கிங் விஸ்வா
கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி நம்மை விட்டுப் பிரிந்த ஜப்பானிய அனிமேட்டர் / இயக்குநர் ஷிகேகி அவாய் அவர்களுக்கும் அருந்ததி ராய் அவர்கள் எழுதிய The God of Small Things என்ற புத்தகத்திற்கும் இந்தக் கட்டுரையின் மூலமாக ஒரு தொடர்பு உருவாகும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. ஆனால், அப்படி ஒரு தொடர்பு இருக்கிறது.
ஷிகேகி அவாய் (Shikegi Awai / Shigenori Awai) கடந்த 45 ஆண்டுகளாக ஜப்பானிய அனிமே தொடர்கள் மற்றும் திரைப்படத்துறையில் கொடி கட்டிப் பறந்த ஒரு படைப்பாளி.
· ஒரு தொடருக்கான ஸ்டோரி போர்ட் ஆர்ட்டிஸ்டாக,
· அனிமேஷன் காட்சிகளை வரையும் ஓர் ஓவியராக (அனிமேட்டர்),
· மற்ற ஓவியர்கள் தடுமாறும் சிரமமான காட்சிகளை உருவாக்கும் முக்கியமான திரை கலை ஓவியராக (கீ அனிமேட்டர் Key Animator),
· காட்சிகள் முடிந்த பிறகு அவற்றை இணைக்கும் இணைப்பு அனிமேட்டராக (In Between Animation),
· அனைத்து ஓவியர்களையும் ஒருங்கிணைத்து முழுமையான அனிமேஷன் காட்சிகளை உருவாக்கும் சீஃப் டைரக்டராக,
· அனிமேஷன் காட்சியை நிர்வகிக்கும் அனிமேஷன் டைரக்டராக,
· அனிமேஷன் தொடரின் ஒரு பாகத்தை இயக்கும் எபிசோட் டைரக்டராக,
· முழுமையான திரைப்பட / தொடரின் டெக்னிகல் டைரக்டராக,
· ஒரு திரைப்படத்தின் / தொடரின் இயக்குநராக,
· ஒரு படைப்பாளியாக,
என்று தனது 45 ஆண்டு கால திரைப்பட / அனிமேஷன் தொடர் கலையுலக வாழ்க்கையில் இவர் ஏற்காத பொறுப்புகளோ, செய்யாத சாதனைகளோ இல்லை. குறிப்பாக,
· Naruto
· Boruto
· One Piece
· Jojo’s Bizarre Adventures
· One Punch Man
· Tokyo UnderGround
· BeyBlade
· Food War
· Attack on the Titan
· My Hero Academia
· Uzumaki
போன்ற பிரபலமான அனிமே தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் இவரது பங்களிப்பை விவரிக்க வார்த்தைகளே இல்லை. 200க்கும் மேற்பட்ட அனிமே தொடர்களின் எபிசோட்களை இயக்கிய இவர் 500க்கும் மேற்பட்ட அனிமே தொடர் மற்றும் திரைப்படங்களில் தனது முத்திரையை விட்டுச் சென்றிருக்கிறார்.
உலகம் முழுவதுமே கொண்டாடித் தீர்த்த நரூட்டோ, பொரூட்டோ, ஒன் பீஸ் போன்ற படங்களில்தான் இவரது ஆகச்சிறந்த கலைத்திறமை வெளிப்பட்டு இருக்கிறது என்று பல ஊடகங்களில் எழுதி வருகிறார்கள். அவர்கள் கருத்தில் தவறேதும் இல்லைதான்.
ஆனால், கலை உலகம் கொண்டாட வேண்டிய அளவிற்கு கொண்டாடத் தவறிய ஓர் அனிமே தொடர் இருக்கிறது. Bungo Stray Dogs என்ற ஒரு தொடரை இவர் உச்சத்திற்குக் கொண்டு சென்றார். யோகோஹாமா என்ற நகரத்தை மாஃபியா கும்பலிடம் இருந்து காப்பாற்றும் பொறுப்பை ஒரு துப்பறியும் குழு ஏற்றுக்கொள்கிறது. என்ன, வழக்கமான குற்றங்களை இழைக்கும் வில்லன்கள் குழு, அவர்களுக்கு எதிராகப் போராடும் நீதிக்காவலர்கள் குழுவின் கதைதானே? இது அரதப்பழசான கதை ஆயிற்றே என்று யோசிக்க வேண்டாம்.
