ராணி கார்த்திக்
சினிமா கனவுகளுடன் சென்னை வந்த காலத்திலேயே இரு திருவிழாக்களை எப்போது காண்போம் என்ற ஆவல் இருந்தது. ஒன்று புத்தகக் கண்காட்சி மற்றொன்று சென்னை சர்வதேச திரைப்பட விழா. ஆனால் ஒரு காலத்தில் உண்மையான திருவிழாவாகவே நடந்து வந்த சென்னை சர்வதேச திரைப்பட விழா தற்போது ஒரு சடங்காக மாறிவிட்டதோ என்ற எண்ணமே மேல் எழுகிறது.
காரணம் முன்பு இருந்தது போல ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு திருவிழாக்களுக்கு வருவது போன்று தோன்றவில்லை.
அதற்கு ஓடிடி, ஸ்மார்ட் டிவி என்று பல காரணங்கள் இருந்தாலும், பக்கத்து மாநிலமான கேரளாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவை போல் படத்தேர்விலும் நிகழ்ச்சி ஏற்பாட்டிலும் சென்னை சர்வதேச திரைப்பட விழா குழுவினர் கவனம் செலுத்தவில்லையோ என்பதே பல ஆண்டுகளாக தொட்டுத் தொடரும் ஒரு பட்டுப் பாரம்பரியமாக இருக்கிறது.
டிசம்பர் 17ம் தேதி நடைபெற்ற சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் மூன்று படங்களை பார்க்க முடிந்தது. அதில் முக்கியமான ஒன்றாக நினைப்பது Creating a man திரைப்படம்.
நசிப் பாசில் என்ற துருக்கிய இலக்கியவாதி ஒருவரின் நாடகத்தைத் தழுவியே இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு திரைக்கதைக்காக Hallucination குறித்து தேடி படித்து வரும், அது குறித்த படங்களை பார்த்து வரும் எனக்கு கிடைத்தப் படம் தான் இது. படம் தொடங்கிய பத்து நிமிடங்களில் தொடர்ச்சியாக இவ்வளவு வசனங்களா?
Synopsis பார்த்து ஏமாந்துட்டோமா? என்றெல்லாம் தோன்றியது. ஆனால் அடுத்த 5 நிமிடத்திற்குள்ளாகவே இந்த படம் என்னை உள் எடுத்துக் கொண்டது. Hallucination என்ற நிலையைப் படத்தில் காட்சிப்படுத்திய விதம் ரசிக்கும்படியாக இருந்தது. படத்தில் வசனங்கள் தத்துவத் தளத்தில் நகர்ந்தாலும், பின் தொடர முடியாதபடி சப் டைட்டில்கள் மிக வேகமாக திரையில் நகர்ந்து பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறது.
இருப்பினும் பல வசனங்கள் ஒரு ஆணின் அகச்சிக்கல்களை, சமூகத்தின் எதிர்பார்ப்புகளை இன்னும் சொல்லப்போனால் எல்லா மனதுக்குள்ளும் நிகழும் Good vs Evil என்ற சிக்கலை கடவுளோடுத் தொடர்புபடுத்தி மிக அழகாக விளக்கியிருந்தது. குறிப்பாக guardian ஆக இருக்க வேண்டிய நாடக ஆசிரியரான Husrev, படத்தின் தொடக்கத்தில் சல்மாவின் திருமணம் குறித்து பேசுகிறார். சல்மாவோ திருமணத்தையே வெறுக்கிறார். வளர்ந்த பிறகு சல்மா காதலுடன் பார்க்கும் க்ளோசப் காட்சியும், சிறுவயதில் சல்மாவை husrev பார்க்கும் hallucination காட்சியும் அதில் நடித்த இருவரின் நடிப்பும் அபாரமானது. அத்தனை அர்த்தம் நிறைந்தது. Man was not born.
