செந்தில் ஜெகன்நாதன்
கிருஷ்ணன் நம்பியின் ‘தங்க ஒரு..’ என்ற சிறுகதை உண்டு. நாற்பது வருடங்களுக்கு முன் சென்னையில் வாடகைக்கு வீடு தேடி அலையும் கணவன், ஊரிலிருக்கும் தன் மனைவிக்கு எழுதும் கடிதமாக விரியும் அந்தக் கதை. தெருத் தெருவாக வீடு தேடிய அவன் இறுதியில் ஓரிடத்தில் இரண்டு பூட்ஸ்கள் கிடப்பதைப் பார்ப்பான், பூட்ஸ்களில் இருந்து புகையாக வர அருகே சென்று பார்த்தால் பூட்ஸ்க்குள் சின்னஞ்சிறு லில்லிப்புட் உருவ மனிதன் ஒருவன் அமர்ந்திருப்பான். தானும் தன் குடும்பமும் சென்னை முழுக்க வீடு தேடி கிடைக்காமல் கடைசியாக கிடைத்த இந்த பூட்ஸ்க்குள் குடியிருக்கிறோம் என்றும், மனைவி அடுப்பு மூட்டிய புகைதான் தற்போது அவர் பார்த்தது என்றும் விவரிப்பான். வாசிக்க நகைச்சுவையாக தெரிந்தாலும் நாற்பது வருடங்கள் கழித்தும் வீடு தேடும் நிலைமை இதுதான். ஒண்டிக்க எதாவது சிறிய இடமாவது கிடைக்காதா என பொருளாதாரம் சீரடையாத மத்திய தர வர்க்கம் வீடு தேடி தினம் தினம் மாநகரில் அலைந்துகொண்டுதான் இருக்கிறது. குடியிருக்க ஒரு வீடு என்பது ஒரு கதையோடு முடிவடையக் கூடியதா?
வானமென்னும் ஒரு கீழிருக்கும் உலகெங்கிலும் ஒண்டிக்கொள்ள ஒரு கூரையைத் தேடி மனிதர்கள் அலைவது எத்தனை காலமாக தொடரும் கதை!
“மனுசாளுக்கு குந்த ஒரு கூரை வேணும்ப்பா” என்ற வார்த்தையை என் தாத்தா அடிக்கடிக் கூறுவார்.
நியோ ரியலிச திரைப்படங்களின் பிதாமகரான விட்டோரியா டிசிகாவின் வின் மகத்தான படைப்புகளில் ஒன்று The Roof. 1956-ல் வெளிவந்த இந்தத் திரைப்படம் காண்பவருக்கு ஒரு பிணைப்பை ஏற்படுத்தக் கூடியது.
கொத்தனார் வேலை செய்யும் நடேல் என்ற இளைஞனும் லூசியா என்ற இளம்பெண்ணும் காதலித்து திருமணம் செய்துகொள்கிறார்கள். லூசியாவின் குடும்பத்தினருக்கு அவள் திருமணம் செய்துகொண்டதில் உடன்பாடில்லை, நடேலின் குடும்பத்தில் வயதான அவனது தாய், தந்தை, மூத்த சகோதரி, அவளது கணவன், அவர்களின் மூன்று குழந்தைகள், ஓர் இளைய சகோதரி என ஒன்பது நபர்கள். இப்போது லூசியாவைச் சேர்த்து பத்து பேர். ஒரு சிறிய வீட்டில் வாடகைக்கு இருக்கும் அந்த வீட்டில் ஒருவர் நடக்கும்போது இன்னொருவர் கடந்தால் அவர்கள் இடித்துக் கொள்ள நேரிடும், இந்த நிலையில் திருமணமான புது தம்பதிகள் தனிமையில் தழுவிக் கொள்ளவோ, முத்தமிடவோ கூட இயலாமையால் பெரும் துயரத்திற்கு ஆளாகிறார்கள். இரவில் லூசியாவை நடேல் முத்தமிட முயலும்போது அவனது இளைய சகோதரி பார்த்துவிடுகிறாள். இருவருக்கும் தனிமையாக ஓர் இடமே இல்லாததால் இருவரும் இரவில் நீண்ட தூரம் நடை செல்கிறார்கள், தொலைவில் இருக்கும் வீடுகளை பார்க்கிறார்கள்.
