ஷாலினி பிரியதர்ஷினி
வடகிழக்கு இந்திய சினிமா – ஓர் அறிமுகம்
தென்மேற்குப் பருவ மழைக்காலம் முடிந்து மரஞ்செடி கொடிகள் பூத்துக் குலுங்கும் இரண்டாம் வசந்த காலமான அக்டோபர் நவம்பர் மாதங்களில் ஷில்லாங் நகரம் களைகட்டத் தொடங்கிவிடும். உலகெங்கிலுமிருந்து கலை இலக்கிய ஆர்வலர்கள் ஒன்று கூடும் செர்ரி ப்ளாசம் விழாவிற்கான ஏற்பாடுகளில் மொத்த நகரமுமே கொண்டாட்ட அரிதாரம் பூசியிருக்கும்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு அவ்விழாவில் பங்கேற்கும் ஆவலுடன் என் நண்பரை அழைத்துக் கொண்டு ஷில்லாங் சென்றிருந்தேன். பனிக்காலத்தை வரவேற்கும் குதூகலத்துடன் செர்ரி மரங்கள், வெண்சிவப்பு நிற மலர்களைச் சூடிக்கொண்டு காட்சியளித்தன. அங்கு ஒரு ஹோம்ஸ்டேவில் நாங்கள் தங்கினோம். கிரேஸ் ஹோம்ஸ்டே. ஒரு வீட்டையே தங்கும் விடுதியாக மாற்றியிருந்தார்கள். ஒரு பெண்மணியும் அவருடைய மகளும் அவ்விடுதியை நிர்வகித்து வந்தனர்.
கிரேஸ் ஹோம்ஸ்டேவின் சுவர்களைப் பல்வேறு வடக்கிழக்கிந்திய கலைஞர்களின் புகைப்படங்களும் ஓவியங்களும் அலங்கரித்தன. அவர்களில் தாகூரையும் பூபென் ஹஜாரிகாவையும் தவிர வேறு யாரையும் என்னால் அடையாளம் காண முடியவில்லை. திருமதி கிரேஸின் மகள் எங்களுக்குத் தேநீர் தயாரித்து எடுத்து வந்தாள். அவளிடம் அப்புகைப்படங்களில் இருப்பவர்கள் யாரென்று கேட்டேன். அவள் அவர்கள் ஒவ்வொருவரின் பெயரைக் கூறியதோடு மட்டுமல்லாமல் அவர்கள் எந்தக் கலையில் சிறப்புற்று விளங்கினர் என்பதையும் கூறினாள். அவளுடைய அறிவும் ரசனையும் என்னைத் திகைப்பில் ஆழ்த்தின.
அன்று மாலை நகரத்தின் மையத்தில் அமைந்திருந்த பெரிய விளையாட்டுத்திடலில் அரங்கம் அமைக்கப்பட்டு பல்வேறு வகையான இசை நிகழ்ச்சிகள் நடந்தன. உலகின் பல பகுதிகளிலிருந்து இசைக் கலைஞர்கள் வந்திருந்தனர். அன்று நடுநிசியைக் கடந்துதான் நிகழ்ச்சிகள் முடிந்தன. குளிரில் நடுங்கிக்கொண்டே வந்த எங்களுக்கு ஹீட்டர் போட்டு வெப்பமாக்கியிருந்த அறை சொர்க்கலோகமாகத் தெரிந்தது. திருமதி கிரேஸைத் தொலைபேசியில் அழைத்து நன்றி கூறினேன். அவருடைய குரலிலும் அதே கதகதப்பு. மறுநாள் காலை தேநீருக்குத் தனது வீட்டிற்கு வருமாறு எங்களை அழைத்தார்.
இலக்கியக் கருத்தரங்கம் மறுநாள் மாலை நடக்கவிருந்ததால், பகல் நேரத்தை அறையிலேயே கழிக்கலாம் என்று நானும் நண்பரும் முடிவெடுத்தோம். என்னுடன் வந்த நண்பர் மனைவியைப் பிரிந்த தவிப்பில் இருந்தார் போலும். ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை தன் மனைவியைத் தொலைபேசியில் அழைத்துப் பேசினார். வீடியோ காலில் அழைத்து ஷில்லாங்கின் அழகைச் சிலாகித்துக் கொண்டிருந்தார். அவரை அறையிலேயே விட்டுவிட்டு நான் திருமதி கிரேஸைச் சந்திக்கச் சென்றேன்.
