனைப் பார்ப்பதற்காக 800 முறை ஒரு படத்தை நிறுத்தி நிறுத்திப் பார்ப்பதில் எப்படி வரும்.
இப்போதெல்லாம் தியேட்டருக்குப் போக நேரம் இருக்கிறதா உங்களுக்கு?
முன்புபோல் இல்லை என்ற வருத்தம் இருந்தாலும் மூன்று குழந்தைகள் இருப்பதால் பெரிதாக அதைப் பற்றி நினைப்பதில்லை. பல விஷயங்களை வைத்துக்கொண்டு போராட வேண்டியிருப்பதாலும் படம் பார்க்க அது மட்டுமே வழி இல்லை என்பதாலும் வாழ்க்கை அப்படியே போய்க்கொண்டிருக்கிறது. நேரம் கிடைப்பது கடினமாக இருக்கிறது. ஆனால் தியேட்டருக்குப் போக நேரம் கிடைத்தால் ரொம்ப த்ரில்லாக இருக்கும்.
அம்மாவாக, இயக்குநராக, திரைக்கதையாசிரியராக என்று எப்படி எல்லாவற்றையும் சமாளிக்கிறீர்கள்?
சொல்லப் போனால், எப்படி மற்றவர்கள் ஒரே சமயத்தில் பல விஷயங்களை சமாளிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. மற்றவர்களைப் போல் பல விஷயங்களை ஒரே சமயத்தில் சமாளிப்பது எனக்குக் கொஞ்சம் கடினம். ஆனால் நான் நிறைய விமானப் பயணங்கள் மேற்கொள்வதால் கொஞ்சம் சௌகரியமாக இருக்கிறது. உங்களுக்கு குழந்தைகள் இருந்தால் விமானப் பயணம் ஒரு வரப் பிரசாதம். நிறைய வேலை செய்ய முடியும். இப்போது நான் ஒரு நாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன்.











