காயத்ரி ஆர்.
டேவிட் லிஞ்ச் (David Lynch) அமெரிக்கத் திரைப்பட இயக்குநர். தீவிரமான சினிமா ரசிகர்களின் விருப்பமான இயக்குநர். ஓவியரும் கூட. படங்களை இயக்க வருவதற்கு முன்பு ஓவியம் வரைவதில் ஆர்வம் காட்டினார். குறும்படங்களை இயக்கிக் கொண்டிருந்தவர் Eraserhead திரைப்படம் மூலமாக பிரபலமடைந்தார். இவரது படங்கள் யாவுமே இவரது சிந்தனைகளின் வெளிப்பாடுகள். ஒவ்வொரு படத்தினையும் வெவ்வேறு கண்ணோட்டத்தில் முற்றிலும் புதிய பார்வையுடன் தருவதில் அசாத்தியமானவர். விஞ்ஞானம், மெய்ஞானம் இரண்டிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த இவரது படங்கள் பல ஆண்டுகள் கழித்தும் புரிந்து கொள்வதற்கான புதிய பரிமாணங்களை கொண்டிருக்கின்றன.கடந்த ஜனவரியில் மரணமடைந்தார். தனது இறுதி காலங்களில் தியானத்தின் மீது பெரும் நம்பிக்கை கொண்டிருந்தார். அவருடைய நேர்காணலின் மொழிபெயர்ப்பு இது.
மிஸ்டர் லிஞ்ச், உங்களுக்கு அடிக்கடி கோபம் வருவதால் ஆழ்நிலை தியானத்தைக் கற்றுக்கொண்டீர்களா?
கோபம் கொள்ளும் பலரில் நானும் ஒருவனாக இருந்தேன். பொதுவாக மனிதர்கள் தங்களால் யார் மீது கோபத்தைக் காட்ட முடியுமோ அவர்கள் மீதுதான் காட்டுவார்கள். நான் என் முதல் மனைவியிடம் காட்டியிருக்கிறேன். என்ன நடந்ததென்றால், நான் தியானம் செய்ய ஆரம்பித்தேன். இரண்டு வாரங்கள் கழித்து அவள் என்னிடம் வந்து, “என்ன நடக்கிறது” என்றாள். நான், “என்ன சொல்கிறாய்” என்று கேட்டபோது, அவள் ‘எங்கே அந்தக் கோபம்’ என்றாள். அதற்குப்பின் அவள் என் கோபத்தைப் பார்க்கவேயில்லை. பல நேரங்களில் தியானம் செய்யத் தொடங்கும்போது, தங்களுக்குள் ஏற்படும் மாற்றத்தை அவர்களை விட அவர்களைச் சுற்றியுள்ள மற்றவர்களே கவனிக்கிறார்கள்.
ஏன் தியானம் செய்ய ஆரம்பித்தீர்கள்?
1973ல் ஆரம்பித்தேன். மனிதன் அதன் மூலமாக ஞானம் பெறலாம் என்ற எண்ணமே. மூளையில் ஐந்து அல்லது பத்து சதவீதத்தை மட்டுமே நாம் பயன்படுத்துகிறோம் என்ற கூற்று என்னைப் பைத்தியமாக்கியது. அப்படியானால் மற்ற பகுதி எதற்கு? எப்படி மூளையை முழுமையாக உபயோகிப்பது? அப்படி உபயோகித்தால் என்ன பெறலாம்? தியானம் என்பது ஜாகிங் அல்லது கடற்கரையில் வெயிலில் இளைப்பாறுவது போன்றது என்று பலர் சொன்னார்கள். தியானம் என்றால் என்ன என்பது பற்றிய தவறான புரிதலை இது காட்டுகிறது. தியானம் என்பது மனதினுள் ஆழமாகச் சென்று வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்ந்து, முழுமையாக, உண்மையாக அதை அனுபவிப்பதுதான். மனிதன் வாழ்வதும் அதற்காகவே.
உங்கள் திரைப்படங்கள் higher consciousnessஆல் (உயர்ந்த உணர்வால்) இயக்கப்படுவதால், உங்களை சிறந்த கலைஞன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
எனக்குத் தெரியவில்லை. தியானம் செய்வதால் சில யோசனைகள் நம் உள்ளே நாம் ஆழ்ந்து இருக்கும்போது கைவரக்கூடும். உள்ளுணர்வு வளரும். உணர்வும் சிந்தனையும் இணைந்த உள்ளுணர்வு ஒரு கலைஞனுக்கு முதல் கருவியாகும். நீங்கள் ஒரு ஓவியம் தீட்டும்போது உங்களுக்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று தெரியும். அதனால் ஓவியம் தீட்டுவதை நீங்கள் மிகவும் ரசிக்கிறீர்கள். படங்களும் அப்படித்தான். உழைப்பின் இன்பமும் எல்லாவற்றின் இன்பமும் அதிகரிக்கிறது. யோசனைகள் பாய்கின்றன, அதை நீங்கள் சரியாக உணர்கிறீர்கள். அது என்னவென்று உங்களுக்குத் தெரிகிறது. இது வளர்ந்து கொண்டே இருக்கும் ஞானம். மிகவும் அழகானது.