என் வருகையை எதிர்பார்த்திருந்ததுபோல் திருமதி கிரேஸ் என்னை வரவேற்றார். தூய வெண்ணிற பீங்கான் ஜாடியில் அழகிய செர்ரி மலர்களின் ஓவியம் தீட்டப்பட்டிருந்தது. ஆவி பறக்கும் தேநீரை ஒரு குவளையில் ஊற்றி என்னிடம் நீட்டினார் திருமதி கிரேஸ். என் பார்வை அந்தப் பீங்கான் ஜாடியிலிருந்து அகலவில்லை. அதைக் கவனித்த அவர், தன் மகளை நோக்கி விரல் நீட்டி, “அவள் வரைந்த ஓவியம்தான்” என்றார். அவருடைய மகள் அப்போதும் ஏதோ ஓவியம் வரைந்து கொண்டிருந்தாள். தலையை நிமிர்த்திப் புன்னகைத்துவிட்டு மீண்டும் தன் வேலையில் மும்முரமானாள். “ஓவியத்தில் அதிக ஈடுபாடு உள்ளவளா?” என்றேன். “அப்படி இல்லை… பொதுவாகவே கலை நயத்துடன் வாழ்வது எங்களுக்குப் பிடிக்கும்” என்றார் திருமதி கிரேஸ். அவரது வரவேற்பறையிலிருந்த அடுக்ககம் முழுவதும் புத்தகங்கள். புத்தகம் வாசிப்பதும், பூச்செடிகள் வளர்ப்பதும் தனக்குப் பிடித்தமானவை என்று அவர் கூறினார்.
என்னைப்பற்றி விசாரித்தார் திருமதி கிரேஸ். நான் எழுத்துத் துறையில் இருக்கிறேன் என்று கூறியதும் அவர் முகத்தில் அணுக்கத்தை வெளிப்படுத்தும் புன்னகை ஒன்று மலர்ந்தது. நாங்கள் வெகு நேரம் உரையாடினோம். பெண்கள் பேசும் வழக்கமான தலைப்புகளல்லாமல் எங்கள் உரையாடல் பயணங்கள், சினிமா, இலக்கியம், இசை என்று பல புள்ளிகளைத் தொட்டமைந்தது.
வடகிழக்கு இந்தியாவின் சினிமா பற்றிய அவரது கோணம், அதுவரை நான் கொண்டிருந்த புரிதலுக்கு முற்றிலும் வேறாக இருந்தது. “நாங்கள் பெரிய பெரிய மேடைகளுக்காகக் காத்திருப்பவர்கள் அல்ல. பொதுவாக எங்களுக்குப் பெரிய திரை சின்னத்திரை என்ற வணிகரீதியான பார்வை இருப்பதில்லை. தேநீருக்காகக் கூடும் நேரத்தில் ஓர் இசைக் கச்சேரியையோ நாடகத்தையோ எங்களால் அரங்கேற்றிவிட முடியும்” என்றார். “எங்கள் இனங்களின் பாரம்பரியக் கலைகளே எங்களுக்கான அடையாளங்கள். நாங்கள் நிறைவாகவும் உணர்கிறோம்” என்றார். உங்களுக்கு சினிமா படங்களைப்பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், என் மகன் டேனியலிடம் கேளுங்கள். அவன் உங்கள் ஊரில்தான் சினிமா சம்பந்தமாக ஏதோ படிக்கிறான்” என்றார். “செர்ரி ப்ளாசம் விழாவிற்காக வந்திருக்கிறான். நன்றாக கிட்டார் வாசிப்பான். நேற்றிரவு நிகழ்ச்சியில் அவனும் வாசித்தான்” என்று கூறியபோது திருமதி கிரேஸ் முகத்தில் ததும்பிய பெருமிதம் பார்ப்பதற்கு அழகாக இருந்தது.
“சென்னையில் படிக்கிறாரா” என்றேன்.
“இல்லை பெங்களூருவில்” என்றார்.
