லலிதா ராம்
தன் வாழ்நாளில் எத்தனையோ கலை உச்சங்களைத் தொட்டுப் பல பட்டங்களைப் பெற்றிருந்தாலும், திருமெய்ஞானம் நடராஜசுந்தரம் பிள்ளையைக் குறிக்கும் போது அவருக்குத் தவில் மேதை நீடாமங்கலம் ஷண்முகவடிவேல் அளித்த ‘நாகஸ்வர யமன்’ என்கிற பட்டமே பிரபல முன்னொட்டாக அமைந்தது.
எதை வாசித்தாலும் அதில் லய நுணுக்கங்களை நுட்பமாய் புகுத்தி உடன் வாசித்தவரின் கவனம் சிறிது தவறினாலும் இடறும் வகையில் வாசித்த ‘யமகாதகர்’ என்கிற அர்த்தத்தில் மட்டும் வழங்கப்பெற்ற பட்டம் அதுவன்று.
புராணத்தில் யமன் தர்மராஜன். வேண்டுபவர்/வேண்டாதவர், நல்லவர்/தீயவர், முதியவர்/இளையவர் என்ற பாகுபாடெல்லாம் பார்க்காமல் தமக்குக் கொடுக்கப்பட்ட தர்மத்திலிருந்து சிறிதும் வழுவாது இருப்பவன். அந்த அர்த்தத்தில் தாளம் போடுபவரின் தாளம் நிர்ணயம் எப்படி, உடன் வாசிப்பவர் சற்று ஓட்டியும் இழுத்தும் காலபிரமாணத்தைக் குலைக்கிறாரா என்றெல்லாம் கொஞ்சம்கூட பொருட்படுத்தாத எத்தனை நுணுக்கமான பல்லவியானாலும் கொஞ்சம் கூட தாளத்திலிருந்து வழுவாது வாசித்ததால் அந்தப் பட்டம் என்று பலர் சொல்லிக் கேட்டதுண்டு.
எனக்கு இந்தத் ‘தர்மத்தில்’ இன்னொரு விஷயமும் சேர்த்தி என்று சொல்லத் தோன்றுகிறது. யாரும் கேட்டிராத கணித அடுக்குகளை எல்லாம் புகுத்திய போதும் எடுத்துக் கொண்ட ராகத்தின் இனிமை கொஞ்சம் கூடக் கெடாமல் வாசித்தல் என்கின்ற தர்மத்திலிருந்தும் சற்றும் விலகாத பாணியையும் சேர்த்துத்தான் நீடாமங்கலத்தார் அவருக்கு இந்தப் பட்டத்தை வழங்கியிருப்பார் என்று சொல்லத் தோன்றுகிறது.
இதை உணர்ந்து கொள்ள இன்று கிடைக்கும் பதிவுகளில் அவர் வாசித்துள்ள திரிபுட தாள மல்லாரியையோ அல்லது முன்று காலங்களும் ஒரே வரியில் இணைந்து ஒலிக்கும் பைரவி அட தாள வர்ணத்தையோ கேட்டுப் பாருங்கள். விரலொடியும் கணக்குக்குள் செல்லாமல் போனாலும் கண்களை மூடிக் கொண்டால் ராக தேவதை பிரத்யட்சமாய் வாசிப்பு முழுவதும் நிலைத்து நிற்பதை உணர முடியும்.

1981-ல் வெளியான ‘வெளிச்சத்துக்கு வாங்க’ என்கிற திரைப்படத்தில் தொடக்கத்தில் பெயர்கள் தோன்றும் போது ஒலிக்கும் தலைப்பிசையாக திருமெய்ஞானத்தாரின் நாகஸ்வரம் இடம்பெற்றுள்ளது. ‘தனம் தரும் கல்வி தரும்’ என்கிற அபிராம அந்தாதிப் பாடல் பத்மபூஷண் விருது பெற்ற பாடகி வாணி ஜெயராமின் குரலில் ஹிந்தோள ராக விருத்தமாய் ஒலித்த பின், அதே ராகத்தில் வீணையில் ஓர் சிறு இடையிசைக்குப் பின் பொறிபறக்கும் தவில் தீர்மானத்துக்குப் பின் ஒரு விறுவிறுப்பான கிருதியை ஹிந்தோள ராகத்தில் நடராஜசுந்தரம் பிள்ளை வாசித்துள்ளார்.
நாம் கலைஞர்களை மதிப்பிடும் போது, அவர்களைப் பற்றி பிரபலமாகிவிட்ட ஒரு அம்சத்தில் மட்டுமே கவனத்தைச் செலுத்தி, மற்ற விஷயங்கள் (நிறைந்திருந்தாலும்) அதை அதிகம் பொருட்படுத்தாமல் இருந்துவிடுவதை பல சமயம் நிதர்சனமாய் நான் கண்டதுண்டு. அந்த வகையில், திருமெய்ஞானத்தார் என்றாலே கரடுமுரடான பல்லவியும், நுட்பம் நிறைய லயக் கோவைகள் நிறைந்த ஸ்வரப்ரஸ்தாரமும்தான் என்கிற மாயத் தோற்றத்தை உடைத்து, அவர் கீர்த்தனை வாசிப்பில் எத்தனை நகாசுடன் வாசித்திருக்கிறார் என்பதை கவனப்படுத்த இந்தத் திரைப்பட இசையே தக்க சான்றாகும்.
எனக்குத் தெரிந்த வரையில் விசாரித்துப் பார்த்தும் இந்தக் கீர்த்தனை யார் அமைத்தது, இதன் சாஹித்யம் என்ன – என்பதை அறியக்கூடவில்லை. படம் வெளியான 1981-ம் ஆண்டிலேயே நடராஜசுந்தரம் பிள்ளையும் மறைந்துவிட்டது நம் துரதிர்ஷ்டம்.
