தமிழ் தியாகராஜன்
சில படங்கள் ஒவ்வொரு முறையும் நம்மை அந்த கதைக்களத்திற்குள் கொண்டு செல்லும்போது புதுவித பார்வையையும், புது அனுபவத்தை கொடுக்கும். A Separation, Citizen Kane, Requiem for a Dream போன்ற திரைப்படங்களை உதாரணங்களாகச் சொல்லலாம். Amour போன்ற திரைப்படங்கள் அந்த வரிசையில் இடம் பெற்று இருக்கின்றன.
ஆஸ்திரியா நாட்டு இயக்குநர் மைக்கேல் ஹானேக்கின் (Michael Haneke) இரண்டாவது படம் 2021ம் ஆண்டு Palme d’Or விருதுக்காக தேர்வு செய்யப்பட்ட திரைப்படம் அமூர் (Amour – 2012).
1942ல் பிறந்த மைக்கேல், தன் தந்தையின் பிரிவினால் ஏமாற்றப்பட்டு தன்னுடைய குடும்பத்து பெண்களால் வளர்க்கப்பட்டதாக ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
தன் அம்மா அத்தை மற்றும் பாட்டியினால் வளர்க்கப்பட்டவர். அவரது கடந்த கால சூழ்நிலைகளும் அதற்கான மன ஓட்டமும் தனது திரைப்படத்தில் வெளிப்பட்டதாகவும் வெளிப்படுத்துவதாகவும் அதிலிருந்து புரிந்து கொள்ளலாம்..
மைக்கேல் தத்துவவியல் மற்றும் மனோவியல் தொடர்பான காட்சிகள் தனது கதைகளில் வெளிப்படுவதற்கு அவரது கல்வி பின்புலமாக அமைந்திருப்பதைச் சொல்கிறார்.
மைக்கேல் திரைப்படங்களில் விலங்குகளை கொடுமைப்படுத்தி எடுக்கக்கூடிய காட்சிகளை வெறுக்க கூடியவர் என்பதற்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு The Seventh Continent திரைப்படம். இதில் ஒரு காட்சி அமைந்திருக்கும். வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் உடைத்து இறுதியாக ஒரு மீன் தொட்டியை உடைக்கும் காட்சி.
அதில் மீன்கள் துடிதுடித்துக் கொண்டிருக்கும் பொழுது அவற்றை படப்பிடிப்பின் பொழுது அந்த மீன்களை காப்பாற்ற நினைத்ததை தி கார்டியன் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் சொல்லியிருக்கிறார். விலங்குகள் கொடுமைப்படுத்தவில்லை என்கிற சான்றிதழைத் தருவதற்கு உண்மையாகவே பாடுபட்டிருக்கிறார். ஆனால் அந்த மீன்கள் சிலவற்றைக் காப்பாற்ற முடியவில்லை என்பதையும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
ஒரு பார்வையாளர்கள் என்ன பார்க்கிறார்கள், அவர்கள் என்ன உணருகிறார்கள் என்பதை அவர்களின் மனதில் இருந்து அதற்கான பதிலை தேடும் அளவிற்கு இவர் படத்தின் காட்சிகளும் கதைகளும் அமைகின்றன. நடிகர்களின் தேர்வு முதல் தனது கதாபாத்திரம் வாழும் ஒரு வீட்டின் அமைப்பு வரை எல்லாமே அவரிடமிருந்து வெளிப்படுபவை. அலமாரியில் உள்ள புத்தகத்தின் தலைப்பைக் கூட அவர் தான் தேர்வு செய்கிறார். அலமாரி தொடங்கி படப்பிடிப்பு தளத்தில் உள்ள பொருட்கள் வரை அவரால் வடிவமைக்கப்பட்டவையே.
மைக்கேல் தன்னுடைய கருத்துக்களை நேரடியாகக் கூறுவதில்லை. ஆம் வாழ்வின் போக்கில் அதை ஓட விடுகிறார். ஒரு திரைப்படத்தில் உள்ள கருத்துக்கள் இவ்வாறு தான் இருக்க வேண்டும் என்பதை எவ்வித காட்சிகள் மூலமாகவும் அவர் கூறவில்லை. திரைப்படம் ஓடுகிறது. விமர்சகர்கள் பார்வையாளர்கள் அதை கவனிக்கின்றனர். சொல் வருகிற அவரது கருத்துக்கள் அப்படியே நம் மனதில் பதிகின்றன.
