அய்யனார் விஸ்வநாத்
சென்ற இதழில் வெளியான கட்டுரையை எழுதும்போது ஆஸ்கர் முடிவுகள் அப்போதுதான் அறிவிக்கப்பட்டிருந்ததது. நானும் சிறந்த படப் பிரிவில் இருந்த அனைத்து படங்களையும் பார்த்தும் முடிக்கவில்லை. ஐந்து படங்களை மட்டுமேதான் பார்த்திருந்தேன். எனவேதான் இந்தக் கட்டுரையை இரண்டு பாகங்களாக எழுத முடிவெடுத்தேன். முடிவுகள் வழக்கம்போல கலவையான மனநிலையைத் தந்தன. நம்முடைய முன்முடிவுகளில் அல்லது எதிர்பார்ப்புகளில் எண்பது சதவிகிதம் நடந்துவிட்டாலே அது வெற்றிதான் என்கிற அளவில் இந்த ஆஸ்கர் விருது 2025 எனக்கு சாதகமாகத்தான் இருந்தது.
முடிவுகள் வந்த நாளின் முதல் ஆச்சரியம் Anora திரைப்படம்தான். சிறந்த நடிகை விருதோடு ஓரம் கட்டி விடுவார்கள் என நினைத்த படத்திற்கு இவர்கள் ஐந்து விருதுகள் கொடுத்திருக்கிறார்கள் என்பது திகைப்பாக இருந்தது. நிதானமாக யோசித்தபோது அதன் அசல் அமெரிக்க அரசியல் தன்மை பிடிபட்டது.
ஆஸ்கர் விருதுக்கு தேர்வு பெற்ற படங்களில் சிறந்த நடிகை என்கிற விருதுக்கு இந்தப் படம் தகுதியானதுதான். இன்னொரு வெற்றியைப் பெற்ற எடிட்டிங் பிரிவைக் குறித்து யோசிக்க வேண்டும். எது நல்ல எடிட்டிங்? தேவையான காட்சிகளை மட்டும் வைத்துக்கொண்டு படத்திற்கான ஆழத்தை சரியாகக் கடத்துவதுதான் எடிட்டிங்கின் பணி. இந்தப் படம் அதைச் செய்திருக்கிறதா? ஆமாம். சரி போகட்டும். சரியான தேர்வுதான்.
ஆனால் மற்ற மூன்று விருதுகளும் எதையோ மறைக்க கொடுக்கப்பட்டவை. குறிப்பாக சிறந்த படத்திற்கான விருது நியாயமாக Conclave படத்திற்குப் போய்ச் சேர வேண்டியது. ஆனால் Conclave திரைப்படம் கிறிஸ்துவ மதத்தின் அதிகார அடுக்கை கேள்விக்குட்படுத்துவதாலும், உயர் மட்ட அதிகாரத்தில் நிகழும் சம்பவங்களை அசலாகப் பேசுவதாலும் பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும். நான் என்ன நினைத்தேன் எனில் இவர்கள் இந்த வெளிப்படைத்தன்மையை ஆதரித்துவிட்டு பார் கிறிஸ்துவம் எவ்வளவு முற்போக்காக இருக்கிறது என மார்தட்டிக் கொள்வார்கள் என நினைத்தேன். ஆனால் ஆளும் வலது சாரி அரசும் அதன் சார்பான அதிகார அடுக்கும் வீழ்வதை அனுமதிக்கவில்லை போல. எல்லா விருதுகளும் Anoraவுக்குக் கொடுக்கப்பட்டதின் வழியாக நிஜத்தை பரவலாகக் கொண்டு செல்வதைத் தவிர்க்கவும் பாலியலை அப்பட்டமாகப் பேசும் இந்தப் படம் பயன்பட்டிருக்கிறது. நாங்களும் ரவுடிதான் என்பது போல நாங்களும் போஸ்ட் மாடர்னிஸ்ட் தாம் என அகாடமி பாவனையாகக் காட்டிக் கொண்டிருக்கிறது. நாம்தான் சமகால உலக அரசியலிலும் கலையிலும் இதுவரைக்குமான மகத்துவங்களிலேயும் ஊறியிருக்கிறோமே, எனவே எல்லா பாவனைகளும் பல்லிளிப்பதை உடனே பார்த்துவிட முடிகிறது.