அந்த வீட்டின் தலைவனும் நடேலின் சகோதரியின் கணவனுமான சிசேர் வீட்டில் தேவையற்று ஒரு பல்ப் எரிந்தாலோ, குழாய் தண்ணீரைத் தேவையற்று திறந்தாலும் கடுமையாகத் திட்டுவான்.
ஒரு முறை குடும்பத்தில் ஏற்படும் சச்சரவால் நடேல் தன் மனைவி லூசியாவை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறான். வீடு தேடி கணவனும் மனைவியும் அலைகிறார்கள். அப்போது லூசியா புறம்போக்கு இடங்களின் கட்டப்பட்டிருக்கும் சிறு சிறு வீடுகளைப் பார்க்கிறாள். அங்கே இருக்கும் ஒரு முதிய தம்பதி அவளையும், அவள் கணவனையும் இங்கேயே உங்களுக்கென ஒரு வீட்டைக் கட்டிக்கொள்ளுமாறு கூறுகிறார்கள். அப்போதைய இத்தாலிய சட்டப்படி கூரையுடன் இருக்கும் வீட்டை இடிக்க முடியாது. ஆகையால் கூரையோடு இருக்கும் ஒரு வீட்டைக் கட்டும் முயற்சியில் நடப்பவை என்ன? இறுதியில் அவர்கள் வசிக்க இந்தப் பூமியில் ஒரு கூரை கிடைத்ததா இல்லையா என்பது மீதிக் கதை.
கல்லூரி காலங்களில் வழக்கமாக நாங்கள் செல்லும் டீக்கடையில் சிமெண்ட் தடங்கள் உடைகளில் படிந்திருக்கும் கட்டிட வேலை செய்யும் ஒரு அண்ணன், இரண்டாயிரம் வீட்டுக்கு மேல வேல செஞ்சிருக்கும் எனக்கும் குடியிருக்க ஒரு குச்சு கிடையாது தம்பி என்று கண்ணீர் கொட்ட சொன்னது ஏனோ இந்தப் படம் பார்க்கும்போதெல்லாம் நினைவில் வரும். இந்தப் படத்தின் கதாநாயகன் நடேல் ஒரு ஜூனியர் கொத்தனார். தனது மைத்துனனான சீனியர் சிசேரோவிற்கு கீழே பணிபுரிபவன். ஒரு காட்சியில் ஒரு பெரிய வீடு கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. வீட்டின் உரிமையாளர்கள் சோபாவை எங்கு போடுவது, அலமாரியை எங்கு வைப்பது என விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது தன் கணவனைப் பிரிந்து அவளது தோழி வேலை செய்யும் வீட்டில் தங்கியிருக்கும் லூசியா தன் கணவனைப் பார்க்க வருகிறாள். அவனிடம் ஒரு விஷயம் சொல்ல முற்பட்டு சுற்றிலும் ஆட்கள் இருப்பதால் சைகையால் அவனை அழைப்பாள். அவன் தன் காதல் மனைவி தன்னைத் தேடி தான் வேலை செய்யும் இடத்திற்கு வந்திருப்பதை பார்த்தவுடன் உணர்ச்சி பொங்க அவளிடம் செல்கிறான். மறைவான ஓரிடத்தில் மனைவியை முத்தமிடப் போகும்போது வீட்டு உரிமையாளர் வந்துவிடுகிறார். அங்கிருந்து தான் தங்கியிருக்கும் குப்பைக் கூடம் போல் இருக்கும் ஸ்டோர் ரூமிற்கு அழைத்துச் சென்று அவளை முத்தமிடப் போகும்போது அவள் தான் கர்ப்பமாக இருப்பதை அவனுக்குச் சொல்கிறாள். அத்துடன் தன் குழந்தை பிறக்கும்போது தாங்கள் வசிக்க ஒரு வீடு இருக்க வேண்டுமென்ற விருப்பத்தையும் தெரிவிப்பாள். ஒரு சிறந்த கவிதைக்கு ஒப்பானது இந்த காட்சி.