Amour திரைப்படம் தன் வாழ்நாளில் ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதாக சில பேட்டிகளில் அவர் கூறியிருக்கிறார். அவருடைய அத்தையின் மரணம் அவரை மிகவும் பாதித்ததாகவும் அதில் குறிப்பிட்டு இருக்கிறார். உடல் நலமில்லாத தன் அத்தையின் இறப்பு அவரை வெகுவாக பாதித்திருக்கிறது. கடைசி தருவாயில் அவரது இறப்பிற்காக கெஞ்சியதாகவும், அதன் வலியை இந்த திரைப்படத்தின் மூலமாக உணர்த்தி இருப்பதாகவும் கூறுகிறார். அவரது கதை தொடக்கத்தில் இரண்டு இளம் தம்பதியினரை பற்றியதாக இருந்ததாகவும் அதன் பிறகு, உலகம் முழுக்க இருக்கும் வயதானவர்களின் பிரச்சினையை, வயது முதிர்வு காரணமாக ஏற்படும் நிலைமையை வயதான தம்பதிகள் மூலமாக மட்டுமே வெளிக்கொணர முடியும் என்பதால் கதையில் சில மாற்றங்கள் செய்திருக்கிறார்.
கதாநாயகன் ஜான் லூயி (jean Louis Trintignant) பதினான்கு வருடங்களுக்குப் பிறகு இந்தக் கதையில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். அவர் அப்பொழுது மைக்கேல் பற்றி “இவர் மிகவும் தேர்ச்சி பெற்று சினிமாவின் ஒழுக்கங்களை கற்றுள்ளார்” என கூறி இருக்கிறார்.
வயதான தம்பதியில் நாயகியாக எம்மானுவல் ரிவா (Emmanuelle Riva) அவர்களை தேர்வு செய்கிறார். அவரும் கிட்டத்தட்ட எண்பது வயதான பெண்மணி. அவர் இவரைப் பற்றி “மிகவும் தேர்ச்சி பெற்ற ஒரு நடிகர் நிச்சயமாக கதைக்கான நடிகர்களை தேர்வு செய்வார்” எனக் கூறியிருக்கிறார். (Isabelle Huppert) இசபெல் ஹ்யூபெர்ட் அவரது மகளாக இந்தத் திரைப்படத்தில் அற்புதமாக உணர்ச்சிகளைக் கடத்தும் விதமாக நடித்து இருக்கிறார்.
டாரியஸ் கோண்ட்ஜி (Darius khondji) இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக மைக்கேல் உடன் வேலை செய்திருக்கிறார். படப்பிடிப்பிற்கு முன்பாகவே அவரது ஸ்டோரி போர்டு (storyboard) பிரீ விசுவலிசேசன் (pre visualization) உணர்வுகளை கடத்தக்கூடிய வண்ணங்கள் மூலமாக வெளிக்கொண்டு வந்து இருக்கிறார்.
ஒரு வயதான தம்பதிக்கிடையே உள்ள காதல் எவ்வாறு கருவியாக பயன்படுத்தப்படுகிறது என்பதை இந்தத் திரைப்படத்தை பார்ப்பதன் மூலமாக உணரலாம். காதல் என்ன செய்யும் என்று கேட்பதை விட காதல் என்பது அனைத்தையும் செய்யும் என்பதை உணரலாம். நிச்சயமாக அனைத்தையும் செய்யும், கொலையும் செய்யும், அந்தக் காதலை பாதுகாக்கவும் செய்யும். ஒரு முதுமையின் வலி, தனிமை, மறதி அனுபவங்கள் என அவர்களின் கடைசி காலத்தை நமது கண் முன்னே நிறுத்துகிறது.
ஒரு வீட்டில் திருட்டு ஏற்படும்போது அந்தக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபர்களின் மன ஓட்டமும் வேதனையும் தற்காலச் சூழலில் நம்மால் புரிந்து கொள்ள முடியும். எதிர்வரும் காலங்களில் இதேபோல் ஏற்படாமல் இருக்கவும் தற்போது ஏற்பட்ட திருட்டை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என்ற அந்தக் குடும்பம் போராடுவதும் மிகச் சாதாரணமாக ஒவ்வொரு வீட்டிலும் பார்க்கலாம். அதற்கு அப்படியே எதிர்மாறாக தனது வாழ்க்கையை எப்படி அணுகுகிறார் என்பதை ஜார்ஜ் மூலம் காட்டுகிறார். ஜார்ஜின் தன் வாழ்வில் ஏற்படும் ஒரு சாதாரண திருட்டை, எவ்விதக் கவலையும் இல்லாமல், காவல் துறையை அழைக்காமல், அவரது மாலை பொழுதை அணு அளவு கூட தொலைக்காமல் அதை அப்படியே விட்டு விடுகிறார். எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக்கொண்டு பதட்டமில்லாத ஒரு மாலை நேரத்தை அவரால் நகர்த்த முடிகிறது. அவரது வாழ்வில் காதல் மற்றும் சில இடர்பாடுகள் வருகின்றன.
ஜார்ஜ் ஒரு கட்டத்தில் அன்னாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல விருப்பப்படுகிறார். ஆனால் அன்னா தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதைத் தவிர்க்குமாறு அவரிடம் வேண்டிக்கொண்டு உறுதி வாங்கிக் கொள்கிறாள். அவளது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதை ஜார்ஜ் உணர்கிறார். வேறு வழியின்றி அவளுக்கு கொடுத்த வாக்கினை காப்பாற்ற நினைக்கிறார். வீட்டிலிருந்தே அவளைப் பார்த்துக் கொள்ள தன் மனதை தயார் செய்து கொள்கிறார். அவர்கள் இருவருக்கும் முதுமை மிகுந்த சிரமத்தை கொடுக்கிறது. காதல் ஒருபுறம் வயது ஒரு புறம் என ஜார்ஜ் தனது வாழ்வில் எதிர்கொள்ளும் சம்பவங்களை சாதாரணமாக முன்னெடுத்துச் செல்கிறார்.
