காயத்ரி ஆர்.
ஆட்ரே டோட்டூ பிரெஞ்சு நடிகை. AMELIE திரைப்படம் பார்த்தவர்களுக்கு பரிச்சயமானவர். மிகக்குறைவான படங்கள் நடித்திருந்தாலும் ஒவ்வொன்றுமே அவருக்கான அடையாளங்கள். மிகச்சிறந்த நடிகை. தனக்கு சரியெனப்பட்டதை மட்டும் செய்யக்கூடியவர்.
இதனால் விமர்சனத்திற்குட்பட்டாலும் அடுத்தடுத்து தனது பயணங்களைத் தொடர்பவர். ஹாலிவுட் என்பது தனக்கான இடம் இல்லை என்பதையும் அது ஒரு அடர்ந்த உலகம் என்றும் துணிச்சலாக வெளிப்படுத்தியவர். பிரெஞ்சு மாடல் கோகோ சேனல் பற்றிய சுயசரிதை படத்தில் நடித்ததன் மூலமாக தன் உயரத்தை இன்னும் அதிகரித்துக் கொண்டார். இவர் அபூர்வமாக அளித்த நேர்காணலின் ஒரு பகுதி இது
நீங்கள் நடிப்பதை நிறுத்திவிடப் போகிறீர்களாமே? உண்மையா?
அப்படி ஒரு வதந்தி ஓடிக்கொண்டிருக்கிறது. நிச்சயமாக அதில் உண்மையில்லை. என் வேலையை நான் மிகவும் நேசிக்கிறேன். எனக்கு மக்களை சந்திப்பது பிடிக்கும். அதேபோல் என்னுடைய கதாபாத்திரங்களையும் பிடிக்கும். அதனால் கண்டிப்பாக நடிப்பதை நிறுத்துவதாக இல்லை. எனக்கு சினிமாவைத் தவிர வேறு விஷயங்களும் பிடிக்கும். வேறு ஆர்வங்களும் உண்டு. ஆனால் அவை நான் சினிமாவில் நடிப்பதை ஒரு போதும் தடுப்பதில்லை.
வேறு என்ன ஆர்வங்களைப் பற்றிப் பேசுகிறீர்கள்?
பயணங்கள், எழுதுவது, புகைப்படம் எடுப்பது, படிப்பது, வரைவது. எனக்கென்று சில சிறிய திட்டங்கள் இருக்கின்றன. இப்போதைக்கு அவை எனக்கு மட்டுமே சொந்தம். என்றைக்காவது ஒரு நாள் மற்றவர்களுக்கு அதை சொல்வேன் என்று நினைக்கிறேன். இப்போது சொல்லும் துணிவில்லை.
உங்களுக்கு நேரம் இல்லாததாலா?
அது பிரச்சனையில்லை. வருடத்துக்கு நாலு படங்களெல்லாம் நான் செய்வதில்லை. எனக்குப் பிடித்தவைகளை செய்ய நிறைய நேரமிருக்கிறது. என்னைத் தடுப்பது தன்னம்பிக்கையின்மைதான்.
ஒரு நடிகையாக உங்களுக்கு தன்னம்பிக்கை இருக்கிறதா?
இல்லை. நான் பணிபுரியும் இயக்குநரிடம் அந்தத் தன்னம்பிக்கையை தேடுகிறேன். என்னிடம் இல்லாத அந்தத் தன்னம்பிக்கையை இயக்குநர்தான் எனக்குக் கொடுப்பார். அது என்னை பாதுகாப்பாக உணர வைக்கும்.
நீங்கள் உங்களிடம் கொஞ்சம் கடுமையாக நடந்துகொள்கிறீர்கள் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?
இப்படி சொல்வதால் நான் சரியில்லை என்று அர்த்தமில்லை. நான் நடித்த காட்சிகள் பற்றி என்னால் நேர்மறையான அல்லது எதிர்மறையான தீர்ப்புகள் சொல்ல முடியும். சில படங்களைப் பார்க்கும்போது ஒரு தருணம் கூட என் கதாபாத்திரத்தில் இருந்து விலகாமல் அற்புதமாக நடித்திருப்பேன். சிலவற்றில், சில காட்சிகளில் கொஞ்சம் கதாபாத்திரத்தை விட்டு விலகியது போலிருக்கும். அதற்காக என்னை ஏன் இந்தக் கதாபாத்திரத்துக்கு தேர்வு செய்தார்கள், நான் லாயக்கில்லாதவள் என்றெல்லாம் என்னை நானே வருத்திக் கொள்வதில்லை.
அப்படியென்றால் தன்னம்பிக்கை இல்லை என்று எதை வைத்து சொல்கிறீர்கள்?
நான் சொல்ல வருவது என்னவென்றால், மக்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள், என் மூலம் அவர்கள் என்ன பார்க்கிறார்கள் என்பது எனக்குப் புரிவதில்லை. என்னைப் பாராட்டுபவர்கள் நிச்சயமாக இருக்கிறார்கள். விரும்பாதவர்களும் இருக்கிறார்கள். என்னைப் பிடிக்கவில்லை என்று நான் நினைத்தவர்கள் என்னை அவர்கள் படத்தில் நடிக்க வைப்பது எனக்கு அடிக்கடி ஆச்சரியமாக இருக்கிறது… உதாரணமாக மைக்கேல் கோண்ட்ரி. அவர் தன் படத்தில் நடிக்க என்னைக் கேட்பார் என்று நான் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை.