அவன் சமூகம், குடும்பம், கல்வி, மதிப்பீடுகள் மற்றும் அதிகார அமைப்புகள் மூலம் உருவாக்கப்படுகிறான் என்பதைப் பேசும் இந்தப் படம், ஆண் என்ற அடையாளம் இயல்பானதா? அல்லது கட்டமைக்கப்பட்டதா? என்ற கேள்வியை முன்வைக்கிறது. எளிமையாக சொல்வதென்றால் இறைவி படத்தில் வரும் பெண் குறில் ஆண் நெடில் என்ற வசனத்தின் மிக நீண்ட ஒரு அற்புதமான காட்சி வடிவமே இந்த திரைப்படம். ஆண் அழக்கூடாது,
ஆண் பலவீனமாக இருக்கக் கூடாது போன்ற stereotype களை இந்தப் படம் துவம்சம் செய்கிறது. நான் பலகீனமானவன் என protaganist பேசும் வசனம் வரும் இடமும், பல இடங்களில் அவன் அழுது புலம்பும் இடங்களும் முக்கியமானவை.
ஒரு ஆணாக இருப்பதன் அர்த்தத்தை யார் தீர்மானிக்கிறார்கள்? என்ற கேள்வி படம் முழுவதும் வசனங்களாகவும் காட்சிகளாகவும் ஊடாடுகிறது. “மரணத்தைப் பற்றிய சிந்தனைக்கு மரணமே மருந்து”.
” நீ யாரை எதிரியாக நினைக்கிறாய்?
எல்லாரையும் தான்”
” நீங்கள் மிகவும் பலமானவர்.
இல்லை இந்த உலகிலேயே மிகவும் பலகீனமானவன் நான்தான்”
இது போன்ற வசனங்கள், gender conditioning, toxic masculinity, identity crisis என படம் பேசும் தத்துவத்தளங்கள் மேலும் மேலும் நீண்டு கொண்டே செல்கிறது. இறுதிக் காட்சி உட்பட பல காட்சிகளில் “கண்ணாடி” என்பது சுயத் தேடலின் ஒரு குறியீடாக பயன்படுத்தப்படுகிறது.
மரம் அப்பாவின் பதிலீடாக, அப்பா என்ற குறியீட்டின் வடிவமாக படத்தில் பல இடங்களில் காட்சிப்படுத்தப்படுகிறது.
உண்மை வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள், உளவியல் ஆய்வுகள், சமூக அவதானிப்புகள் போன்றவை இந்த படத்தின் அடிப்படையாக அமைந்துள்ளன. ஒரு மனிதன் தனது உண்மையான உணர்ச்சிகளை இழந்து, சமூகம் எதிர்பார்க்கும் ஆணாக மாறுவதே திரைகதையின் மையம்.
சமூகமும் குடும்பமும் ஆண்களுக்கு விதைக்கும் எதிர்பார்ப்புகள், உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியாத நிலை, வலிமை, அதிகாரம் போன்ற கட்டுப்பாடுகள் இதில் பேசப்படுகின்றன.
ஒரு ஆண் எவ்வாறு உருவாக்கப்படுகிறான் என்பதைப் பாசம், பயம், பொறுப்பு, தோல்வி ஆகிய அனுபவங்கள் வழியாக படம் ஆராய்கிறது. பல இடங்களில் அகப் போராட்டத்தையும் மௌனத்தையும் கடத்திய பின்னணி இசை மௌனமான இடங்களை ஆழ்ந்த மௌனமாக மாற்றி இருக்கிறது.
என்னா shot இது என வியக்கும் பல காட்சிகள் படத்தில் உண்டு. உண்மையில் நாம் அனைவரும் சுதந்திரமானவர்களா? என்ற கேள்வி படம் உருவாக்கும் பல கேள்விகளில் மிகவும் முக்கியமான ஒன்று.
கடந்த திரைப்படம் உருவாக்கிய கேள்வியைத்தான் இந்த படமும் உருவாக்கியது. கம்யூனிச தலைவர் லெனின், சினிமா என்ற கலை மீதும் அதன் தாக்கம் மீதும் பெரும் நம்பிக்கை வைத்திருந்தார். சினிமா தோன்றிய காலத்தில் இருந்தே கம்யூனிச சினிமா கம்யூனிச எதிர்ப்பு சினிமா என்ற இரண்டு வகைமைகள் இருந்தே வருகின்றன. இந்த நிலைப்பாடுகள் அவரவர் சார்ந்திருக்கும் சித்தாந்தத்தின் வெளிப்பாடு என்பதால் அதற்குள் செல்வது கட்டுரையின் நோக்கம் இல்லை.