நீங்கள் இன்னும் அவ்வப்போது வருத்தமோ அல்லது மனச்சோர்வோ கொள்கிறீர்களா?
மனச்சோர்வையும் வெறுப்பையும் அவ்வப்போது உணருகிறேன். ஆனால் அவற்றின் பாதிப்பு கம்மியாகிக்கொண்டே வருகிறது. துன்பம் விலகத் தொடங்குகிறது. மனித இனம் துன்பத்தில் உழல்வதற்காக படைக்கப்பட்டது அல்ல. பேரின்பம் நமது இயல்பு. நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். மகிழ்ச்சியால் வாழ்க்கையை நிரப்புவது முற்றிலும் சாத்தியம். விழித்த நிலையில், உண்மையான மகிழ்வும் காரியங்கள் செய்வதில் மகிழ்ச்சியும் வேண்டும். இந்த மகிழ்ச்சி பேரின்பமாக மாறும்போது இன்பமான வாழ்க்கை மேலும் தீவிரமாகும்.
இது உங்கள் தினசரி வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்று தெளிவாக சொல்ல முடியுமா?
வாழ்க்கை எப்போதும்போல் இருந்தாலும் அதை நிச்சயமாக சிறப்பாகக் கடந்து செல்ல உங்களால் முடியும். என்னுடைய Dune பட அனுபவம் என்னை காலி செய்திருக்கும். அது மிகவும் கொடூரமான அனுபவமாக இருந்தது. எனக்குப் பிடிக்காத விஷயங்களை செய்ய நேர்ந்தது. நான் என்னை என் படங்களுடன் அடையாளப்படுத்திக் கொள்வதால், அந்தப் பட அனுபவம் என்னை பாதித்தது. தியானம் மட்டுமே மலைமுகட்டிலிருந்து நான் குதிக்காமல் என்னைக் காப்பாற்றியது. நீங்கள் அடர் பச்சைக் கண்ணாடி அணிந்து உலகத்தைப் பார்க்கலாம். அல்லது நீங்கள் உங்களுக்குள்ளே மூழ்கி தூய்மையான பேரின்ப உணர்வு, படைப்பாற்றல், புத்திசாலித்தனம் ஆகிய நன்மை பயக்கும் விஷயங்களை கண்டடையலாம். அது ரோஜா நிறக் கண்ணாடி. உலகமும் உங்களை அப்படிப் பார்க்கத் துவங்கும். வாழ்க்கை மேலும் சிறப்பாகும்.
உங்கள் படங்களைப் பார்த்தால் உலகை இருண்ட கண்ணாடி வழியாகப் பார்ப்பது போல் இருக்கிறது என்று நினைக்கிறேன். ஏன் அப்படி?
ஒரு படத்தின் ஆரம்பம், நடுப்பகுதி, முடிவு எல்லாமே அமைதியானதாக இருந்தால், அது என்ன மாதிரியான கதை? ஒரு கதையைச் சொல்ல மோதல்களும், வித்தியாசங்களும் தேவை. கதைகளில் இருள், ஒளி, கொந்தளிப்பு, இவை அனைத்தும் இருக்க வேண்டும். அதற்காக படமெடுப்பவர் துன்பப்படவேண்டும் என்பதல்ல. கதைகளில் துன்பம் இருக்கலாம். மனிதர்கள் துன்பப்பட வேண்டியதில்லை.
உங்கள் படங்களுக்கான யோசனை எவ்வாறு வருகிறது?