மதிய உணவிற்காக நாங்கள் மீண்டும் சந்தித்தபோது என் நண்பரும் என்னுடன் வந்தார். டேனியலும் வந்திருந்தார். திருமதி கிரேஸை உட்காரச் சொல்லிவிட்டு டேனியல்தான் எங்களுக்கு உணவு பரிமாறினார். இரவு நேர கிட்டார் நிகழ்ச்சியின் களியாட்ட அடையாளங்கள் ஏதுமில்லாமல் அமைதியாக இருந்தார் டேனியல். சினிமா பாணியில் சொல்வதென்றால் அவரிடம் ஒரு Pan Indian சாயல் தெரிந்தது. பெங்களூரு அவரை நிறையவே மாற்றியிருந்தது. அவரது ஆங்கிலம் தெளிவாக இருந்தது. ஹிந்தியும் சரளமாகப் பேசினார். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் திரைப்படங்களைக் குறித்து அவர் கூறிய பல்வேறு விஷயங்கள், திருமதி கிரேஸ் கொண்டிருந்த பார்வையோடு சில இடங்களில் ஒத்துப்போவதுபோல் தோன்றினாலும், டேனியலிடம் இந்தத் தலைமுறையின் சிறப்பியல்பான Inclusiveness அதிகம் வெளிப்பட்டது.
“வடகிழக்கு இந்தியாவின் சினிமா பயணம் தொடங்கியதென்னவோ அசாம் மாநிலத்தின் கலாசாரத் தலைநகரமான தேஜ்பூரின் தேயிலை தோட்டங்களில்தான்” என்றார் டேனியல். அவர் பேச ஆரம்பித்ததும் நான் குறிப்பெடுத்துக் கொள்ள ஆரம்பித்தேன்.
ராஜஸ்தானிலிருந்து வர்த்தகம் செய்வதற்காக பல தலைமுறைகளுக்கு முன்பே அசாமிற்கு வந்துவிட்ட ஜோதி பிரசாத் அகர்வல்லா என்பவர், தனது சொந்தத் தேயிலை தோட்டத்தில் தற்காலிகமாக ஒரு சினிமா ஸ்டுடியோவைத் தொடங்கினார். 1935ல் வெளிவந்த ‘ஜோய்மொதி’ என்ற திரைப்படம்தான் முதன்முதலில் வெளியான அசாமிய மொழி திரைப்படம். அசாமிய இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கப்படும் லக்ஷ்மிநாத் பேஜ்பருவா எழுதிய நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட அந்தத் திரைப்படம், அஹோம் ராஜ்ஜியத்தின் விடுதலைக்காக இளவரசி ஜோய்மொதி செய்த தியாகங்களைப் பற்றி பேசுவதாக இருந்தது.
புகழ்பெற்ற அசாமிய இசை கலைஞரான பூபென் ஹஜாரிகாவை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் திரு ஜோதிபிரசாத் அகர்வல்லாதான். கல்பனா லஜ்மி இயக்கிய ருடாலி திரைப்படத்தில் இடம்பெற்ற ‘Dil Hoom Hoom Kare…’ பாடலை இயற்றிப் பாடியவர் திரு பூபென் ஹஜாரிகா.
“ஆமாம் ஆமாம்…அந்தப் பாடல் எனக்குத் தெரியும். டிம்பிள் கபாடியா நடித்த படம்தானே?” என்று நான் டேனியலை இடைமறித்தேன்.
வடகிழக்கு இந்தியா என்று அழைக்கப்படும் பகுதியானது மேகாலயா, நாகாலாந்து, அசாமிலிருந்து பிரிந்த மிஜோரம், சிக்கிம் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியதாகும். முதலில் இந்தியாவாகவும் பின்னர் வடகிழக்கு இந்தியாகவும் உருமாறியபின் அம்மாநிலங்களின் சினிமாத்துறையின் பயணம் தொடங்கியது எனலாம். மேகாலயாவைத்தவிர மற்ற மாநிலங்களுக்கு சினிமா அண்மை காலத்து பரிச்சயம்தான்.