உதாரணமாக ஹாலிவுட் இயக்குனர் ஸ்பீல்பெர்க், அவர் படத்தில் உங்களை நடிக்கக் கேட்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்களா?
அவருக்கு என்னைப் பற்றிய எண்ணம் வருவதற்கு சாத்தியமில்லை என்று நினைக்கிறேன். (சிரிக்கிறார்)
The Davinci Code படத்திற்குப் பிறகு நீங்கள் ஹாலிவுட்டிலேயே இருந்திருந்தால் எளிதாக இருந்திருக்குமோ என்னவோ.
இருந்திருக்கலாம். ஆனால் ஒரு சுவாரஸ்யமான பெண் வேடத்தைப் பெற ஹாலிவுட்டில் நிறைய தியாகங்களைச் செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஹாலிவுட்டில் அற்புதமான சில வேடங்கள் இருந்தாலும் அவற்றை எனக்குக் கொடுப்பார்கள் என்று தோன்றவில்லை. ஹாலிவுட் வேலை பார்க்கும் விதமே வேறு.
ஏன் கொடுக்க மாட்டார்கள்?
என்னுடைய சில தொழில் தேர்வுகளால் அது நடப்பதற்கான சாத்தியமில்லை. நான் நடித்தால் அவர்களுக்கு லாபம் என்று நினைத்தால் மட்டுமே அந்த இயக்குநர்கள் என்னைத் தேர்ந்தெடுப்பார்கள். இதுவரை நான் லாபகரமான நடிகையாக இருந்ததில்லை என்று நினைக்கிறேன். நான் அதற்குத் தகுதியற்றவள் என்று சொல்லவில்லை. இந்தத் துறை அப்படி செயல்படுவதில்லை என்று சொல்கிறேன். அவர்கள் என்னைத் தேர்வு செய்யாதது சரியல்ல என்று நினைப்பதுண்டு. ஒரு படத்தின் பட்ஜெட்டிலோ, அது உலகளவில் எவ்வளவு பிரபலமாக இருக்கிறது என்பதிலோ எனக்கு ஆர்வமில்லை. எனக்கு மிகவும் ஆத்மார்த்தமான, பிடித்தமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கவே விரும்புகிறேன்.
அப்படியானால் நீங்கள் எந்த மாதிரி படங்களில் நடிக்க விரும்புகிறீர்கள்?
சில படங்கள் நிச்சயமாக முழுமையான பொழுதுபோக்குதான். ஆனால் நான் செய்ய விரும்புவது, எனக்கு ஆர்வம் இருப்பது, உங்களை உண்மையிலேயே சிந்திக்க வைக்கும், உங்களை நெகிழ வைக்கும், சிறிது காலம் உங்களுடன் நிலைத்திருக்கும் படங்களில் நடிப்பதுதான். மக்களின் அறிவுசார் விழிப்புணர்வுக்கு திரைப்படங்கள் அவசியம் என்று நான் நினைக்கிறேன். ஓவியம், சிற்பம், இசை எல்லாமே அவரவரின் படைப்புகள். ஆனால் இவை அனைத்தும் உள்ள திரைப்படத்தை மட்டுமே நான் கலையாகக் கருதுகிறேன்.
அப்படியென்றால் நடிப்பு?
நடிகர்கள் காட்சியை உணர்ந்து வெளிப்படுத்துபவர்கள். நடிப்பை எந்தக் கலையுடனும் ஒப்பிட முடியாது. என்னைப் பொருத்தவரை நடிப்பு ஒரு கலையல்ல. ஒரு முழு திரைப்படத்தைத்தான் கலை என்று சொல்வேன்.
கலை என்பது வெளிப்பாட்டின் ஒரு வடிவம் என்றால், நடிப்பு என்பது உங்களை வெளிப்படுத்தும் ஒரு வழி, இல்லையா?
ஒரு நடிகர் தன்னை கலைஞனாக உணர முடியாது. அது எந்த மீடியமாக இருந்தாலும் தன்னைத்தான் உண்மையாக வெளிப்படுத்திக்கொள்பவனே கலைஞன். நீங்கள் நடிகராக இருக்கும்போது வேறொருவரின் ஆணையின் கீழ் நடிக்கிறீர்கள்.
உங்கள் கதாபாத்திரத்துக்கு அவ்வளவு சுதந்திரம்தானே இருக்கும்.
அதேதான்! உங்களுக்கு சொந்தமில்லாத ஒரு யோசனைக்கு நீங்கள் சேவை செய்கிறீர்கள். ஆனால் நீங்கள் உங்கள் உணர்திறன், திறமை, பார்வை, புத்திசாலித்தனம் ஆகியவற்றை அதோடு சேர்க்கிறீர்கள். ஆனால் நீங்கள் அந்தப் படைப்பை உருவாக்கவில்லை. இதனால்தான் நடிகர் உண்மையில் ஒரு படைப்பாளி அல்ல. ஆனால் ஒரு வகையான மொழிபெயர்ப்பாளர். கலைஞர் என்பவர் யார்? ஒரு கருவை யோசிப்பவரா, அதைக் கண்டுபிடித்தவரா அல்லது அதை உருவாக்குபவரா?