நான் எப்போதும் சொல்வது, ஐடியாக்கள்தான் படத்தை இயக்குகின்றன. நல்ல ஐடியா ஒரு படத்துக்கு பெரிய, மிகப்பெரிய ஆசீர்வாதம். உங்களை மிகவும் ஈர்க்கும் ஐடியாவை நீங்கள் கண்டடைய வேண்டும். ஒரு புத்தகத்திலிருந்தோ அல்லது வேறொருவரின் திரைக்கதையிலிருந்தோ நான் படமெடுக்காதபோது எனக்கு இந்த ஐடியாக்கள்தான் கைகொடுத்திருக்கின்றன. ஒரு படத்துக்கான ஐடியாக்கள் ஒரே சமயத்தில் வராது. துண்டு துண்டாக வந்து விழும். இவைதான் ஒரு ஸ்க்ரிப்டாக உருவெடுக்கின்றன. ஒரு ஐடியா வந்தவுடன் அதை எழுதி வைக்கிறீர்கள், அடுத்த ஐடியா வரும்வரை. இப்படி ஒவ்வொன்றாக சேமித்து வைக்கும் பெரும்பாலான ஐடியாக்களை ஒரே ஸ்கிரிப்டில் சேர்க்கமுடியும். அதை ஒரு ஒழுங்குக்கு கொண்டு வர முடியும். பின்னர் அந்த ஸ்கிரிப்டை எடுத்து அதைத் திருத்தி, ஒலிகளையும் இசையையும் கலக்கிறீர்கள். இது ஒரு செயல்முறை. சில சமயம் இந்த ஐடியாக்கள் நேரான கதையாக இல்லாமல் ஒரு அப்ஸ்டிராக்ட் கதையைத் தரக் கூடும். சில சமயங்களில் நேரான கதையையும் தரலாம்.
உங்களுக்கு எது பிடிக்கும்?
எனக்கு எல்லா வகையான சினிமாக்களும் பிடிக்கும். அதற்கு எந்த விதிகளும் இல்லை. சில அப்ஸ்டிராக்ட் விஷயங்கள் என்னை அசைக்கவே அசைக்காது, சில என்னை பைத்தியமாக்குகின்றன. சில நேர்க்கோட்டிலான படங்கள் என்னை எதுவும் செய்யாது. சில என்னுள் நெருப்பை மூட்டுகின்றன. இது சினிமா! பில்லியன் கணக்கான கூறுகளைத் தன்னுள் கொண்டது. சினிமா, ஏழு கலைகளை ஒருங்கிணைக்கிறது என்று கூறுகிறார்கள். இது ஒரு முழுமையான ஊடகம். எனவே நல்ல ஐடியாக்கள் உங்களை பல்வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லும். சினிமா ஒரு வலிமையான சிறப்பு வாய்ந்த, அழகான ஊடகம் என்று சொல்வேன்.
இதேபோல் திரைப்படம் எடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தவை ஏதேனும் உண்டா?
ஒவ்வொருவரும் தங்கள் சொந்தக் குரலைக் கண்டுபிடிக்க வேண்டும். இது நகலெடுப்பது பற்றியது அல்ல. ஆனால் கோடார்ட், ஃபெலினி மற்றும் பெர்க்மேன் ஆகியோர் என் ஹீரோக்கள். Sunset Boulevard, Rear Window, 8 ½, Jacques Tati’s My Uncle or Monsieur Hulot’s Holiday, Rear Window, குப்ரிக்கின் அனைத்து திரைப்படங்கள், ஃபெலினியின் அனைத்து திரைப்படங்கள், அநேகமாக பெர்க்மேனின் அனைத்து திரைப்படங்களும் – மற்றும் பல திரைப்படங்களும் எனக்கு உத்வேகத்தைத் தந்திருக்கின்றன.
அந்தப் படங்கள் நீங்களறியாமலேயே உங்களை பாதித்திருக்கின்றனவா? உதாரணமாக, Blue Velvetல் உள்ள ‘வாயரிசம்’ என்ற கருத்து Rear Window படத்தால் பாதிக்கப்பட்டதாகக் கூறலாமா?
எனக்கு சொல்லத் தெரியவில்லை. இந்த நூற்றுப்பத்து வருடங்களுக்கு மேற்பட்ட சினிமா உலகில் எவராலும் இதற்கு முன் வந்தவற்றுடன் ஒப்பிட முடியாத ஒரு படத்தை உருவாக்குவது சாத்தியமில்லை. எனக்கு Blue Velvet என்ற படம் Blue Velvet மட்டுமே. Rear Window என்ற படம் Rear Window மட்டுமே. Sunset Boulevard அல்லது Rear Window போன்ற படங்கள் எனக்கு ஐடியாக்களைத் தந்தது என்று வைத்துக்கொண்டாலும், நான் அவற்றை நேசித்தாலும் அவற்றால் ஈர்க்கப்பட்டாலும், வாழ்க்கை என்பது 24/7 திரைப்படம். எல்லா நேரங்களிலும் ஐடியாக்கள் அதிலிருந்து வெளிவருகின்றன. ஐடியாக்களை எப்போதும் உருவாக்குவது மற்ற சினிமாக்கள் என்று சொல்லிவிட முடியாது. பில்லியன் கணக்கான ஐடியாக்கள் நம்மைச் சுற்றி நீந்திக்கொண்டிருக்கின்றன. நீங்கள் அவற்றை சரியாகப் பிடிக்க வேண்டும். அவ்வளவுதான்!