அசாம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களின் திரைப்படங்களைத் தவிர (NFDC முன்னெடுப்புகளால்) மற்ற வடகிழக்குப் பிராந்தியங்களின் திரைப்படங்கள் அதிகம் பேசப்படாததற்கு முக்கிய காரணம், அவர்களின் மொழி. ஒவ்வொரு இனத்திற்கு ஒரு தனிப்பட்ட மொழி இருக்கும். சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்ட dialects எனும் வழக்காற்று மொழிகளைக் கொண்ட வடகிழக்கு இந்தியாவிற்கு அந்த அதீதமே குறையாகவும் மாறிவிட்டது என்று சற்று வருத்தமாகவே கூறினார் டேனியல்.
அதே நேரத்தில், இங்கு சினிமா வெறும் வர்த்தகம் மட்டுமல்ல என்பதையும் தெளிவாகக் கூறினார். சரியான முதலீடுகள் இல்லாதது, திரையரங்குகளின் பற்றாக்குறை, இயற்கை சீற்றங்களால் தொடர் பாதிப்புக்குள்ளாகும் வாழ்க்கைமுறை என்ற பல்வேறு இன்னல்களையும் மீறி, வடகிழக்கு இந்தியாவின் திரைத்துறையினர், தங்கள் சமூகத்தின் கனவுகளைக் கதைகளாகப் பின்னி உலகளவில் தங்கள் முத்திரையைத் தொடர்ந்து பதித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.
ஆனாலும், வடக்கிழக்கு இந்தியாவின் பல விஷயங்கள் பிரதான இந்தியாவின் பார்வைக்கு வராததுபோல அவர்களின் சினிமாவும் பெரும்பான்மையினரின் பார்வைக்கு வராமலே இருக்கிறது. இந்தப் பாராமுகத்திற்கு எதிர்வினையாக வடகிழக்கு மாநிலங்களின் பல இடங்களில் திரையரங்குகள் மூடப்பட்டன. தங்கள் மொழி படங்களைத் தவிர வேறு மாநில படங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
தன் சமூகத்தை நேர்மையாகப் பிரதிபலிக்கும் திரைப்படங்களே உலக சினிமா என்ற உயர்வைப் பெறுகின்றன என்று யாரோ கூறிக் கேட்டதாக நினைவிருக்கிறது. அவ்வகையில் வடகிழக்கிந்தியாவின் திரைப்படங்கள் உலக சினிமா ரசிகர்களின் கவனத்தைப் பெறக்கூடியவை என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
கடந்த சில வருடங்களாக OTT தளங்களின் வருகையால், வடகிழக்கு இந்திய மாநில திரைப்படங்களின்மீது புது வெளிச்சம் பாய்ந்திருக்கிறது எனலாம். உலக சினிமா ரசிகர்களுக்காக இந்தத் தளங்கள் தனித்தன்மை வாய்ந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து வழங்கிவருகின்றன. பாஸ்கர் ஹஜாரிகாவின் அசாமிய திரைப்படமான KOTHANODI (RIVER OF FABLES) என்ற திரைப்படத்தை முதன்முதலாகப் பிரபல OTT தளமான நெட்ப்ளிக்ஸ் வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து பல அற்புதமான வடகிழக்கிந்திய படங்களின் வரிசை இப்போது OTT தளங்களில் நீள்கிறது.
அசாமிய இயக்குநரான பாஸ்கர் ஹஜாரிகா இயக்கிய kothanodi திரைப்படம், லக்ஷ்மிநாத் பேஜ்பருவாவின் அசாமிய பாட்டிக் கதைகளின் தொகுப்பாகும். மனிதனுக்கும் இயற்கைக்கும் இயற்கைக்கு அப்பாற்பட்ட விஷயங்களுக்குமிடையேயான தொடர்பு எப்போதும் தெய்விகமானதாக இருக்க வேண்டுமென்பதில்லை என்ற கருத்தின் அடிப்படையில் அமைந்துள்ள நான்கு கதைகளின் தொகுப்பு ‘KothaNodi’.
ரீமா தாஸ் இயக்கிய ‘அந்தர்த்ரிஷ்டி’ மற்றும் ‘Village Rockstars’ திரைப்படங்கள் உலக அளவில் கவனம் பெற்றன. Village Rockstars, Toronto திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது.