இருவரும் பேசிக் கொண்டிருக்கையில் அன்னா தன்னுடைய எண்ணங்களையும் நினைவுகளையும் இழந்து அவர் பேசுவதை கவனிக்காமல் ஓரிடத்தையே பார்த்துக் கொண்டிருப்பதை ஜார்ஜ் கவனித்து கொஞ்சம் சத்தமாக அவளை கூப்பிடும் பொழுது அன்னாவின் நிலைமையை பார்த்து நமக்கே ஒரு நிமிடம் பரிதவிப்பு ஏற்படுகிறது. இப்படியான மறதி மற்றும் அன்னாவிற்கு ஏற்படக்கூடிய வாத நோயையும் பற்றி ஜார்ஜ் கவலைப்பட ஆரம்பிக்கிறார். அவளுடைய மகள் தன் தாய்க்கு மருத்துவ உதவி புரிய முன் வரும்போது அதற்கான எவ்வித உதவியும் தேவையில்லை என அன்னா அதை மறுத்து விடுகிறார் ஆனால் ஜார்ஜ் அவளது இறுதி காலம் வரை உடனிருந்து உதவிகளைச் செய்ய உறுதி கொள்கிறார்.
அன்னாவைக் குளிப்பாட்டுவதும் அவளின் உடையை மாற்றி விடுவதும் என வயதான தம்பதிகள் ஒருவருக்கொருவரான உதவி எவ்வளவு முக்கியமாகப்படுகிறது என்பதைக் காட்சிகள் மூலமாக நமது கண் முன் நடப்பது போல விவரித்து இருக்கிறார். அன்னா படுக்கையில் விழுகிறாள். அன்னாவின் இறுதிக் காலம் நெருங்கி விட்டது என்பதை ஜார்ஜ் உணர்ந்து தன் பால்ய காலக் கதையைச் சொல்கிறார். அப்பொழுது அருகில் இருக்கும் தலையணையைக் கொண்டு அன்னாவின் மூச்சை நிறுத்தி விடுகிறார். தன் காதல் மனைவியின் வேதனையை ஜார்ஜ் உணர்ந்து, அவரின் இறுதி நிமிடமாவது நிம்மதியாக இருக்க வேண்டும் என்று ஜார்ஜ் முடிவு செய்கிறார்.
தன் மனைவி இறந்த பிறகு அவருக்கான பூக்களையும் மலர் வளையங்களையும் எடுத்து அவளை அலங்கரித்து வைக்கிறார். இவ்வாறாக அன்னாவின் இறுதி நிமிடங்கள் அமைகின்றன. அன்னாவின் இறந்த உடலை உயிருடன் இருப்பதாக நினைத்துக் கொண்டு ஜார்ஜ் அவளை அப்படியே விட்டுவிட்டு அந்த வீட்டிலிருந்து வெளியே செல்கிறார். அவர்கள் நினைவை சுமந்து கொண்டு அந்த வீடும் அப்படியே இருக்கிறது.

எவ்வித ஆர்ப்பாட்டமான இடர்பாடுகளும் இன்றி மிகச் சாதாரண மிக மென்மையான ஒரு காதல் கதையாக அமைந்திருக்கிறது. இப்படியான கதைகளங்கள் வெளிவருவதும் அதனை உணர்வதும் மிக அரியதான ஒன்றாகும். தற்பொழுது 83 வயதை எட்டியிருக்கும் இயக்குநர் மைக்கேல் மென்மையான கலை சார்ந்த காட்சி அமைப்புகளையும் கதை அமைப்புகளையும் தரும் திரைப்படங்களையே எடுத்து வருகிறார்.
ஜூலை மாதம் 2025 மைக்கேல் இறந்து விட்டதாக சமூக வலைதளங்களில் மிகப்பெரிய செய்திகள் பரவ ஆரம்பித்தன. அவை அனைத்தும் பொய் செய்திகள் என அவற்றை நம்ப வேண்டாம் என நம்பத்தகுந்த செய்திகள் வெளிவந்தன.
மைக்கேல் இனி தொடர்ந்து திரைப்படங்களை இயக்குவார் என்பதை உறுதியாக சொல்ல முடியாது ஆனால் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார் என அவரது நெருங்கிய நண்பர்கள் சொல்கிறார்கள். அவர் தொடர்ந்து இயக்குவாரா என்பது தெரியாது, ஆனால் அப்படி இயக்கும்போது அது நிச்சயம் அவரது அனுபவத்தினை சேர்த்துக் கொண்டு கலைப்படைப்பாக மேலும் உயர்ந்து நிற்கும்.