உண்மையில் Anora திரைப்படத்தை ஒரு பின்நவீனத் திரைப்படமாக அடையாளப்படுத்த முடியும். படத்தின் கூறு மற்றும் வெளிப்பாட்டு மொழியின் பின்னால் அசல் பின்நவீன மனம்தான் இயங்குகிறது. ஆனால் இந்தப் பின்நவீன சித்தாந்தங்கள் மறைமுகமாக வலது சாரி அரசியலருக்கு சாதகமான பயன்களையே கொடுத்தன. நான் இப்படி ஒரு வரியில் இதை எழுதுவது அபத்தம்தான் என்றாலும் திரைப்பட ஆர்வலர்கள் ஓர் அறிதலுக்காக இந்த வாசகத்தை குறித்துக் கொள்ளுங்கள். பிறகு விரிவாக இந்த அரசியலைப் பேசுவோம்.
காலம் அனுமதித்தால் எதிர்காலத்தில் உலகத் திரையின் அசல் மாஸ்டர்களான கீஸ்லோவெஸ்கி மற்றும் தர்க்கோவெஸ்கி முன் வைத்த நிகழின் கருணையை ஹாலிவுட் Quentin Tarantino எப்படி போஸ்ட்மாடர்ன் என்கிற பெயரில் இல்லாமல் ஆக்கினார். அதன் பாதிப்புகள் என்ன என்பதைக் குறித்து சமகால இலக்கிய மற்றும் திரைப்பட அரசியல் பின்புலத்தோடு விரிவாகப் பேசலாம். இன்று கமலும் ரஜினியும் விஜயும் அஜித்தும் இன்ன பிற அனைத்து அச்சு பிச்சு நாயகர்களும் டமால் டூமீல் என பெரிய பெரிய துப்பாக்கிகளோடும் பீரங்கிகளோடும் கத்திக் கப்படாக்களோடும் திரிவதற்கான பாதையை அமைத்துக் கொடுத்தவர் நம் அன்புமிக்க பின்நவீனரான டராண்டினோதான். அவரின் சித்தாந்தங்கள் சமூகத்தில் எப்படித் தவறாகப் பயன்படுத்தப்பட்டன என்பதைக் குறித்து விரிவாக பேசுவோம் அல்லது எழுதுவோம். இதன் வழியாக பின்நவீனக் கருத்தாக்கத்தின் தோற்றம், எழுச்சி மற்றும் வீழ்ச்சியைக் குறித்தும் பேசலாம்.
இன்று தமிழ்த்திரையின் அனைத்து மசாலா நாயகர்களும் பெரிய பெரிய துப்பாக்கிகளோடு சகலரையும் சுட்டுக் கொல்லும் வியாதிக்கான விதை எந்த அரசியலில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டது என்பதை விரிவாகப் பார்க்கும்போது சுவாரஸ்யமாக இருக்கும். மீறல்களையும் கொண்டாட்டத்தையும் விரும்பிய நான் அதன் சமகால விளைவுகளை எப்படிப் பார்க்கிறேன் என எழுதுவது எனக்கே புதிய அனுபவமாகத்தான் இருக்கும். பார்ப்போம். காலம் அனுமதிக்கட்டும்.
சமகால அரசியலையும் மதத்தையும் காப்பாற்றும் மிக முக்கியமான அலகு வலது சாரி அரசியல். அமெரிக்காவிலிருந்து இந்தியா வரை அனைத்து ‘ஸோ கால்டு’ மக்களாட்சி நாடுகளிலேயும் வலதுசாரித்தனம்தான் ஆள்கிறது. வலதுசாரித்தனத்தின் அடிப்படை, மதத்தின் மற்றும் சாதியின் மீதுதான் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. கூடவே ஒழுக்கம் என்பது இந்த அரசியலுக்கு சக வலுவான துணை. ஒழுங்கீனங்கள் கடுமையாகத் தண்டிக்கப்படும் என்பதுதான் வலதுசாரி அரசாங்கத்தின் அடிப்படை விதி.
இந்தக் கடைசி வரைமுறையை மட்டும் தாண்டிய ஒரு சுயாதீனப் திரைப்படம்தான் Anora. அது இத்தனை விருதுகளைப் பெறுவது இன்னொரு வகையில் முக்கியமான நிகழ்வு. அசலான கலைஞர்கள் அதிகாரத்திடம் புகலிடம் தேடும் அசெளகர்யம் இனி இல்லை என்கிற நம்பிக்கையையும் இந்த விருதுகள் கொடுப்பதால் இந்தப் படம் பரவலாகக் கவனப்படுத்தப்படுவது நல்லதுதான் என சினிமா பைத்தியங்களான நாம் அமைதி கொள்கிறோம். தீமையின் நன்மைதான் வேறென்ன.