Two Prosecutors 2025 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு தேர்வான படம். சோவியத் சுயாதீன எழுத்தாளரும் இயற்பியல் விஞ்ஞானியுமான் Georgy Demidov எழுதிய Two Prosecutors என்ற சிறுகதையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
இவர் தனது அனுபவங்களை, குறிப்பாக Gulag தொழிலாளர் முகாமில் பல ஆண்டுகளாக சிறையில் இருந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தச் சிறுகதையை எழுதினார். இந்தச் சிறுகதை 1969-இல் எழுதப்பட்டாலும், அப்போது வெளியிட முடியாத நிலையில் 2009 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
ஜோசப் ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் நடந்த அரசியல் அடக்குமுறைகள் மற்றும் நீதித்துறையின் அழுத்தங்களை மையமாகக் கொண்ட படைப்பு இது. ஒரு இளம் அரசு வழக்கறிஞரும், அனுபவம் வாய்ந்த மற்றொரு வழக்கறிஞரும் சந்திக்கும் மையப் புள்ளி தான் படத்தின் கரு. கம்யூனிசம் என்ற கொள்கையின் பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்ட அதிகார துஷ்பிரயோகம், Politics of Fear மற்றும் நீதித்துறையின் வீழ்ச்சி ஆகியவற்றைக் கூர்மையாக இந்த படம் சித்தரிக்கிறது. படத்தின் முதல் பதினைந்து நிமிட காட்சிகளே இந்த படம் இப்படித்தான் இருக்கும் என்ற மனநிலையை உருவாக்கி விடுகிறது.
அந்த மனநிலையை கடைசி வரை காட்சிகளும் வசனங்களும் உருவாக்கி இறுதியில் ஒரு முழுமையான சினிமாவுக்கான உணர்வைத் தந்து விடுகிறது.
தொடக்கக் காட்சிகளில் ஒரு முதியவர் சிறைக்கு அழைத்து வரப்படுகிறார். கையில் இருக்கும் குப்பைகளை எரிக்க நிர்பந்திக்கப்படும் அவர், வாசிக்கும் இரண்டு மூன்று கடிதங்களிலேயே அந்த காலகட்டத்தின் கடுமையான சூழல் கடத்தப்படுகிறது. ஒரு இந்தியப் பார்வையில் ரயிலில் பாடப்படும் நாட்டுப்பற்றுபாடல் நமக்கு சமகாலத்தில் திட்டமிட்டு ஊதி பெருக்கப்படும் பாஜக அரசின் தேசிய வாதத்தை நினைவூட்டுகிறது.
மூத்த வழக்கறிஞர் சிறையில் அனுபவிக்கும் கொடுமைகளை இளம் வழக்கறிஞரிடம் விவரிக்கும் காட்சி சமகாலத்தில் ஸ்டான்ட் சாமி உட்பட சிறையில் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட பலரையும் நினைவூட்டவே செய்கிறது.
அப்துல் இமாம் உட்பட சிறையில் அடைக்கப்பட்ட சிந்தனையாளர்கள் பத்திரிகையாளர்களின் அக்கால வடிவம் தான் அந்த மூத்த வழக்கறிஞர்.
சிறையில் அடைக்கப்பட்ட கைதியின் வழக்கை மீண்டும் விசாரிக்க இளம் வழக்கறிஞர் எடுக்கும் முயற்சிகள், அரசியல் அதிகாரம், பயம், மற்றும் NKVD என்ற அமைப்பின் சிக்கல்களைப் படம் பேசுகிறது. NKVD-யின் முதன்மை நோக்கம் சோவியத் அரசை பாதுகாப்பது. மிகுந்த அதிகாரம் கொண்ட இந்த அரசு அமைப்பு நடைமுறையில், அரசியல் எதிர்ப்பாளர்களை ஒடுக்குவதற்கான சக்திவாய்ந்த கருவியாக மாறியது.
உள்நாட்டு பாதுகாப்பு, காவல், உளவுத்துறை, எல்லை பாதுகாப்பு, சிறை மற்றும் தொழிலாளர் முகாம்கள் (Gulag) ஆகிய அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. ஜோசப் ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் NKVD மிகுந்த அதிகாரத்தை பெற்றது. 1930-களின் Great Purge எனப்படும் பெரும் சுத்திகரிப்பு காலத்தில், லட்சக்கணக்கான மக்கள் NKVD மூலம் கைது செய்யப்பட்டனர்.