இதைத் தவிர வெளிவராத படமான ‘நாத நர்த்தகி’ என்கிற படத்திலும் திருமெய்ஞானத்தார் வாசித்திருக்கிறார் என்று தெரிய வருகிறது. ’முருகா உனக்கு’ என்ற சிந்துபைரவி ராகத்தில் அமைந்த பாடலை வாணி ஜெயராமுடன் இணைந்து ‘நாகஸ்வர/வாய்ப்பாட்டு’ டூயட்டாக அமைத்திருக்கின்றனர். இந்தப் பாடலின் பதிவு நமக்குக் கிடைக்கவில்லை என்றாலும் தம் குடும்பக் பொக்கிஷமாய் இதைப் பாதுகாத்து கச்சேரிகளில் திருமெய்ஞானத்தாரின் மகன் டி.பி.என்.ராமநாதன் கச்சேரிகளில் வாசித்து வருகிறார்.
வெளிவராத எத்தனையோ படங்களின் பாடல்கள் கிடைக்கின்றனவே. அப்படி இந்தப் பாடலும் கிடைக்கக் கூடுமா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும். அதுவரை பாடலின் இறுதியில் ஒலிக்கும் ஸ்வரப்ரஸ்தாரம் குரலும் குழலுமாய் மாற்றி மாற்றி எப்படி ஒலித்திருக்கும் என்பதைக் கற்பனை செய்துதான் நிரப்பிக் கொள்ள வேண்டும்.
திருச்சேறை சிவசுப்ரமண்ய பிள்ளை
பிரபல நாகஸ்வர கலைஞர்களின் பட்டியலை நோக்கினால் அதிலுள்ள கலைஞர்கள் இசையின் ஏதோ ஒரு பரிமாணத்தில் தனித்துவமான திறனைக் காட்டி பரிமளித்திருப்பதே பெரும்பாலான கலைஞர்களுக்குப் பொருந்தும். ஒரு சில கலைஞர்களே எந்த ஒரு இசைப் பரிமானத்திலும் சிறந்து விளங்கக் கூடியவர் என்கிற பெயரைப் பெற்றிருப்பர். அந்தச் சிலருள் முக்கியமான ஆளுமை என்று விளங்கியவர் சிவசுப்ரமண்ய பிள்ளை. அவரை ‘ரெடிப் பிள்ளை’ என்ற செல்லப் பெயரோடு பலர் இன்றளவும் குறிப்பிடுவதுண்டு. எந்த ஒரு இசைப் பரிமாணமாகத்தைக் கேட்டாலும் தயாராக ‘இதோ நான் ரெடி’ என்று வாசிக்கக் கூடிய அவர் திறனைக் குறிக்கும் காரணப் பெயர் ‘ரெடிப் பிள்ளை’.

திரைப்படத்தில் வாசித்ததோடன்றி திரையிலும் தோன்றியவர் என்கிற பெருமை சிவசுப்ரமண்ய பிள்ளைக்கு உண்டு. சாண்டோ சின்னப்ப தேவரின் தயாரிப்பில் வெளியான ‘திருவருள்’ படத்தில் ஒரு நிமிடத்துக்குக் குறைவான காட்சியில் இவர் நாகஸ்வரம் வாசிக்கும் காட்சி இடம்பெற்று உள்ளது. இந்தப் படத்துக்காக ‘நாதலோலுடை’ கீர்த்தனத்தையும் இவர் வாசிப்பில் பதிவு செய்திருந்தனர். ஆனால் படத்தில் அந்தப் பகுதி இடம்பெறவில்லை. இந்தச் செய்தியை சிவசுப்ரமண்ய பிள்ளையின் மகன் ரகுவீரன் எனக்குத் தெரிவித்தார்.
ஒரு ஆச்சர்யமான விஷயம்…
இன்று சிவ சுப்ரமணிய பிள்ளையின் நாகஸ்வரத்தை திரையிசையில் கேட்க நாம் பாலிவுட் படத்தையே நாட வேண்டும்!
ஆலயமணி, அடிமைப் பெண் போன்ற சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய கே.சங்கர் இயக்கிய ஹிந்திப் படம் ‘சச்சாயி’. சங்கர் – ஜெய்கிஷன் இசை இரட்டையர் இசையமைத்த இந்தப் படத்தில் ஆஷா போன்ஸ்லே பாடியுள்ள ‘மோரே சையான்’ என்கிற பாடல் முழுவதிலும் சிவசுப்ரமண்ய பிள்ளையின் நாகஸ்வரம் இடம்பெற்றுள்ளது. ’சோரி சோரி’ என்கிற ஹிந்திப் படத்தில் வடக்கிந்தியருக்கு கர்நாடக இசையின் சுவையை காட்டியே தீர வேண்டும் என்ற வைராக்கியத்தில் மகாவிதுஷி எம்.எல்.வசந்தகுமாரி பாடிய தில்லானா ஒன்றை படத்தில் வைத்திருப்பார்கள். அது போலத்தான் நாகஸ்வரத்தையும் தவிலையும் வடக்கில் ஒலிக்க விட்டே ஆக வேண்டுமென்ற இந்தப் பாடலை அமைத்திருப்பார்கள் என்று தோன்றுகிறது. பாடலின் தொடக்கத்திலேயே தவில் தீர்மானங்கள் இடம்பெற, பாடல் முழுவதும் ஆஷா போன்ஸ்லேவில் குரலின் இனிமைக்கு இணையாக சிவசுப்ரமணிய பிள்ளையின் குழலும் இழைந்திருப்பதைக் கேட்க முடிகிறது.
(தொடரும்)