படத்தில் இரவோடு இரவாக எலிவளை போன்றாவது கூரை இருக்கும் வீட்டைக் கட்டிவிட நடேல் தன் சகாக்களின் உதவியோடு முயற்சிக்கும்போது வேலை செய்யும் எல்லோருக்கும் காப்பி கொடுத்து ஊக்கப்படுத்தும் லூசியா தன் கண்முன்னே தங்களுக்கே தங்களுக்கென ஒரு வீடு எழும்புவதைப் பார்த்தபடி இருக்கிறாள். நடுநிசி ஆக ஆக சோர்வில் தூங்கிவிடுகிறாள். அவள் அங்கிருக்கும் பெட்டிகளின் மீது ஒருக்களித்துத் தூங்கும் அந்தக் காட்சி எனக்கு செயிண்ட் தாமஸ் மலை மீது இருக்கும் Homeless Jesus சிலையை ஏனோ நினைவுபடுத்தியது. அந்த குறிப்பிட்ட ஒரு ஷாட் உலகெங்கிலும் உள்ள வீடற்றவர்களின் துயரத்தைத் தெரிவிக்கும் ஒரு குறியீடாகப் பட்டது.
எனக்கு மிகவும் பிடித்த முகுந்த் நாகராஜனின் ஒரு கவிதை
முப்பது கம்பெனிகளும்
இரண்டு வெளிநாட்டு வங்கிகளும் இருக்கும்
அந்தப் பெரிய கட்டிடத்தை
தன் மகனுக்கு அறிமுகப்படுத்தினாள்
அந்த சித்தாள், ‘நாங்கள் கட்டியது’ என்று சொல்லி.
கட்டும்போது இருந்த இடம்,
சமைத்த இடம்,தூங்கிய இடம்
எல்லாம் காண்பித்தாள் வெளியே
இருந்தபடியே. முற்றிலும் மாறிப்போய்,
தான் உள்ளே கூட நுழைய முடியாததாய்
ஆகிப்போன அந்தக் கட்டிடத்தைப்
பெருமையுடன் பார்த்தாள்,
அந்த வங்கியின் நியான் போர்டு இருக்கும்
இடத்தில்
புடவை காயப்போட்டது தனக்கு மட்டுமே
தெரியும்
என்பதை திடீரென்று உணர்ந்தவளாக
இந்தக் கவிதையை நினைவுபடுத்திய பல காட்சிகள் உண்டு எனினும் இரண்டு காட்சிகளைக் குறிப்பிட விரும்புகிறேன்.
ஒரு காட்சியில் ஒரு பக்கம் உயர்ந்த கட்டிடங்களும், இன்னொரு புறம் புறம்போக்கு இடங்களில் தனிவளையாக கட்டப்படும் முறைசாரா வீடுகளுக்கும் நடுவில் ஒரு பேருந்து பயணத்தில் வீடற்ற லூசியா சொல்வாள் “அப்பப்பா எத்தனை வீடுகள்?”
இன்னொரு காட்சியில் வீடற்று இருக்கும் நடேல் நடந்து செல்லும்போது வழியில் கூட்டமாக சிலர் நின்று தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருப்பார்கள். அதில் விஞ்ஞானிகள் நிலாவில் மனிதர்கள் வாழும் சூழல் வந்துவிட்டதாக செய்தி வாசிப்பார்கள். அதைக் கேட்டு நடேல் சொல்வான் “சீக்கிரம் அதைப் பண்ணுங்கப்பா இங்க எங்களுக்கு இருக்க இடமில்ல” என்று. இப்படி படம் முழுவதும் அத்தனை அற்புதமான தருணங்கள், கூர்மையான வசனங்கள், பாத்திரங்களாக வாழ்ந்திருக்கும் நடிகர்கள், எல்லாவற்றுக்கும் மேலாக படத்தின் பிரம்மாண்டமான ஒளிப்பதிவு நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒரு பாழடைந்த ரோமை நமக்கு காட்டுகிறது. இவை அத்தனையையும் திரட்டி மாஸ்டர் டிசிகா அளித்திருக்கும் இத்திரைப்படம், போருக்கு பிந்தைய ரோமை நமக்குக் காட்டி காலம் கடந்தும் உலக மக்களோடு தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய செவ்வியல் படைப்பாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
Umberto D, Bicyle thieves போன்ற டிசிகாவின் மாஸ்டர் பீஸ் படங்களின் திரைக்கதையாசிரியரான Cesare Zavattini இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதியிருக்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து கிட்டத்தட்ட இருபது படங்களை உருவாக்கியுள்ளார்கள்.