முதல் கட்டமாக மாஃபியா கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு கற்பனைக்கு எட்டாத சூப்பர் பவர்களைக் கொடுத்தார்கள். உருமாறும் திறன் கொண்ட வில்லன், எதிர்காலத்தைக் கணிக்கும் வில்லன் என்று விசித்திரமான சூப்பர் பவர் கொண்ட வில்லன்களைக் கொண்ட மாஃபியா கும்பல் யோகோஹாமா நகரில் குற்றச் செயல்களில் ஈடுபட, காவல்துறையால் இவர்களுக்கு எதிராக ஒன்றுமே செய்யமுடியாத நிலையில்தான் நமது நீதிக்காவலர்கள் ஆட்டத்தில் பங்கேற்கிறார்கள்.
வில்லன்களுக்கு மட்டும்தான் சூப்பர் பவரா? அவர்களை எதிர்க்கும் ஹீரோக்களுக்குமே சூப்பர் பவர்களைக் கொடுத்தார்கள். இது மட்டுமல்ல. கதையின் போக்கில் சில முக்கியமான விஷயங்களை, நுணுக்கமாக அணுக வேண்டிய விஷயங்களை கதை மாந்தர்கள் கையாண்ட விதம் ஜப்பான் முழுமைக்குமான பேசு பொருளானது. இப்படிப்பட்ட இந்தத் தொடர் உருவாவதில் ஷிகேகி அவாய் அவர்களின் பங்கு மிகவும் முக்கியமானது.
சரி, இப்போது கட்டுரையின் முதல் பத்திக்கு வருவோம். அருந்ததி ராய் அவர்கள் எழுதிய The God of Small Things என்ற புத்தகத்திற்கும் ஷிகேகி அவாய் அவர்களுக்கும் என்ன தொடர்பு?
அனிமேஷன் தொடர்களைப் பொருத்தவரையில் ஆக்ஷன் மற்றும் சண்டைக் காட்சிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படும். அந்த வகையில், ஒரு தொடரை / திரைப்படத்தை ஹிட் ஆக்குவதற்கும் பிளாக் பஸ்டர் ஹிட் ஆக்குவதற்கும் இடையே இருப்பதே இந்த சண்டைக் காட்சிகளும் அவற்றின் ஆக்ஷன் கொரியோகிராஃபியும்தான்.
இந்த இடத்தில்தான் ஷிகேகி அவாய் லைம் லைட்டில் வருகிறார். உதாரணத்திற்கு நரூட்டோவில் வரும் ஒரு சண்டைக் காட்சியை எடுத்துக் கொள்வோம். இதுபோன்ற சண்டைக் காட்சிகளில் இயக்குநர்கள் நாயகனும் எதிர் நாயகனும் சண்டை போட வேண்டும் என்று எழுதிவிடுவார்கள். ஆனால், இந்த சண்டைக் காட்சியை ஏற்கனவே வந்துள்ள லட்சக்கணக்கான சண்டைகளில் இருந்து வேறுபடுத்திக் காட்ட வேண்டியதுதான் ஷிகேகி அவாய் போன்ற திறமைசாலிகளின் வேலை. இந்த சண்டையில் Micro Plot என்று இன்னமும் Deep ஆக, சண்டைக் காட்சியை Frame By Frame ஆகப் பிரித்து இரண்டாவது கதாசிரியராக முன்னே வருகிறார்கள்.
நரூட்டோவின் இந்தக் குறிப்பிட்ட சண்டைக் காட்சியை அனிமேட் செய்தவர் நோரியோ மட்ஸுமோடோ. அவருக்கு வழிகாட்டியாக இருந்தவர் ஷிகேகி அவாய். இந்த சண்டைக் காட்சியில் முதல் படத்தில் குத்துபவரையும் குத்து வாங்குபவரையும் ரெஜிஸ்டர் செய்து விடுகிறார்கள்.