கூடவே விருது வழங்கும் விழாவில் சில கவனிக்கத்தக்க விஷயங்கள் நிகழ்ந்தன. சிறந்த துணை நடிகைக்கான விருதைப் பெற்ற ZOE SALDAÑA வின் உரை மிக முக்கியமானது. “நானொரு வந்தேறி. ஆனால் இங்கே நிலை பெற்று மிக முக்கியமான விருதைப் பெற்றிருக்கிறேன்” என மிகப் பெருமிதமாக அறிவித்தது சமகால அமெரிக்க அரசியல் முகத்தை அவமானப்படுத்துவது போல இருந்தது.
மெக்சிகோவின் டொமினிக்கன் ரிபப்ளிக்கைச் சேர்ந்த Zoe Saldana – Emilia Peroz படத்திலும் அதே பகுதியைச் சேர்ந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். விருது கொடுக்குமளவுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாத கதாபாத்திரம். படமும் சுமார்தான். எனினும் இந்தப் பேச்சு சமகால அமெரிக்க அரசியலுக்கு எதிரானது என்கிற வகையில் கலையின் அசல் முகமான கலகம் வெளிப்பட்டது.
மற்றது , சிறந்த ஆடை அலங்காரத்திற்காக Wicked படதிற்காக விருது பெற்ற Paul Tazewell இன் உரை.
“இந்தப் பிரிவில் முதன்முறையாக விருதுபெரும் கருப்பினத்தவர் நான்தான்” என அவர் அறிவித்தது இன்னும் விசேஷம்.
கலை மட்டும்தான் எல்லாப் பிரிவினைக் கோட்டையும், இன,மத,சாதி,உயர்ந்த, தாழ்ந்த – போன்ற அனைத்து கோராமைகளையும் சமன் செய்யும் புள்ளி என்பது என் ஆழ்ந்த நம்பிக்கை. அதை இந்த இரண்டு நிகழ்வுகளும் உறுதிபடுத்தின.
மூன்றாவது மகிழ்ச்சி, சிறந்த நடிகை விருது பெற்ற, நான் கணித்திருந்த மைக்கி மேடிசனின் பேச்சு. Anoraவின் வெற்றியை அவர் பாலியல் தொழிலாளர்களுக்கு சமர்ப்பித்தது நெகிழ்வாக இருந்தது. முக்கியமானதாகவும் பட்டது.
என்னுடைய தனிப்பட்ட தேர்வாக சிறந்த திரைப்படத்திற்கான விருது Conclave வுக்கும் சிறந்த இயக்குநருக்கான விருது The Brutalist இயக்குநரான பிரெடி கார்பேக்கும் சேர்ந்திருக்க வேண்டும்.
ஆனால் இதெல்லாம் நடந்துவிட்டால் விருதுகள் புனிதமாகிவிடுமே. எனவே இலுப்பைச் சர்க்கரையாக சில விஷயங்கள் நடந்திருப்பதற்காக அகாதமிக்கு பாராட்டுக்களைச் சொல்லியே ஆக வேண்டும்.
டெக்னிக்கல் பிரிவுகளை Dunes 2 வென்றது.Visual effects மற்றும் Sound பிரிவுகளில் இந்தப் படத்திற்கு போட்டியே இல்லை. Conclave படத்திற்கு போனால் போகிறதென்று Writing (Adapted Screenplay) பிரிவில் ஒரு விருதைக் கொடுத்திருக்கிறார்கள். ஒரிஜினல் ஸ்க்ரீன் ப்ளே அனோராவுக்கு. மிகப்பெரிய முரண்.
மற்றபடி இந்த ஆஸ்கர் பரிந்துரைப் படங்களில் என்னால் பார்க்கவே முடியாத படமாக Nickel Boys மற்றும் Dunes 2 வாக இருந்தது. இரண்டு மூன்று முறை முயன்றும் படங்களோடு ஒன்றவே முடியவில்லை. இரண்டையும் பார்க்காமல் இந்த கட்டுரையை எழுதக் கூடாது என்கிற காரணத்திற்காகவே இதை எழுத அவ்வளவு தாமதமானது. கடைசியில் ரசனை கடமையை மீறிவிட்டது. போகட்டும். சிறந்த வெளிநாட்டுப் படங்களை குறித்தான என் பார்வையை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
தொடரும் ….