அரசியல் தலைவர்கள், இராணுவ அதிகாரிகள், எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள் மட்டுமல்லாது, சாதாரண மக்களும் அரச விரோதி என்ற குற்றச்சாட்டில் சிறைபிடிக்கப்பட்டனர். குற்றத்தை ஒப்புக் கொண்டவர்கள் சட்ட விதிமுறைகளின் படி கொல்லப்பட்டனர். பலர் தொழிலாளர் முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.
உண்மையில் நாம் ஜனநாயகம் என நம்புவது பல நாடுகளில் பெரும்பான்மை வாதமாகவே நீடித்திருக்கிறது. மக்களை கட்டுப்படுத்துவது என்பது அரசின் தோற்றத்திலிருந்து தொடங்கி சமூக வலைதள காலத்திலும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் கட்டுப்பாட்டிற்கும் அதிகாரத்திற்கும் எதிராக இந்தப் படம் பல கேள்விகளை எழுப்புகிறது. இங்கு சட்டம் எனப்படுவது நீதியை பாதுகாக்கவா அல்லது அதிகாரத்தை பாதுகாக்கவா என்பது அதில் ஒரு முக்கியமான கேள்வி.
தொடக்கம் முதல் இறுதிக் காட்சி வரை திரையிலிருந்து கண்களை வேறு பக்கம் நகர்த்த முடியாத அளவுக்கு அவ்வளவு கச்சிதமான காட்சியமைப்புகள் நகர்கின்றன. அதிகாரம் என்ற ஒன்று இருக்கும் வரை அதற்கு எதிரான கேள்விகள் இருந்து கொண்டே இருக்கும் அந்த வகையில் இந்த படம் வரலாற்றை நினைவு படுத்தினாலும் அதிகாரத்திற்கு எதிரான கேள்வியை செயல்பாட்டை முன்வைக்கிறது.
மூன்று படங்களில் மிகவும் பலகீனமான படம் என்றால் அது கேங்ஸ்டாஸ் படம் தான்.
காரணம் மலையாளத்தின் ‘தள்ளுமலா’, லவ் டுடே போன்ற படங்கள், அதன் காட்சி அமைப்புகள் எப்படி சமகால 2k கிட்ஸ் மற்றும் ஜென் இசட் தலைமுறையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதோ, அதேபோன்றுதான் படத்தின் கால்வாசி காட்சி அமைப்புகள் இருக்கின்றன. குறிப்பாக முதல் அரை மணி நேரம் கதாபாத்திரங்களின் அறிமுகம் என்பதே இந்த போக்கில் தான் நகர்கிறது.
Gangsta 2018-இல் வெளிவந்த Antwerp என்ற துறைமுக நகரின் பின்னணியில் நடக்கும் பெல்ஜிய crime சினிமா. அதன் sequel தான் 2025 ஆம் ஆண்டு வெளியான இந்த சினிமா. இங்குள்ள போதை மருந்து கும்பலின் வாழ்க்கை, போதை மருந்து வர்த்தகம், காதல் மற்றும் வன்முறையே கதையை நகர்த்துகிறது.
ரத்தம் இல்லாமல் போதை மருந்தை கடத்தும் நாயகன், அவனது வீழ்ச்சி, அவனை வைத்து பணம் சம்பாதிக்க நினைக்கும் கும்பலின் கதையை முடித்துவிட்டு இறுதியில் ஹீரோவின் எழுச்சி என்ற வழக்கமான டெம்ப்ளேட் தான் படம்.
ஒரு நாளில் ஐந்து படங்கள் பார்ப்பவர்கள் சற்று ரிலாக்ஸ் ஆக ஒரு படத்தை பார்ப்பார்களே அந்தப் படம் என கேங்ஸ்டாவை வைத்துக் கொள்ளலாம். 2k கிட்ஸ்-களின் தாக்கம் உள்ளூர் சினிமா முதல் உலக சினிமா வரை எப்படி பாதிக்கிறது என்பதை வேண்டுமானால் இந்த படத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மற்றபடி இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன் டெம்ப்லேட்டில் வருவது போல் இதில் ஒன்றும் இல்லை கீழே போட்டு விட வேண்டியது தான்.
இப்படியாக மூன்று படங்களின் அனுபவம் எனக்கு வாய்த்தது.