இயக்குநர் பிரதிப் குர்பா தன் தாய் நிலமான மேகாலயாவின் கதைகளைத் தொடர்ந்து இயக்கி வருகிறார். Ri என்ற அரசியல் படத்தை இயக்கிய பிரதிப், Onataah என்ற திரைப்படத்தின் மூலம் தேசிய விருது உட்படப் பல விருதுகளைப் பெற்ற பிரதிப் உலக சினிமா ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் கவனம் பெற்றார். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒரு பெண்ணின் உணர்வு நிலைகள், அவள் தன் நம்பிக்கையை மீட்க எடுக்கும் முயற்சிகளை Onataah பேசுகிறது. இந்தப் படத்தைத் தழுவி மலையாளம், மராட்டி மற்றும் ஹிந்தி மொழிகளில் திரைப்படங்கள் வெளியாகின.
மேற்குறிப்பிட்டுள்ளவர்களைப்போல் இன்னும் பல கலைஞர்கள் வடகிழக்கு இந்தியாவின் சினிமா பதாகையை உலகளவில் உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். “இந்தியாவின் மற்ற பகுதிகளிடமிருந்து தொடர்பற்று இருப்பதே வெள்ளித் திரையில் வடகிழக்குப் பகுதியின் கதைகள் இடம்பெறாமல் போவதற்கான காரணங்களாகக் கூறப்பட்டாலும் அந்த நிலை வேகமாக மாறி வருவதாகவே எனக்குத் தோன்றுகிறது” என்றார் டேனியல். இயக்குநர் அனுபவ் சின்ஹா இயக்கிய Anek (2022) திரைப்படம், வடகிழக்கு இந்தியாவில் நிலவும் இனப் பிரச்சினைகளைத் தெளிவாகப் பேசுகிறது. அதேபோல் 2019ல் வெளிவந்த Axone திரைப்படம், டெல்லியில் வாழும் வடகிழக்கு இந்தியர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை நகைச்சுவையாகவும் நேர்மையாகவும் படம்பிடித்துக் காட்டுகிறது. பிரியங்கா சோப்ரா தயாரிப்பில் வெளியான Pahuna திரைப்படம், தீவிரவாதத் தாக்குதலால் நேபால் இந்திய எல்லையில் சிக்கிக்கொண்ட இரு சிறுவர்களின் கதையைப் பேசுகிறது.
டேனியலும் நாங்களும் பேசிக் கொண்டிருக்கையில் திருமதி கிரேஸ் மூன்று நான்கு முறை எங்களுக்குத் தேநீர் தந்திருப்பார் என்று நினைக்கிறேன். ஒருமுறைகூட அவர் சலித்துக்கொள்ளவில்லை.
“நீங்கள் என்ன படிக்கிறீர்கள் டேனியல்” என்றேன்.
வெட்கம் பூசிய குரலில் “Film Technology” என்றவர் “என்னிடம் நிறையக் கதைகள் இருக்கின்றன. திரைக்கதை எழுதப் பழகினால் போதும், சினிமா எடுத்துவிடலாம். உங்களுக்கு ஆங்கிலத்தில் ஸ்கிரிப்ட் எழுதுபவர்கள் யாரையாவது தெரியுமா?” என்றார்.
“ஓ..தெரியுமே! அவர் உங்களுடன் இரண்டு மணி நேரம் உரையாடிவிட்டு நான்கு கப் தேநீரும் அருந்திவிட்டார்” என்றேன்.
டேனியலின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. திருமதி கிரேஸ் என்னைக் கூர்ந்து பார்த்தார். ஒரு புதிய நட்பிற்கான அடித்தளமாக அந்தப் பார்வை இருந்தது.
நானும் டேனியலும் தொடர்ந்து பயணிக்கிறோம் எங்களுக்கான தேடல்களோடு.
OTT தளங்களில் காணக்கிடைக்கிற சில வடகிழக்குத் திரைப்படங்கள்
KHOJI- THE SEARCH – MUBI
KOTHANODI -SONYLIV
PAHUNA – AMAZON PRIME
BOKUL – MUBI
AAMIS – SONY LIV
AXONE – NETFLIX