அடுத்த இரண்டாவது படத்தில்
· குத்து வாங்குபவரின் உடல்
· குறிப்பாக வயிற்றுப் பகுதி குத்து வாங்கிய பிறகு எப்படி பின்புறமாக செல்கிறது
· குத்து வாங்கும்போது அவரது கண்கள் தன்னிச்சையாக மூடிக்கொள்வது
என்ற மூன்று விஷயங்களையும் கவனியுங்கள்.

மூன்றாவது படம் மிகவும் முக்கியமானது. இதில் குத்து வாங்கியவரின் முதுகுப் பகுதி எப்படி பின் சென்று வீங்கியது போலக் காணப்படுகிறது என்று பாருங்கள். UnRealistic ஆக இருந்தாலும், அந்த சண்டைக் காட்சியை மேம்படுத்தி, பார்ப்பவர்களை புதியதொரு கட்டத்திற்கு உயர்த்துகிறது.

நான்காவது படம்தான் இந்த சண்டைக் காட்சியின் உச்சகட்டம். குத்து வாங்கும்போது மூடி இருந்த குத்து வாங்கியவரின் கண் கருவிழி எப்படி ECG Graph போல உருமாறுகிறது என்பதைக் கவனியுங்கள். அவர் வாங்கிய குத்தின் வீரியம் அப்படிப்பட்டது என்பதை மிகவும் எளிதாக நமக்குக் கடத்திவிட்டார்கள்.

அடுத்த படத்தில் குத்தின் வேகம், வீச்சு காரணமாக குத்து வாங்கியவர் புவியீர்ப்பு சக்தியை மீறி காற்றில் பறப்பதுமே புதுமைதான்.

ஒரு சண்டைக்காட்சி என்பது ஒரு திரைப்படத்தில் / தொடரில் வரும் ஒரு சிறு பகுதிதான். ஆனால், அந்த ஒரு சிறு காட்சியையுமே, சொல்லப்போனால் ஒவ்வொரு சிறு காட்சியுமே ஆகச்சிறப்பாக இருந்தால்தான் அந்தத் திரைப்படம் / தொடர் சிலாகித்துப் பேசப்படும். இந்த இடத்தில் ஒரு சிறு பகுதியான சண்டைக் காட்சியை Macro ஆகப் பார்த்தால், மேலே நாம் விவரித்தவைதான் அந்த சண்டைக் காட்சியின் Micro தருணங்கள்.
இதுபோன்ற பலநூறு Micro தருணங்களை ஒருங்கிணைத்து படத்தை / தொடரை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துவதுதான் ஷிகேகி அவாய் போன்ற ஜீனியஸ்களின் வேலை. அந்த வகையில் ஷிகேகி அவாய் அவர்களை God of Micro Things என்றே அருந்ததி ராய் அவர்களின் தலைப்புக்கு ஏற்ப அழைக்கலாம்.

200 திரைப்பட / தொடரின் எபிசோட் டைரக்ஷன், 500 அனிமே திரைப்பட புராஜெக்டை வழிநடத்தியது என்று பல விஷயங்கள் இருந்தாலும் இதுபோன்ற Micro தருணங்களை உருவாக்கி, அவற்றை ரசிகர்களைக் கொண்டாட வைத்ததுதான் ஷிகேகி அவாய் அவர்களின் தலையாய சாதனை என்று சொல்லலாம். சொல்லப்போனால், ஜப்பானிய அனிமேஷன் தொடர்கள் மற்றும் திரைப்படத் துறையில் ஷிகேகி அவாய் அவர்களின் பெயர் மறக்க / மறுக்க இயலாத ஓர் இடத்தில் ஒளிவீசிப் பறக்கவும் இதுதான் காரணம்.

ஜப்பானிய படைப்பாளிகள் பலரும் தங்களது அடையாளங்களை பொதுவில் முன்வைப்பதில்லை. அந்த வகையில் ஷிகேகி அவாய் அவர்களின் புகைப்படமோ உருவ அடையாளமோ நம்மிடம் இல்லை. 71 வயதில் இன்னமும் பல சாதனைகளை செய்யக் காத்திருந்த இவர் உடல்நலக்குறைவால் நம்மையெல்லாம் விட்டுப் பிரிந்திருந்தாலும், அவரது படைப்புகளின் மூலமாக அவர் நம்முடைய நினைவில் நிரந்தரமாக ஆட்சி செய்வார். அவரைக் கொண்டாட நமக்கு அவரது உருவ அமைப்போ, புகைப்படமோ தேவையில்லைதான். இதுபோன்ற Micro தருணங்கள் நமது நினைவில் இருக்கும்வரையில் காலம் எதையுமே நம்மிடமிருந்து எடுத்துச் செல்ல இயலாதுதான்.
Rest In Peace, Maestro.