இந்தத் திரைப்படத்தைக் குறித்து திரைப்பட விமர்சகரும் வரலாற்றாசிரியருமான ஆர்தர் நைட் கூறிய கருத்து முக்கியமானது.
”கொத்தனார் தொழிலாளியும் அவரது இளம் மனைவியும் உண்மைக்கு நெருக்கமானவர்களாக இருக்கிறார்கள். ஏனென்றால் டிசிகா கண்ணால் இக்கதையைக் கண்டிருக்கிறார்.
திரைப்படத்திலுள்ள ஒவ்வொரு சம்பவமும், ஒவ்வொரு ஷாட்டிலும் உள்ள ஒவ்வொரு தகவலும், போலித்தனமில்லாத, துருத்திக் கொண்டிருக்காமல் எதார்த்த உணர்விற்கு பங்களிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளை மையமாகக் கொண்ட யதார்த்தமான திரைப்படங்கள் எடுப்பதற்கு விட்டோரியா டிசிகா முன்னோடியாகத் திகழ்ந்திருக்கிறார்.
தமிழின் மிகச்சிறந்த ரியலிச படங்களில் ஒன்றான பாலுமகேந்திராவின் ’வீடு’ திரைப்படம் உருவாவதற்குக் கூட டிசிகாவின் இந்த திரைப்படம் உந்துதலாக இருந்திருக்கலாம், The Roof வெளிவந்து 30 வருடங்கள் கழித்து ‘வீடு’ திரைப்படம் வெளிவருகிறது. ஒரு மத்தியதர பெண் ‘வீடு’ கட்டத் தொடங்கியதில் இருந்து அவள் சந்திக்கும் பிரச்சினையைப் பேசுகிறது. மிக முக்கியமான திரைப்படம் ‘வீடு.
2017ல் இயக்குனர் செழியன் அவர்களின் ‘Tolet’ திரைப்படம் வெளியாகிறது. அது நவீனமயமாகி, தொழில்நுட்பமெல்லாம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில் மாநகரத்தில் வீடு தேடுவதில் உள்ள பிரச்சினையை பேசுகிறது. இன்னும் சில வருடங்களில் வேறொரு கோணத்தில் ‘தங்க..வீடு தேடும்’ ஒருவரின் பிரச்சினையை மையமாகக் கொண்டு இன்னொரு படம் வரலாம். ஆக இது காலகாலத்துக்கும் தொடரும் மனிதர்களின் அடிப்படை பிரச்சினை.
வீடு என்பது வெறும் வீடா? அது ஒரு உணர்வு அல்லவா? தங்க இடமின்றி எங்கெங்கொ ஒண்டிக் கொண்டிருப்பவர்கள் வாடகை வீட்டை கனவு காண்கிறார்கள், வாடகை வீட்டில் உள்ளவர்கள் சொந்தமாக வீடு வாங்க வேண்டுமென விரும்புகிறார்கள். வீடு என்பது மனிதர்களின் அழியாத கனவாகவும், நிரந்தரமான விருப்பமாகவும் இருந்துகொண்டிருக்கிறது.
திரைப்பட ஆர்வலர்கள் தவறவே விடக்கூடாதவை விட்டோரியா டிசிகாவின் படங்கள், அதில் இந்தத் திரைப்படம் ஒரு ரத்தினம்.
The Roof திரைப்படம் MUBI தளத்தில் காணக்கிடைக்கிறது.











